சமய சந்தர்ப்பம் தெரியாமல் அவள் மனதில் அவள் படித்த கதைகளில், பார்த்த திரைப்படங்களில் இதுபோன்ற தருணத்தில் என்ன நடக்கும் என்று மனதில் வந்து தொலைத்தது.
கதாநாயகன் கதாநாயகியின் தலையில் பூவைத்துவிடும் காட்சி நினைவுக்கு வந்து, அந்தக் காட்சியில் மாதவனைப் பொருத்திப் பார்க்க முடியாமல் அவளுக்கு சிரிப்பு வந்தது.
“என்ன சிரிப்பு?” என்றான் அதட்டலாய்.
‘இவன் என்ன சின்னக்குழந்தைபோல் எப்பப்பாரு என்னை அதட்டிக்கிட்டே இருக்கான்? இந்த முசுட்டு மூஞ்சிக்கு சிரிக்காமல் இருக்க முடியும். ஆனால் என்னால் முடியாது.
சுவாமி பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் பிரகாரம் சுற்றி முடித்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“தம்பி. கடைசியில் நீங்க ஜெயிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள். இவங்கதான் உங்க மனைவியா?” என்ற குரல் அருகில் கேட்கவும் இருவரும் திரும்பினர்.
எதிரே நின்று பேசியவனைக் கண்டதும் மாதவனின் முகம் மாறியது. அதைக் கண்ட மகாலட்சுமிக்கு சுவாரசியம் கூடியது. இவனையும் மிரட்ட ஆள் இருக்கிறதா?
“நீங்க சொன்னதுதான் தம்பி சரி. என்னதான் ஜாதகப்பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணாலும் சில நேரங்களில் அது நிலைக்கறதுல்ல. நீங்க சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு மனப்பொருத்தம்தான் தேவை. நீங்க உங்க காதலில் ஜெயிச்சிட்டீங்க.”
அவன் என்ன சொல்கிறான் என்று மகாலட்சுமிக்குப் புரியவில்லை.
“என்னம்மா முழிக்கிறீங்க? உங்களுக்கு என்னைத் தெரியாது. தம்பிதான் என்னைப் பார்த்திருக்காரு. நீங்கதான் உங்க ஜாதகத்தை கொடுத்து அதுக்கேத்த மாதிரி தம்பியோட ஜாதகத்தை எழுத சொல்லி ஐடியாவே கொடுத்தீங்களாமேம்மா. நான்தான் அதை எழுதிக்கொடுத்தேன். முதல்ல யோசிச்சேன்தான். ஆனால் உண்மையிலேயே உங்க ரெண்டு பேரோட ஜாதகமும் நல்லா பொருந்தியிருந்தது. எதார்த்தமா அப்படியே அமைஞ்சது தெய்வச்செயல்தான். இப்ப ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்கு. உங்க மனசும் பொருந்தியிருக்கு. அமோகமா வாழ்வீங்க. உங்க கல்யாணத்துக்கு பேப்பரில் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து உங்க வீட்டார் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க பிள்ளைங்க ஜாதகத்தை எழுத என்கிட்ட கூடிய சீக்கிரம் வரனும்.” என்றவாறு அவன் சென்றுவிட்டான்.
அவள் திகைப்பில் இருந்து மீளவில்லை.
“என்ன உட்கார்ந்துக்கிட்டே இருக்கே? எனக்கு வேலை இருக்கு. கிளம்பு.” என்றான்.
அவள் மௌனமாய் சென்று வண்டியில் ஏறினாள். அந்த ஜாதகம் எழுதியவர் சொல்லிச்சென்றதை மனதில் ஓட்டிப்பார்த்தாள்.