இல்லை."
"அங்கிள்… அப்பாம்மா இறந்ததுகூட தெரியாதா"
"ஆமாம்… அவன் பெயரை குணாளன் என்று மாற்றிக் கொண்டதால் என்னால் தேட முடியவில்லை"
"டாடி...நீங்கள் சின்னம்மாவின் பெயரை வைத்து தேடி இருக்கலாம்."ரேச்சல் சொன்னாள்.
"அதையும் செய்தேன்.. வசுமதின்னு யாரும் மருத்துவராக இல்லை"
"அங்கிள்… அப்பா அம்மாவுடைய வீட்டினருக்காக தன்னுடைய பெயரை மாத்திகிட்டதுபோல அம்மா விஜிலானு மாத்திட்டு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துட்டாங்களாம்."
"என்ன குழப்பம் இது..? ரெண்டு குடும்பத்தையும் சரி செய்ய நினைச்சு குழம்பி இருக்காங்க" ரேச்சல் அலுத்துக் கொண்டாள்.
"இல்லை ரேச்சல் அந்த காலத்துல மதம்மாறி கல்யாணம் செய்துக்கறது ரொம்ப கஷ்டம். சட்டப்படி கல்யாணத்தை பதிவு செய்ய வசுமதி மதம்மாறி இருக்கலாம்… ஏதோ குழப்பம் வந்திருக்கிறது" மேத்யுஸ் சொன்னார்.
"சரி மீரா. நீ கவலைபடாதே...நாங்க இருக்கோம். உன்னை உன் கணவர் குழந்தையுடன் சேர்த்து வைப்பேன். நீ சந்தோஷமாக வாழப் போகிறாய். அதுசரி… நீ ஏதாவது சாப்பிட்டியா?. இப்போதைக்கு கொஞ்சம் பிஸ்கட்ஸ் சாப்பிடு. திருநெல்வேலியில பஸ் நிற்கவும் ஏதாவது வாங்கித் தரேன்"
"டாடி… என் பக்கத்துல மீரா இருக்கட்டும்.
நீங்க படுத்து தூங்குங்க. நான் உட்கார்ந்துக்கறேன். " ரேச்சல் நகர்ந்து மீராவை அருகில் அழைத்துக் கொண்டாள்.
மேத்யூஸிற்கும் ஓய்வு தேவைபட்டது… ஃபெலிக்ஸ் இறந்த செய்தி அவரை மிகவும் பாதித்தது. கண்களை மூடி பழைய நினைவுகளில் ஆழ்ந்தவர் உறங்கி போனார்.
அவர் உறங்கும்போது மீராவும் ரேச்சலும் உரையாடிக் கொண்டு இருந்தனர். பெண்களின் இயல்பாக… ரேச்சலுக்கு மீரா அணிந்திருந்த சிவப்பு நிற ரூபி வளையல் பிடித்திருந்தது. அதனை மீராவின் கையை பற்றி திருப்பி பார்த்தாள்.
அவளுடைய ஆர்வம் புரிந்து மீரா அந்த வளையலை கழட்டி ரேச்சலின் கையில் அணிவித்தாள்.
"அழகா இருக்குல்ல.." என்றாள்.
"ஆமா… டாடிகிட்ட இதே மாதிரி வாங்க சொல்லி போட்டுக்கறேன்." என்றபடி வளையலை கழட்ட போனாள்…
"எதுக்கு வேற வாங்கணும். இதையே போட்டுக்கோ. கழட்டாதே.."