”அப்பா” என உரக்க அழைக்க அதற்கு மேல் அவளிடம் கெஞ்சுவது வீண் என புரிந்துக் கொண்டு
”சரிதான் போடி உன்னால ஆனதை பார்த்துக்க” என சொல்லிவிட்டு கணக்குபிள்ளையை கையோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றான், அவன் சென்றபின் அனைவரும் வந்து சேர காவேரி கொம்பன் சென்றுவிட்ட விவரத்தைச் சொல்லவும் அவர்களுக்கு கோபம் கோபமாக வந்தது. அவர்கள் கொம்பனை அழைத்துவர செல்ல கூடவே காவேரியும் புறப்பட்டாள்.
அசுர வேகத்தில் பைக்கில் தனது இடத்திற்கு சென்ற கொம்பன் அங்கிருந்த நாய்களின் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்டான் பாவம் அவைகள் அவன் இல்லாத காரணத்தால் தண்ணீர் கூட அருந்தாமல் சோர்வாக படுத்திருந்தன அதைக்கண்டு அவனது கண்கள் கலங்கின. கணக்குப்பிள்ளையோ
”கொம்பா இதுகளோட பாசத்தை பாரேன், நீயில்லாம அதுங்க எதுவுமே சாப்பிடலை போல எப்படி சோர்வா படுத்திருக்கு பாருப்பா பார்க்கவே கஷ்டமா இருக்கு நண்பா” என சொல்ல அதற்கு கொம்பனோ
”எனக்கும்தான் நடந்த பிரச்சனையில நான் மாட்டி முழிச்சேன், அதுல நாய்களை பத்தின நினைப்பே வரலையே எல்லாம் என்னோட தப்புதான்”
”உன் மேல எந்த தப்பும் இல்லை எல்லாம் உன் முறைபொண்ணு மேலதான் தப்பே”
”அவளை தப்பு சொன்னா ஒருத்தரும் ஒத்துக்க மாட்டாங்க“
”அது தெரிஞ்ச விசயம்தானே சரி வந்துட்டோம் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பலாம் இந்நேரம் உன் முறைபொண்ணு பெரிய பஞ்சாயத்தையே வைச்சிருப்பா”
”அவள் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை வாவா இதுகளுக்கு சாப்பாடு தரலாம்”