தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 21 - சாகம்பரி குமார்
மதியத்திற்கு மேல் கிளம்பி ஜெமி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான இடம் அதுதான். அங்கு தான் அவன் மீராவின் முகவரியை தேடியாக வேண்டும். ஏனெனில் அவனுக்கு வேறு எந்த தொடர்பும் அந்த விபத்துடன் இல்லை. இது பற்றிய விவரமும் யாரிடமும் அவனால் கேட்க முடியாது. எனவே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அந்த விபத்தில் இறந்தவர்களின் பட்டியலை பெற்றால் அதில் மீராவுடைய முகவரி இருக்கும் என்று நினைத்தான். அதற்காகத்தான் அந்த விபத்தை விசாரித்த காவல் நிலையத்திற்கு சென்றான்.
அமெரிக்க நடைமுறைப்படி இதுபோன்ற ரிப்போர்ட்கள் தேவை எனில் ஆன்லைனில் பணம் கட்டி அப்ளை செய்தால் போதும்… இங்கே என்ன நடைமுறை என்று தெரியவில்லை. நேராக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சென்றான் அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு விபத்து பற்றி அவர்கள் தயாரித்த ரிப்போர்ட்டின் காப்பி வேண்டும் என்று கேட்டான்.
கலைந்த முடியும்… சாயம் போன காட்டன் சட்டையும்… ரிங்கிள் ஃப்ரி பேன்ட்டுமாக நின்ற அவனை ஏற இறங்க பார்த்த ஆய்வாளர்…
"எந்த விபத்து?" என்றார்.
"கோவில்பட்டி அருகே நடந்தது சார்… பஸ் ஆக்ஸிடென்ட்…"
"எப்போது நடந்தது?"
அவன் தேதியை சொன்னான்… அவனை முறைத்து பார்த்தவர்…
"அது நடந்து ஏழு மாதங்கள் முடிந்து விட்டன. கோர்ட்டுல ஆதாரம் எல்லாம் தந்து… இன்சூரன்ஸ் க்ளைம் எல்லாம் பண்ணி தந்தாச்சு. இப்ப முடியாது"
"சார்… கொஞ்சம் அவசரமாக வேண்டும்."
"விபத்து நடந்து எவ்வளவு நாட்கள் ஆயிட்டு… சார் இப்பதான் தூங்கி எந்திரிச்சு மெதுவாக வர்றீங்க… இதுல அவசரம் வேற. போயிட்டு அடுத்த வாரம் வாங்க."
"ஏதாவது ஃபார்மாலிட்டீஸ் இருந்தாலும் செய்றேன்…"
அவன் முடிக்கும் முன்…
"எந்திரிச்சு போன்னு சொன்னா கேட்க மாட்டியா? யோவ் ஏட்டு... இந்த ஆளை வெளியே அனுப்பு. நேரம் காலம் தெரியாம தொல்லை பண்ணிட்டு…" கடுமையாக குரல் உயர்த்தினர். அந்த ஏட்டு அவன் அருகே வந்து...
"சார் எந்திரிச்சு வாங்க. உயர் அதிகாரி வர்ற நேரம்" என்று அவனை எழுப்பி அழைத்து சென்றார்.
"சார் உங்களுக்கு என்ன வேண்டும்… ஏன் அவரை டென்சன் பண்றீங்க"