ஷீலா சொன்னார்.
ஐயோ… ஆன்ட்டி தப்பாக நினைக்கறீங்க… மீராவிற்கு கலம்காரி தெரியும்போல...என்று மனதிற்குள் நினைத்த ஜெமி,
"ரேச்சல் உனக்கு இதெல்லாம் நினைவுக்கு வருகிறதா... ஹாஸ்பிட்டல்ல கண் முழிச்சப்போ நான் யார்னு கேட்டியாம்… ஆன்ட்டியை தெரியலைனு சொல்லி இருக்க… என்னைகூட மறந்துட்ட. ஒவ்வொன்னா ஷீலா ஆன்ட்டி சொல்லவும் ஃபாலோ பண்ணிட்ட. ஆனால் இதெல்லாம் யாரும் சொல்லாமயே ஞாபகம் இருக்கே."
"அதுதான் எனக்கும் புரியலை. கிச்சன்குள்ள போனதும் சமைக்க தெரியுது… இந்த பெயின்டிங் வேலை ப்ரஸை கையில் எடுக்கவும் மடமடனு வரைய வருது… எனக்கு கார், ஸ்கூட்டி ஓட்ட தெரியுது… இதெல்லாம் தானா வருது."
"ரேச்சல்… உண்மையை சொல்லணும்னால் உனக்கு இதெல்லாமா தெரியாது. சைக்கிள் ஓட்டறப்பவே விழுந்து அடிபட்டுக்குவ… உனக்கு காலில் எலும்பு முறிவு வந்ததுக்கு காரணமே சென்னைல ஸ்கூட்டி ஓட்ட கத்துகிட்டதுதான்."
"ஓ… அம்னீசியா வந்தால் தெரியாத வேலையெல்லாம் செய்வாங்களா… ப்ச்… எனக்கே ரேச்சல்னு சொல்றப்ப யாரையோ பத்தி பேசுற மாதிரிதான் இருக்கு… ஆனால் ஷீலாம்மாவை ரொம்ப தெரிஞ்சதுபோல இருக்கே… இல்யூஷனாக இருக்குமோ?"
"ஜெமி… அவளை குழப்பாதே… நேரத்துக்கு தூங்க போங்க. குட் நைட்" என்று சொல்லி விட்டு ஷீலா தன் அறைக்கு சென்று விட்டார்.
"இது மாதிரி வேற ஏதாவது இல்யூஷன்… நினைவுக்கு வருதா?'
"அன்னைக்கு சிட்டிக்கு போனோமே… அது பழக்கமான இடமாக இருந்தது. ரெஸ்டாரென்ட்… ஷாப்பிங் மால்… எல்லாமே நானே போயிட்டேன்."
"ஓ…" ஜெமி யோசித்தான். மீராவின் வீடு சிட்டியில் இருக்குமோ… அவளுக்கு மிகவும் பழக்கமான இடமாக இருக்குமோ?. அது சரி… ஷீலா ஆன்ட்டியை ரொம்ப தெரிஞ்சதுபோல இருக்குங்கறாளே…
சில உறவுகளுக்காக நம் உள்மனம் ஏங்கிக் கொண்டிருக்கும்… அந்த உறவிற்கு மாய உருவம் தந்து நமக்கு பிடித்ததுபோல கற்பனையில் அதனுடன் வாழ்ந்து பார்ப்போம். அப்படி அன்னையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த மீரா ஸ்கெட்ச் செய்திருந்த அம்மா கேரக்டருக்கு ஷீலா ஆன்ட்டி பொருந்தி இருக்கலாம்…
அப்படித்தான் இருக்கும். அவனுடைய அலுவலக தோழி நஸீமாகூட 'எனக்கு ஒரு சகோதரன் இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ… அது போலவே இருக்கிறாய்' என்று சொல்லி அவனை அண்ணா என்றுதான் அழைப்பாள்.