தோணாமல் போயிடுச்சு. என்னோட வசதிக்கு என்னால் காரெல்லாம் வாங்க முடியாதும்மா. உன்னால் முடிஞ்சா வா. இல்லன்னா பஸ்ஸில் ஏறிப்போ. போனாப்போகுதுன்னு என்னோட வேலை எல்லாம் விட்டுட்டு வெட்டியா உன்னை அழைச்சுக்கிட்டு அலையறேன்.”
அவன் சொன்னதும் அவள் பயந்து போனாள். அவள் மட்டும் பேருந்தில் சென்றாள் என்று தெரிந்தால் வீட்டினர் எத்தனை வருத்தப்படுவார்கள். அப்படி அவர்களுக்கு தெரிய வரும்போது தன்னுடைய திருமண வாழ்க்கைப் பற்றியும்தானே தெரிய வரும்? அது அவர்களை எத்தனை வருத்தப்படுத்தும்.
“இல்ல. நான் ஒழுங்கா உட்காரேன்.” அவள் கம்பியை தேடிப்பார்த்தாள். இருந்த கைப்பிடியையும் அவளால் சரியாக பிடிக்க முடியவில்லை. அவன் மறுபடியும் கோபப்படுவதற்கு முன்பு அவள் ஏதாவது செய்தாக வேண்டும். அப்போது அவர்களைத் தாண்டி ஒரு ஜோடி சென்றது. அதில் பின்பக்கமாய் அமர்ந்திருந்த பெண் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த ஆணின் இடையைச் சுற்றி கைப்போட்டு இறுக்கமாய் அணைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
தன்னால் அது மாதிரி செய்ய முடியாது என்று தோன்றியது. அப்படி மட்டும் நடந்தால் அவன் கோபத்தில் தன்னை வண்டியை விட்டு தள்ளிவிட்டாலும் விடுவான் என்று பயந்துபோனவள் வேறு வழியில்லாமல் அவன் தோளில் கைப்போட்டு கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
அதற்கும் அவன் ஏதோ கூறத்தான் செய்தான். அவள் கண்டுகொள்ளவில்லை.
“என்ன கனவு காண்றியா? இறங்கு.”
அதற்குள்ளா ஹோட்டல் வந்துவிட்டது என்று யோசித்தவாறே இறங்கினாள். அது ஒரு கோயிலின் வாயில்.
“அத்தை முதன் முதல்ல நாம வெளியில் கிளம்பறோம்னு கோயிலுக்குப் போயிட்டு போக சொன்னாங்க” என்றான்.
அவளுடைய அம்மாவின் பேச்சையாவது அவன் மதிக்கிறானே என்றிருந்தது அவளுக்கு.
“அம்மா பூ வாங்கிட்டுப்போம்மா. அய்யா பூ வாங்குங்கய்யா.” என்று ஒரு வயதான பெண்மணி கோயில் வாசலில் நின்றிருந்தார்.
அவள் தயக்கத்துடன் நின்றாள். அவளின் கைப்பையில் பணம் இல்லை. அவள் காரில் ஏறிச் சென்று விட்டு திரும்புபவள். அவள் கடைக்குச் சென்றாலும் எல்லாமே வங்கிக்கணக்கில் இருந்து இணையம் வழியாக எடுத்துக்கொள்ளுமளவிற்கு அவளுக்கு வசதி இருந்தது.
இப்போது என்ன செய்வாள்?
“இந்தா.” அவன் குரலில் திரும்பினாள். அவன் அந்த முதிய பெண்மணியிடம் பூ வாங்கியிருந்தான்.
பரவாயில்லை. அவனுக்கு இரக்கக்குணம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டவள் பூவை வாங்கிக்கொண்டாள்.