“இல்ல வேண்டாம் மாப்பிளை. அவ தெம்பா எழுந்து நடக்கிற வரைக்கும் இதைப் பத்தியே யோசிக்க போறது கிடையாது” என்றார் தன்ராஜ் தெளிவாக.
“என்ன மாமா? அவளுக்காக ஆசை ஆசையா பட்டெல்லாம் எடுத்திட்டு வந்தேன். இவ்வளோ தூரம் சொந்தக்காரவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துட்டு இப்போ அவங்ககிட்ட போய் என்ன சொல்ல?” ஆதங்கமாய் கேட்டான் பாண்டியன்.
“வடிவு பெண் பேசன்னு ஊரையே கூட்டிகிட்டு வந்தா நான் என்ன செய்ய முடியும்? இருந்தாலும் வந்துட்டாங்களேன்னு நானும் முயற்சி செய்தேன். பாருங்க இப்போ என்ன ஆச்சுன்னு. பதறிய காரியம் சிதறிப் போகும்ன்னு சும்மாவா சொன்னாங்க. அவ தான் படிக்காதவ. நீங்களாவது புரிஞ்சிக்கோங்க மாப்பிளே.” என்று தெளிவு படுத்தினார் தன்ராஜ்.
அவர் மேலும், “அது விஷயமா உங்ககிட்ட பேசணும். ஆனா இங்க வேண்டாம். இப்போ வேண்டாம். நாம வீட்டிற்க்கு போய் பேசிக்கலாம்” என்றார் தன்ராஜ் நிதானமாக.
“எங்க எப்போ வேணாலும் பேச நான் தயார். ஆனா சந்தியா எனக்கு கிடையாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க”, என தன்ராஜிடம் அழுத்தமாக சொன்னான்.
“அதை பத்தி தான் பேசணும். அந்த பேச்சுக்கு இது சரியான இடம் கிடையாது. வீட்டிற்கு போய் பேசலாம்” என்று உறுதியாக சொல்லி விட்டு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் தன்ராஜ்.
அவர் சொன்ன விதம் பாண்டியன் மனதில் பயத்தை உண்டாக்கியது. “நீ மட்டும் ஏதாவது மாத்தி சொல்லு, அப்புறம் இருக்கு உனக்கு.” என்று மனதிற்குள் தன்ராஜை திட்டினான்.
சில மணி நேரத்தில் சந்தியாவிற்கு லேசாக விழிப்பு வந்தது.இருந்தாலும், தலையில் நீர்கோர்த்து இன்னும் கனப்பது போன்ற உணர்வு இருந்தது. நடந்தவற்றை லக்ஷ்மி சொல்ல சொல்ல எல்லாம் கனவில் நடந்தது போல இருந்தது. கார்த்திக் வந்தது எல்லாம் அவளுக்கும் தெரிந்தது. ஆனால் தெளிவாக நியாபகம் இல்லை. நிச்சயதார்த்தம் நின்றதில் அவளுக்கு ஒரே குஷி! முந்தைய நாள் அவள் இருந்த அதிர்ச்சியில் சுற்றி உள்ளவர்கள் சொன்னது எல்லாம் கேட்டாலும் அதற்கு எதிர்த்து பேசவோ போராடவோ மனதாலும் உடலாலும் ஆர்வமும், சக்தியும் அற்று போயிருந்தாள். “முருகா! எனக்கு தெம்பை குடுப்பா. நான் சீக்கிரம் குணமாகி இந்த பீப்பா, பாண்டி தண்டட்டி பாட்டி எல்லாரையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும்” மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.
அதே நேரம் பாண்டியன் கதையை முடிக்க சிவா மருத்துவமனைக்கு வந்தான்.
வெளியே நின்ற பாண்டியனின் காரை கார்த்திக் அனுப்பிய விவரங்களை வைத்து அறிந்து, அவன் மருத்துவமனைக்குள் தான் இருக்க வேண்டும் என யூகித்தான். சந்தியாவின் அறைக்கு வந்த சிவா அனைவரிடமும் கார்த்திக்கின் நண்பன் என அறிமுகப் படுத்திக் கொண்டு அங்கிருந்த ஒவ்வொருவரையும் விசாரித்ததில் பாண்டியன் அங்கு இல்லாததை அறிந்தான். அவன் போன் பேச வெளியில் சென்றுள்ளதாக அறிந்து வெளியில் வந்தான்.
“எங்க போனான் இந்த பாண்டியன்?” என்று கண்களால் வலை வீசிக் கொண்டிருக்கையில் அந்த மருத்துவமனை வராண்டாவில் ஒருவன் போன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“ஆடு சிக்கிடுச்சுடா சிவா “ என தனக்குள் சொல்லி கொண்டே அருகில் சென்றால் அங்கு வெவ்வேறு திசையில் வெவ்வேறு திணுசில் நின்று மூன்று பேர் போன் பேசிக் கொண்டிருந்தனர்.
