”தாமரை காபி கொண்டா” என அதிகாரமாகச் சொல்ல அவரும் ம் என்று மட்டும் பதில் சொல்ல கீர்த்தனாவுக்கு உடனே புரிந்துவிட்டது. பழைய கதையால் பாட்டியின் மனது புண்பட்டிருக்கிறது என அறிந்தவள்
”டாக்டர் தாத்தா பாட்டிக்கு உடம்பு சரியில்லை போல. நான் வேணா காபி போட்டு தரவா” என அன்பாக கேட்க அவரோ வேண்டுமென்றே பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தார்
அங்கு வைத்தி தன்னை முறைப்பதைக்கண்டு கிண்டலாக சிரித்தவர் வேண்டுமென்றே தாமரையின் கையை பிடித்து அவளை எழுப்பி வீட்டுக்குள் கூட்டிச் செல்ல கீர்த்தனாவுக்கு புரிந்து வைத்தி தாத்தாவை திரும்பிப் பார்க்க அவரோ கோபமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் எழுந்து வீட்டுக்குள் செல்லவும் கீர்த்தனா சோகமானாள். அவளின் சோகத்தைப் பார்த்த தேவாவோ மனம் கலங்கினான்.
மித்ராவோ பவியிடம்
”ஓகே பவி, நாளைக்கு பேசலாம் நாளைக்கு எப்ப வருவ“
“நான் வேலைக்குப் போறேன்”
“வேலையா ஓ வேணாம், அந்த வேலையை விட்டுடு நம்ம லட்சியமே பேஷன்தான், நீ வேற எதுலயாவது போய் உன் வாழ்க்கையை தொலைச்சிடாத” என சொல்ல கீர்த்தனா அதிர்ந்தாள்
”ஆனா மித்ரா நீங்க டாக்டராச்சே உங்களுக்கு எதுக்கு இந்த பேஷன்”
“எனக்கு டாக்டர் படிப்பு பிடிக்காது. என் அண்ணங்க அதான் பெரியப்பா பையன்கள் எல்லாம் வேஸ்ட்டுங்க, ப்ளஸ்டூ கூட ஒழுங்கா படிக்கலை. அதனால என்னை டாக்டருக்கு கட்டாயமா படிக்க வைச்சாரு தாத்தா, எனக்கு பேஷன்தான் பிடிக்கும், எப்படியாவது நான் பெரிய பேஷன் டிசைனரா வரனும், உலகமே என்னை பாராட்டனும் அதான் என் கனவு, லட்சியம்”