திருமணம் செய்து வைத்திருக்க மாட்டார்கள் என்ற நிச்சயம் அவளுக்கு இருந்தது.
அவன் தவறானவன் என்று சிறிதளவாவது வீட்டினருக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவர்கள் வேறு மாப்பிள்ளை பார்த்திருப்பார்கள். அதில் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அவளைப் பார்த்த பொழுதுகளில் கூட அவன் அவளிடம் வரம்பு மீறி நடக்க முயன்றதில்லை.
இத்தனைக்கும் ஏன்? அவள் அவனின் உரிமையாய் இந்த வீட்டில் இருக்கிறாள். கட்டிய கணவன் என்ற உரிமையில் கூட அவன் அவளை தவறான பார்வை பார்க்கவில்லை. ஒரு கணவன் மனைவியிடம் இப்படி இருக்கக்கூடாதுதான்.
அவன் ஏதோ தன்னை தவறாக புரிந்துகொண்டிருக்கிறான். அவன் தன்னைப் புரிந்து கொள்ளும் வரை தனக்கு துன்பம்தான் என்று அவளுக்குத்தோன்றியது.
அவன் பிடிவாதக்காரன் என்று அவனுடைய தாய்மாமா ராஜசேகர் அவளிடம் கூறியிருந்தது நினைவு வந்தது. அதுவும் இளம் வயதில் பெற்றோரை இழந்து தன்னிச்சையாக வளர்ந்தவன். சுயம்புவாக தன்னை வளர்த்துக்கொண்டான் என்று அவன் மாமா சொன்னாரே. அதனால் அவனிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும்.
உடன் பிறந்தவர்களோடு வளர்ந்திருந்தால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருந்திருக்கும். அதுவும் ராஜசேகர் அவனை தன்னோடு வைத்து வளர்ப்பதில் பிரச்சினை என்று தனியாக விட்டதாக கூறினாரே. குடும்பம் அரவணைப்பு எதையும் அறியாமல், இதுநாள்வரைக்கும் யாருக்கும் கட்டுப்படாமல் வளர்ந்தவன். அதுவும் இப்போது எதையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னபோதும் அவர்கள் பணத்திற்கு அவன் ஆசைப்படவில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிட்டான்.
இத்தனை நல்லது இருந்தும் அவளிடம் நடந்துகொள்ளும் முறைதான் முரண்பாடாக இருந்தது.
இப்போது தன் தாயின் முன்பும், தோழியின் முன்பும் எத்தனை அனுசரணை உள்ளவன் போல் நடித்தான்?
அவனிடம் சென்று நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? என்று நாயகன் பட வசனத்தைக் கேட்க வேண்டும் போல் இருந்தது.
“ஏய் என்னடி பண்றே? அங்கே அண்ணா என்னன்னா காபியே போட்டு எடுத்துட்டு வந்துட்டார். நீ இன்னும் முகம் கழுவிட்டு வராம இருக்கிறே?” என்றவாறே உள்ளே வந்தாள் சுகன்யா.
“எப்படி இருக்கே?” என்றாள் தோழியைப் பார்த்து அன்புடன்.
“ஊம். இருக்கேன். இருக்கேன். என்னைப் பார்த்ததும்தான் என்னோட ஞாபகம் வருதாக்கும். எனக்கு போன் பண்ணனும்னு கூட உனக்குத் தோணலைல்ல.” என்று அவள் முறுக்கிக்கொண்டாள்.
“அப்படி எல்லாம் இல்லை சுகன்யா. புது இடம்ல. அதான்.” என்று சமாளித்தாள்.