தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 20 - சாகம்பரி குமார்
பேருந்து விரைவாக நகரத்தின் எல்லையை தாண்டி சென்றாலும் கூட எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பெண் பயத்துடன் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் ஏதோ ஒரு சிக்கலில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட மேத்யூஸ் அவளிடம் பேச ஆரம்பித்தார்.
"பயப்படாதேம்மா… இனி உனக்கு ஒரு பிரச்சனையும் வராது. ஏன்னா நீ ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்டேன்னு நம்பு." என்றார்.
அவருடைய குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்த அவள்,
" என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.
" நீ எதையோ அல்லது யாரையோ பார்த்து பயந்து கொண்டிருக்கிறாய் என்பது புரிகிறது. ஒருவேளை உன்னை யாராவது துரத்திக் கொண்டு வரலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் உன் அருகில் வர முடியாது."
"அவர்கள் இந்த பஸ்ஸை பின் தொடர்ந்து வரலாம்…" அவள் தளர்வுற்ற குரலில் இயம்பினாள்.
"நான் அதை சொல்லவில்லை…."
மேத்யூஸ் உட்குறிப்பாக எதையோ சொல்வதை உணர்ந்த ரேச்சல் படுத்திருந்த நிலையில் இருந்து எழுந்து அமர்ந்தாள். அவளால் எதிரில் இருந்த பெண்ணை நன்றாக பார்க்க முடிந்தது… ஒருவேளை அந்த பெண்தானா… என்ற சந்தேகம் எழுந்தது. தந்தையை பார்த்தாள். அவர்…
"நான் மேத்யூஸ். நாகர்கோவிலில் இருக்கிறேன். இது என்னுடைய மகள் ரேச்சல். ம்… உன்னுடைய பேர் என்னம்மா?"
"மீரா…" சற்றும் தயக்கமில்லாமல் சொன்னாள்.
"உன் பெற்றோர் யார்…?"
அவள் அமைதியாக இருப்பதை பார்க்கவும்…
"தப்பா எடுத்துக்காதேம்மா… எனக்கு தெரிந்தவரின் சாயல் உன்னிடம் தெரிகிறது… அதனால்தான் கேட்டேன்… என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் சொல்ல வேண்டாம்…"
"இல்லை… இல்லை… தெரிந்தவர்களிடம் வைத்த நம்பிக்கை பொய்யாகி விட்டது. இனி நம்பிக்கை என்ற வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் உங்களுடைய முகத்தில் உண்மை தெரிவதால் சொல்கிறேன்…"
"என் அப்பாவின் பெயர்… தங்க…" என்றவள் நிறுத்தி… "குணாளன்" என்றாள்.
"தங்ககுணாளனா… புது பேராக இருக்கிறதே…" என்று ரேச்சல் சிரித்தாள். அவள் பக்கம் திரும்பிய மீரா…
"ஆவ்… அது அப்படி இல்லை… டாக்டர் குணாளன்தான் எங்கப்பா... தங்கதுரை என்னை வளர்த்தவர்… "