வந்ததில் இருந்து பார்க்கிறேன் எங்களோட கவலை தேவையில்லாததுன்னு இப்பத் தோணுது.”
“சும்மா இரு சுகன்யா? உன் கல்யாணத்துக்கு அப்புறம் நீ எப்படி இருப்பேன்னு நானும் பார்க்கத்தானே போறேன்?” என்று அவள் வாயை அடைத்தாள் வளர்மதி.
“ஊம். அது எப்ப ஆறது? நீங்க எப்ப பார்க்கிறது?” என்றாள் பெருமூச்சுடன்.
“அப்படியா சொல்றே? நான் வேணா உன் அக்கா கல்யாணத்திற்கு முந்தியே உனக்கு பார்க்க சொல்லவா?” என்று வளர்மதி கேட்க அவள் அலறினாள்.
“அய்யோ அம்மா அப்படியெல்லாம் செய்யாதீங்க. எங்கம்மாகிட்ட விளக்கமாத்தால அடி வாங்க முடியாது.”
“நீ பேசறதை பார்த்தால் அப்படி அடி வாங்கினவ மாதிரியே தெரியலையே.” என்றாள் வளர்மதி.
“அம்மா நம்ம பஞ்சாயத்தை விடுங்க. இவங்க கதைக்கு வாங்க. அண்ணா சொன்ன மாதிரி எதுவுமே நடக்கலையே.”
“நீ கொஞ்சம் சும்மா இருடி. கல்யாணம் ஆன புதுசில் பொண்ணுங்க மனசு கொஞ்சம் அலைபாயத்தான் செய்யும். புகுந்த வீட்டை நினைச்சு கலங்கும். புகுந்த வீட்டிற்கு வந்த பிறகு கணவன்கிட்டயே மனசு நிற்கும். அத்தனை வருசமும் அவன் அவள் இல்லாமல்தான் வாழ்ந்திருக்கிறான் என்ற எண்ணமே மறந்திருக்கும். நான் இல்லாமல் அவர் என்ன கஷ்டப்படறாரோ? என்றுதான் பெண்மனம் தவிக்கும். இதெல்லாம் உனக்கு கல்யாணம் நடக்கும்போதுதான் புரியும்.”
“அம்மா. நாம ரெண்டு பேரும் வீட்டிலேயே பேசிக்கிட்டு இருந்திருக்கலாம். நம்மளைப் பார்த்த உடனே என்னவோ ரொம்ப நாளா பிரிஞ்சிருக்கிற மாதிரியே கண் கலங்க நின்ன கோலம் என்ன? கணவனைப் பார்த்த உடனே அது மாறிய நோக்கம் என்ன?”
“பிதற்றாமல் கொஞ்சம் நேரம் இரு.” என்றவள் “நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை. அவ கொஞ்சம் ஓட்டை வாய்.” என்று மருமகனிடம் மன்னிப்பு கோரினாள்.
“பார்த்தாலே தெரியுது அத்தை.” என்றான் சிரிப்புடன்.
இன்னமும் நம்பாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மகாலட்சுமி.
“வாங்கம்மா நாம சாவகாசமா இன்னொரு நாள் இங்கே வரலாம். இப்போ வீட்டுக்குப் போவோம். இங்கே நாம அதிகப்படின்னு நினைக்கிறேன். நான் இத்தனை சொல்லியும் புருசனை விட்டு பார்வையை நகற்றவே இல்லை.”
அவள் கிண்டல் செய்யச் செய்ய மகாலட்சுமியின் முகம் சிவந்தது.
“இப்ப இத்தனை அமைதியா இருக்கிற நீ எதுக்குடா அப்ப அப்படி பேசினே?” அவன் தன்னைப் பார்த்துக் கேட்டதும் அவள் புரியாமல் விழித்தாள்.
அவள் என்ன அவனிடம் கேட்டாள்?