ஃபெலிக்ஸின் புது பெயர் குணாளனா? மேத்யூஸ் யோசித்தார்.
"வளர்ப்பு தந்தையா… உன்னுடைய பெற்றோர் என்னவானார்கள்" ரேச்சல் விசாரித்தாள்.
"அவர்கள் … என்னுடைய சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க… ப்ச்… ரெண்டு பேரும் டாக்டர்ஸாம். "
அதை கேட்டு மேத்யூஸ் அதிர்ந்தார். படக்கென்று விழியில் நீர் திரையிட்டது… இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதை புரிந்து கொண்ட ரேச்சல் அவருடைய கையை பற்றி ஆறுதல் படுத்தினாள்…
அவர் தன்னை சமாளித்து கொள்ள தடுமாறினார். அப்போது ரேச்சல் மருந்து சாப்பிடுவதற்காக நினைவூட்ட வைத்த அலாரம் அலைபேசியில் ஒலித்தது.
அதை எடுத்து அலாரத்தை நிறுத்தியவர், தனக்கு வந்த அழைப்பை பார்ப்பதுபோல பாவனை செய்தார்.
ஃபெலி… நீ உயிருடன் இல்லையா…? இதை தெரிந்து கொள்ள எனக்கு இப்போதுதான் சமயம் வாய்த்ததா?... என்னுடைய மணவாழ்க்கைதான் முடிந்து போனது… நீயாவது நன்றாக இருப்பாய் என்று நினைத்தேன். காதலித்து மணந்த நீயும் வாழவில்லையா?...
அவருக்கு நிதானிக்க சில நொடிகள் தேவைபட்டன. அதற்குள்,
"என்னாச்சு… அங்கிள்?. குணாளன்னு யாரையாவது உங்களுக்கு தெரியுமா?"
"இல்லை… ஆனால்…" என்றவர், அவரை எப்படி அவளிடம் அறிமுகம் செய்து கொள்வது என்று யோசித்தார்.
"அதுசரி… உனக்கு என்ன பிரச்சினை…? யாராவது உன்னை தொந்தரவு செய்கிறார்களா…?." அவர் கேட்கவும் வெறுப்பாக பதில் சொன்னாள்.
"ஆமாம்… ஒரு நாய் ரொம்ப நாளா துரத்திட்டே இருக்கு…"
"நாலு காலா… ரெண்டு காலா…" ரேச்சல் கேட்டாள்.
"ஆங்… ரெண்டு கால்தான்... மனுசங்களை கொல்றது குற்றம்னு இந்த நாட்டுல சொல்றாங்க… இல்லேன்னா.."
அவள் சொன்னதை கேட்ட ரேச்சல்,
"டாடி, அவங்க ரொம்ப டென்சனா இருக்காங்க.." என்றாள்.
"கொலை செய்ற அளவிற்கு கோபம் வர அந்த ரெண்டு கால் பிராணி என்ன செஞ்சுது…"
"அழகான குடும்பத்தை அழிச்சிட்டது… உங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிக்குமா அங்கிள்." மேத்யூஸிடம் கேட்டாள்.
"ஆமாம்… ரொம்ப பிடிக்கும். அவளுக்கு ஏதாவது என்றால் துடிச்சு போயிடுவேன்"