”அதைதான் நான் ஏற்கனவே கேட்டுட்டேனே அவள்தான் என்னை மன்னிக்கலையே”
”ஊர்மக்கள் முன்னாடி காவேரிக்கு நடந்த அவமானத்துக்கு நீதான் காரணம்னு சொல்லி மன்னிப்பு கேட்கனும்” என சொல்ல கொம்பனின் முகம் வெளுத்துவிட்டது ஏதும் பேசாமல் அமைதியாகிப் போனான்.
சண்முகமோ பதட்டமாக கணக்குபிள்ளையைப் பார்க்க அவனோ
”ஒண்ணுமில்லை பொறுங்க” என மெதுவாக சொல்லிவிட்டு கொம்பனிடம்
”கொம்பா இதுதான் ஒரே வழி, எந்த ஊர்க்காரங்களால காவேரியோட கல்யாணம் நின்னு அவமானம் நடந்ததோ அதே ஊர்க்காரங்க முன்னாடிதான் அவளை விட்டு போன மானத்தை மீட்க முடியும், இதை விட்டா வேற வழியில்லை கொம்பா நல்லா யோசி, விட்டுக்கொடுத்து போறதால நீ கெட்டுப் போக மாட்ட, இருந்தாலும் உன் மேல தப்பில்லை எதுக்கு ஊர்முன்னாடி மன்னிப்பு கேட்கனும்னு நினைக்கறியா, உன்னை காரணமா வைச்சிதானே காவேரி வாழ்க்கையை சீரழிச்சாங்க, அதனால அவங்க முன்னாடி நீ மன்னிப்பு கேட்டா காவேரி மனசு மாறி உன்னை ஏத்துக்குவா இதை தவிர வேற வழியில்லை கொம்பா நல்லா யோசி” என கணக்குபிள்ளை சொல்ல கொம்பனோ அமைதியாகவே இருந்தான்
சரி அவன் யோசிக்கட்டும் என அப்படியே விட்டுவிட்டு இவ்விருவரும் வேறு பக்கம் சென்றார்கள்.
அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டபடி இருந்த காவேரிக்கும் வியப்பாக இருந்தது. கணக்குபிள்ளையின் யோசனை சிறந்தது, அதை செய்தால் போன தன் மானம் மரியாதை திரும்ப கிடைக்கும், ஆனால் கொம்பன் மன்னிப்பு கேட்பானா அதுவும் ஊரார் முன்னிலையில் வாய்ப்பில்லை என நினைத்து தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு சென்றாள் காவேரி.