பள்ளம் ஆயிற்றே… தடுத்தாக வேண்டுமே… அவன் மனுவை தூக்கிக் கொண்டு விரைந்தான்.
தூரம் குறைய குறைய அவனது பார்வை தெளிவாகியது… பின்புறமிருந்து பார்க்கும்போது…
அது மீராவா… அவனுடைய மனம் கவர்ந்த ரோஜா வண்ண பட்டு புடவை கட்டி இருக்கிறாளே.. அவள் ஏன் அங்கு நிற்கிறாள்… அவளை எவ்வளவு நாட்களாக தேடிக் கொண்டு இருக்கிறேன் என்பது தெரியாதா… முணுக்கென்று வந்த கோபத்துடன் அவளை நெருங்கினான். நீண்ட தேடல் முடிவிற்கு வந்த நிம்மதி அடைந்தான்.
மீரா…! என்று குரல் கமற அவளை கட்டிப் பிடித்து அணைக்கும் நோக்குடன் நெருங்கினான். அவனுடைய குரல் கேட்டு திடுக்கிட்டவள் கால் தவறி சரிவில் நழுவினாள்... !
'ஐயோ' என்று அலறியவன் அவளை கை பிடிக்கும் நோக்கத்துடன் பாய்ந்தான்… அவள் அதல பாதள பள்ளத்தின் விளிம்பில் தொங்க… சத்யன் தரையில் படுத்து அவளுடைய கைகளை தன்னுடைய இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு இருந்தான்.
"பயப்படாதே.. நான் கை விட மாட்டேன்" என்று சொன்னவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
ஆவ்… இது மீரா இல்லை… ரேச்சல்…!
அவனுடைய ஏமாற்றம் இயலாமையானது. 'யார் இவள்… மீராவைபோல் முகம் காட்டி ஏமாற்றுகிறாளே…?'
அவன் தளர்ந்துபோன அந்த நொடியில்தான் கவனித்தான். மனுகுட்டி அவன் கைபிடியில் இருந்து விலகி தத்து நடை பயின்று மலை சரிவின் விளிம்பிற்கு சென்று கொண்டு இருந்தாள்…
மனுவை தடுத்து பிடிக்க வேண்டும் எனில் ரேச்சலிடம் இருந்து கையை விடுவிக்க வேண்டும். மனு ஆபத்தின் விளிம்பை தொடும் முன் ரேச்சலை மீட்டாக வேண்டும். அப்போதுதான் மனுவை பிடிக்க முடியும்.. அவன் ரேச்சலை உதறும் எண்ணமின்றி அவளை தூக்க முயற்சித்தான். மெல்ல அவள் மேலே வர ஆரம்பித்தாள்.
இன்னும் ஒரு அடி தூக்கினால் போதும்… அதற்குள் மனு விளிம்பில் கால் வைக்க… ஒரு நொடி சத்யனின் ஐம்புலன்களும் செயலற்று போயின. ரேச்சலா… மனுவா…?
அந்த நொடி பொழுது தாமதத்தில மனு அடுத்த அடி எடுக்க வைக்க…
'மனு குட்டி' என்று அவன் துள்ளி எழ..
தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி லோ வோல்டேஜில் 'க்ரிக்… க்ரிக்..' என்று சப்தம் எழுப்பிக் கொண்டு இருந்தது..
மை காட்… அது கனவுதான்… நின்று போயிருந்த மூச்சு மீண்டும் சுழற்சியை ஆரம்பித்தது. வியர்த்து போயிருந்த முகத்தை துடைத்தபடி எழுந்தான்.