ஓ... அப்போ வந்ததும் வராததுமா எங்க வீட்டு பெண் சிங்கம் எல்லாத்தையும் சொல்லி தூதுக்கு உன்னை அனுப்பி இருக்கிறார்களே.. உங்க பொறியில் சிக்குகிற எலி நான் இல்லை என்று சொல்லி விட்டு கோபமாக திரும்பி கொண்டாள் சந்தியா.
சந்தியா சொன்னது போல அவளது அம்மா ஜனனி வந்ததுமே சந்தியா திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறாள். நீயாவது அவளிடம் பேசி பார் என்று ஜனனியிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார். தானாக சந்தியா அதே பேச்சை எடுக்க சந்தியா மனதை அறிந்து கொள்ள ஜனனி பேச்சை தொடங்கினாள். ஆனால் சந்தியா கோபப்பட்டு கொள்ள அதைப் பற்றி பேசுவதற்கான சமயம் இது இல்லை என்று அத்துடன் அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டு தள்ளி அமர்ந்து கொண்ட சந்தியாவின் அருகில் வந்து அமர்ந்தாள் ஜனனி.
சந்து...ஆ ஊனா இப்படி கோபம் கொள்ளக் கூடாது. அதுவும் உன் தோழியிடம் என்று சந்தியாவைப் போலவே அவளை அணைத்துக் கொண்டு அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டாள் ஜனனி.
அப்படியா... அப்படின்னா இனிமே நான் உன்னிடம் கோபப்பட மாட்டேன். அது போல இப்பொழுது நீயும் கோபப்படாமல் நான் கேட்பதற்கு பதில் சொல் என்றவள் சென்னை போய் ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டதே.. ஜனா அண்ணாவை கண்டு பிடித்து விட்டாயா என்றாள்.
ஏய்... இதென்ன கேள்வி... நான் என்ன அவனை தேடியா சென்னை சென்றேன் என்று கோபமாக கேட்டாள் ஜனனி.
தோழிகிட்ட கோபம் வரக்கூடாது என்று சொல்லிக் கொண்டே ஜனனியின் சிவந்த மூக்கைப் பிடித்து ஆட்டினாள் சந்தியா.
வலிக்குதுடி என்றவாறே அங்கிருந்துஎழுந்து செல்ல முயற்சி செய்த அவளை பிடித்து தன் அருகே அமர்த்திக் கொண்டு நான் உன்கிட்ட பேச நினைப்பதெல்லாம் பேசி முடிக்கும் வரை இப்படி உட்காரு என்றவள் அவளை பிடித்து தன் அருகே வைத்து கொண்டு ஜனா அண்ணாவை பார்த்து விட்டாய் போலயே ஜனனி என்று அவள் நெற்றி சுருக்கத்தை தன் விரலால் தடவினாள் சந்தியா.
தான் கனவில் பார்த்தபோது அவனும் இதையே தானே செய்தான் என்று யோசித்தவள் இது என்ன விளையாட்டு சந்தியா என்று அவள் கையை பட்டென்று உதறிவிட்டு எழுந்து நின்று பொறிந்து தள்ளினாள் ஜனனி.
ஜனனியின் இந்த திடீர் செய்கையின் காரணம் தெரியாமல் திகைத்த சந்தியா உண்மை என்னவென்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.