“சரி நான் நல்லாவே பேசறேன்” என அவள் ஆரம்பித்தாள்.
”அதே கிராமத்தில 2 பையன்கள் இருந்தாங்களாம், அவங்க சிநேகிதர்களாம், 2 பையன்களும் அந்த பொண்ணை சின்னப்ப இருந்து விரும்பினாங்களாம்” என ஆரம்பித்தவள் முழுக்கதையையும் சில பல ஒப்பனைகளை தவிர்த்து யாரோ ஒருவருடைய கதையை சொல்வது போல தேவாவின் தாத்தாவின் காதல் கதையை சொல்லலானாள். அவனும் ம் கொட்டிக் கொண்டே கதையை கேட்டவன் இறுதியில் தன்னையும் மறந்து உறங்க ம் சத்தம் வராமல் போகவே கீர்த்தனா சிரித்தபடியே போனை கட் செய்துவிட்டு உறங்கலானாள்.
விடிந்தது.
காலையில் எழுந்ததும் தேவா தாஸை அழைத்துக் கொண்டு அவசரமாக கோயிலுக்குச் செல்ல நினைத்து முற்றத்திற்கு வர அங்கு சரண்யாவைக் கண்டதும் அதிர்ந்தான். தான் எடுத்த புடவையில் இருந்தாள். பாட்டியும் சரண்யாவிற்கு திருஷ்டி கழிக்கவே குழம்பினான். பாட்டி செல்லும் வரை காத்திருந்தவன் ஒரே எட்டில் சரண்யாவை பிடித்தான்
”ஏய் இந்த புடவை ஏது உனக்கு”
“எனக்கு தெரியாது பாட்டி கொடுத்தாங்க” என்றாள்.
”பாட்டியா”
“ஆமாம்”
“பாட்டிகிட்ட எப்படி இந்த புடவை போச்சி”
“அதை அவங்களையே கேளுங்க இந்த புடவை எப்படியிருக்கு” என காட்ட அற்புதமாகதான் இருந்தது. இருந்தாலும் அந்த புடவையை அவன் கீர்த்தனாவிற்காக வாங்கியதால் அவனுக்கு இவள் கட்டவும் பிடிக்காமல் போனது”