புரிந்தது. தங்கதுரையை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விட்டதாக செய்தி வரவும் அவனும் ரஞ்சனும் கேசவை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். அங்கு தங்கதுரையை கடுமையாக கேசவ் விசாரித்தான்.
"வயதானவர் என்று பார்க்கிறோம். அதனாலதான் அமைதியா கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கோம். இது வேற ஆளா இருந்தா இந்நேரம் அடி விழுந்திருக்கும். உண்மைய சொல்லுங்க. அன்னைக்கு என்ன நடந்தது?"
"ஏற்கனவே நான் சொன்னதுதான் சார். புத்தி சுவாதீனமில்லாத மீரா அன்னைக்கு வீட்டை விட்டு ஓடிப் போயிட்டா. அவளை துரத்திக் கொண்டே போனேன். அங்க போனாதான் தெரியுது… பஸ்ல ஏறிட்.டா. அந்த பஸ் நாகர்கோயில் போற பஸ். அது கிளம்பிடுச்சு. எனவே அவளை பிடிக்க முடியல. நான் உடனே பரத்து கிட்ட போன் பண்ணி சொல்லி கார் எடுத்துட்டு வர சொன்னேன். காரில் தொடர்ந்து போணோம். திருநெல்வேலியில் அவளை பிடித்து விடலாம் என்று நினைத்து போனோம். அதுக்குள்ளாற இந்த விபத்து நடந்து விட்டது அவ்வளவுதான். இதுல என்னை எதுக்கு சந்தேகப்படறீங்க… என் பொண்ணு இருந்தால் இப்படி நடக்க விடுவாளா?"
"அவங்கதான் இல்லையே… இல்லாம பண்ணீட்டீங்களே.. அந்த பரத்து எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன்தான் மீராவை துரத்திட்டு போயிருக்கான். எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான். அதனாலதான் உங்களை பிடிக்க வேண்டியதாச்சு… நீங்களும்தானே அக்யூஸ்டு…"
பரத் அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டான் என்று சொல்லவும் அவருடைய முகத்தில் இருளடித்ததை கேசவ் கவனித்தார்.
"நான் ஒரு தப்பும் பண்ணலிங்க" என்று தங்கதுரை புலம்பவும்… ஏதோ விஷயம் இருக்கு என்று தீர்மானித்து தூண்டில் போட்டார்.
"ஹாஸ்பிட்டல்ல நடந்ததை சொல்லி விட்டான்… அவ்வாறு செய்வது தப்பு இல்லையா…?"
"ஐயோ…. அவன் அதையும் சொல்லிட்டானா…"
தன்னை மறந்து அவர் கத்தி விட்டார். ஆஹாங்… ஏதோ விஷயம் இருக்கு போல… என்று சுதாரித்த கேசவ்…
"பணத்தாசை மனுசனை எவ்வளவு கேவலமான நிலைக்கு கொண்டு செல்லும்னு இப்பதான் தெரியுது.." என்றான்.
"நான் ஒண்ணும் செய்யலை. அந்த ஆள்தான் பணம் தரேன்னு சொன்னான். அவனோட பொண்ணு உயிர் பிழைக்க நான் உதவிதான் செஞ்சேன்."
"பணத்தை வாங்கி கிட்டா…!"