என்னவொரு மோசமான கனவு… கதவை திறந்து வெளியே சென்றான். அம்மாவின் அறை பக்கம் நடந்தான். மனு அம்மாவிடம்தான் இருக்கிறாள். அறை வாசலில் நின்று பார்த்தான். மனு ஒரு பூனை குட்டி போல குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய பழக்கம்… எப்படி படுக்க வைத்தாலும் குப்புற மாறிக் கொள்வாள்…
மனுவை பார்த்த நிம்மதியில் அறைக்கு வந்தான்… அந்த கனவு அவனுக்கு ஏதோ எச்சரிக்கை விடுக்கிறதோ…
அவனுடைய முதல் சந்தேகம் அவன் மனம் ரேச்சலை மீராவிற்கு மாற்றாக நினைக்க ஆரம்பித்து விட்டதோ… அவ்வாறெனில் மீரா உயிருடன் இல்லை என்று ஆழ் மனம் நினைக்கிறதா…
இரண்டாவது… அவன் ரேச்சலின் கையை கடைசிவரை விடவில்லை… மனுவைவிட ரேச்சல் முக்கியமாகி விட்டாளா…
அவனுக்கு அவமானமாக இருந்தது… சே… எப்படி அவன் அவ்வாறு நடந்து கொள்வான்… மனு அவனுடைய காதலின் பரிசல்லவா… மீராவின் சுவாசம் அவளிடம் இருக்கிறதல்லவா.. அவளை இரண்டாம் இடத்தில் வைக்க முடியுமா..
மீராவின் படத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு பலவாறாக புலம்பி மன்னிப்பு கேட்டான்… முடிவில் சில தீர்மானங்களை எடுத்தான்.
இனி அவன் வாழ்க்கை மனுகுட்டிக்காக மட்டுமே இருக்கும். ரேச்சல் என்கிற ஒரு பெண்ணிடமிருந்து நூறு சதவிகிதம் விலகியே இருப்பான். சீக்கிரமாக அவனுடைய வீட்டிற்கு திரும்ப வேண்டும்.
மீராவின் நினைவுடன் வாழ்வது பிரச்சினையில்லை… ரேச்சல் கனவில் வரும் அளவிற்கு வாழ்வதுதான் மோசமான நிலை… அவனை அவனாலேயே மன்னித்துக் கொள்ள முடியாது… மீரா…. மீரா என்று அவன் உருகுவது உண்மையானால்… அவனுடைய காதல் சத்தியமானது என்றால் அவன் மனம் அலைபாயக் கூடாது… அவனுடைய மீரா அவனிடம் வந்து சேர்வாள்… அல்லது அவன் அவளிடம் சென்று சேர்வான்…!
அவனுக்கும் மீராவிற்குமான வாழ்க்கையை கற்பனை செய்து கொண்டு பின்னிரவில் உறங்கி போனான்.
மறுநாள் காலை தாத்தாவிடம் பேசினான். விரைவில் வீடு திரும்ப திட்டமிட்டிருப்பதை சொன்னான். மறுத்த தாத்தாவை தடுத்து,
"என்னுடைய மனைவியை நினைத்துக் கொண்டு வாழ்வது தவறில்லை தாத்தா. அந்த நினைவுகளையே உரமாக்கி மனுவிற்கான வாழ்க்கையை நல்லபடியாக அமைத்து தருவேன்.