அதன் காரணமாக வீட்டில் பொருட்களை சாமான்களை ஒரு பக்கம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள் வேலையாட்கள். தேவா வரவும் அந்த ஓனர் அவர்களை வரவேற்று உபசரித்து காபி கொடுத்து அடுத்த நாள் கிரகப்பிரவேசத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அடுத்து கீர்த்தனாவைக் கண்டதும்
”தம்பி யார் இந்த பொண்ணு?” என கேட்க கொஞ்சமும் தயங்காமல்
”நான் கட்டிக்கப் போற பொண்ணு” என தேவா உடனே சொல்ல
”ஓ நல்லது நல்லது” என சொல்லிவிட்டு அவளிடம்
”காலையில 5 மணிக்கு பால் காய்ச்சறோம், 6 மணிக்கு வந்துடுங்க” என சொல்ல அவளோ தேவாவை பார்க்க
”நான் கூட்டிட்டு வரேன் சரி நாங்க கிளம்பறோம்” என சொல்லவும்
”தம்பி மீதி பணத்தை நாளைக்கு தந்துடறேன்”
“சரிங்க இதுல போய் என்ன இருக்கு நாளைக்கே வாங்கிக்கிறேன்” என சொல்லிவிட்டு கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு மூவருமாக காரில் ஏறி நேராக அவர்கள் சென்ற இடம் நகைகடைதான்.
”இங்க எதுக்காக வந்திருக்கோம்”
“ம் புடவையும் நகையும் உனக்கு தரலாம்னு நினைச்சேன். புடவை அப்படியாயிடுச்சி. சரி நகையாவது தரலாம்னுதான்”
“எனக்கு அதெல்லாம் வேணாம் ரொம்ப ஓவரா பண்றீங்க” என அலுத்துக் கொண்டவளை முறைத்தான் தேவா