தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 13 - முகில் தினகரன்
அதே நேரம்,
பூட்டிக் கிடந்த முரளியின் வீட்டு முன் நின்றிருந்த தனசேகர், அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டிருந்தான். “எத்தனை நாளா வீடு பூட்டியிருக்கு?...அவங்க எங்கே போனாங்க?”
வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த ஒரு மனிதர் அவனிடம் வந்து,
“த பாருங்க தம்பி!...அவங்க எங்க போறாங்க?...எதுக்குப் போறங்க?ன்னு எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது!...ஆனா...ரெண்டு மூணு நாளாவே வீட்டிலிருந்த சாமான் செட்டுக்களை ஒவ்வொண்ணா வித்திட்டிருந்தாங்க!...நேத்திக்கு காலைலயிருந்து வீடு பூட்டிக் கிடக்கு!...எனக்கென்னமோ...ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டே போயிட்டாங்க!ன்னு தோணுது” என்று தோள் துண்டை உதறிக் கொண்டே சொல்ல,
“ஊரை விட்டுப் போறதுன்னா...நிச்சயம் ரயில்லதான் போயிருக்கணும்!” நேரே ரயில்வே ஸ்டேஷன் ஓடினான்.
தனது அறையில், தனது இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.
யாரோ அறைக்குள் வருவதை, உணர்வின் உசுப்பலில் புரிந்து கொண்டு கண் விழித்தார்.
“அட....தனசேகர்!...என்ன தம்பி....இன்னிக்கு உனக்குக் கல்யாணமாச்சே?...நீ எப்படி இந்த நேரத்துல...இங்கே?” ஆச்சரியமாய்க் கேட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.
“முரளி...குடும்பத்தோட ரயிலேறிப் போனானா?” திரும்பி ரயில் தண்டவாளத்தைப் பார்த்தவாறே கேட்டான்.
“ஆமாம் தம்பி”
“எந்த ஊருக்குப் போனாங்க?”
“தெரியலையே தம்பி...ராத்திரி பத்தரை ரயிலுக்கு...முரளி...அவங்க அம்மா...தங்கச்சி...மூணு பேரும் வந்தாங்க!..கைல பெரிய பெரிய பைகளைத் தூக்கிட்டு வந்தாங்க!... “எங்க போறீங்க?”ன்னு கேட்டேன்... “திருச்சி”ன்னு சொன்னாங்க!...அப்புறம் ரயில் வந்ததும் கிளம்பிப் போயிட்டாங்க!” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.
“திருச்சிக்கா?...இல்லை....அதுக்கு வாய்ப்பேயில்லை!...ஏன்னா...அவங்களுக்கு திருச்சில யாருமே கிடையாது!....வேற எங்கியோ போறாங்க!..உங்க கிட்ட உண்மையைச் சொன்னா...நீங்க நான் வந்து கேட்டா சொல்லிடுவீங்க!ன்னு பொய் சொல்லிட்டுப் போயிருக்காங்க!”
“ஏன்?...ஏன் முரளி இப்படி பண்ணினான்?...எது அவனை இப்படிப் பண்ண வெச்சுது?”
குழம்பிய மனதுடன், ஸ்டேஷனிலிருந்து பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அந்த யோசனை வர, முரளி வேலை பார்க்கும் சூடாமணி ரைஸ் மில் நோக்கிச் சென்றான்.