“இதுல எந்த ஆடு....ஆடா... எல்லாம் காட்டு எருமையாட்டம் வைல்ட் டா இருக்கானுங்க. டேய் கார்த்திக் நீ குடுத்த டீடைல்ஸ்ஸ பாக்காமலே என் கிட்னிய உபயோகிச்சு சிட்டுவேசன் சாங் போட்டு கப் கப்புன்னு பிடிக்கிறேன் பாரு… காட்டு எருமைங்களா….உங்களுக்கு சிவா நடத்தும் வைல்ட் கார்ட் ரவுன்ட்...யாரு செலக்ட் ஆகுறீங்கன்னு பாக்கலாம் “ என்று விட்டு,
“பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஏங்கி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா “
என பாடிக் கொண்டே விசிலடித்தபடி வராண்டாவில் வேடிக்கை பார்ப்பது போல நடித்தான். அவன் பாடியதை கேட்டதும் அந்த மூவரில் ஒருவன் மட்டும் போன் பேசிக் கொண்டே ‘டக்’கென சிவாவை திரும்பி பார்த்து விட்டு பின் வேறு பக்கம் திரும்பி தனது போன் உரையாடலை தொடர்ந்தான். சிவா அதை கவனித்து விட்டான்…
“தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க...பட்சி சிக்கிடுச்சு. மவனே நீ இன்னக்கு காசிக்கு பார்சல் தான்…சிவா இப்போ தான் உன் அறிவு கூர்மையை பட்டை தீட்டி சரி பாக்கணும்.” என்று கார்த்திக் அனுப்பிய பாண்டியனின் விவரங்களை பார்த்தான்.
“ப்ளூ ஜீன்ஸ், சிவப்பு சட்டை, கர்லி ஹேர்”
அடையாளங்களை சரி பார்த்தான். அவன் பார்த்து வைத்த ஆளும் அதே நிற ஆடையில் இருந்தான். ஆனால் முடி மட்டும் சுருள் முடியில்லை. “இவனுக்கு சன்சில்க் ஹேர்ரா இருக்கே...சின்ன வித்தியாசத்தை எல்லாம் பெரிசா எடுக்க கூடாது. முடியை ஐயர்ன் பண்ணியிருப்பானாயிருக்கும்… இன்னொருக்க வைல்ட் கார்ட் ரவுன்ட்ல செக் பண்ணிடலாம்” என்று விட்டு,
“பாண்டியனா கொக்கா கொக்கா
பிடிக்காதே காக்கா காக்கா “
என்று வேறு எங்கோ பார்ப்பது போல பார்த்துக் கொண்டு பாட, இப்போதும் அதே ஆள் மீண்டும் ‘டக்’ கென திரும்பி பார்த்தான். இந்த முறை சிவா அவனை விடாமல்,
“பாண்டியன் ??” என அவனிடம் கேட்டான்.
அவன் வியப்பாக “எப்படி கண்டுபிடிச்ச” என்ற ரீதியில் அவனை மெச்சுதலாக பார்த்து லேசாக புன்னகைத்து “ஆமாம்" என தலையாட்டிய படி போனில் கவனத்தை செலுத்த வேறு பக்கம் திரும்பினான்.
“மவனே சிக்கினடா…. பாண்டியா….உன்னை பாலோ பண்ணி கதைய முடிக்கிறேன்” மனதிற்குள் உறுதி பூண்டவன், தக்க சமயத்திற்காக கையில் மயக்க மருந்துடன் தயாராக இருந்தான். பாவம், அந்த நபர். அவர் பாண்டியன் என்பரிடம் தான் எதிர்முனையில் பேசிக் கொண்டிருந்தார். சிவா அதை கண்டுபிடித்து விட்டான் என மேச்சுதலாக கண் ஜாடை காண்பித்ததை நம் அதிமேதாவி சிவா அவர் தன்னுடைய பெயர் பாண்டியன் என ஜாடை காண்பிப்பதாக எண்ணி அவரை சின்னாபின்னமாக்க ஆயத்தமாகி விட்டான்.
விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த கார்த்திக், அவசர அவசரமாக விமானம் நிற்கும் வாயிலை கண்டு பிடித்து அதை நோக்கி விரைந்தான். அப்போது கடைசி நிமிட அழைப்பாக “கார்த்திக் சதாசிவம்” என்ற அவனது பெயரை ஏலம் விடுவது போல கூவி கூவி அழைத்துக் கொண்டிருப்பதை கேட்டு அரக்க பரக்க ஓடி வந்து வந்து ஏறியவன் வேகமாக தனது ஐபோனை ஆப் செய்யும் முன் சிவாவிடம் பேசுவதற்கு பார்க்க, அப்பொழுது அவன் அனுப்பியிருந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்து போய் அவனை வேகமாக அழைத்தான்.
“சிவா, பாண்டியனை எங்க? போட்டோல இருக்கிறது ஆளா இல்ல பாடியா?”
“மாப்ளே அது பாண்டியன் இல்லயா….அச்சச்சோ…..டேய் நீ வேற பாடி அது இதுன்னு வம்புல மாட்டிவுட்டுடாத. அவன் மயக்கத்தில தான் இருக்கான். இப்போ தான் அவனை காசி போற ட்ரைன்ல தூக்கி போடலாம்ன்னு ரெயில்வே ஸ்டேஷன்க்கு வந்தேன்.” என்று அரண்டு போய் சொன்னான் சிவா.
“அய்யோ… வழக்கம் போல சொதப்பிட்ட சிவா. மாமாகிட்ட இருந்து கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் அவன் டீடைல்ஸ் வந்தது. போட்டோ முதற்கொண்டு உனக்கு உடனே அனுப்பி வைக்கிறேன். அவன் திங்கட்கிழமை சென்னைக்கு வந்துடுவான்னு மாமா சொன்னாங்க. சோ, ஒரு நாள் மட்டும் அவனை சமாளிச்சா போதும். அதுக்கு என்னோட பிளான் படி செய். இதை உன்னால செய்ய முடியாட்டின்னா எங்க மாமாவை கூப்பிடு. “ என்று வேகமாக தன் திட்டத்தை சொல்லி முடித்தான் கார்த்திக்.
“மாப்ள எனக்கு இது எல்லாம் ஜுஜுப்பி. சொடக்கு போடுறதுக்குள்ள முடிச்சிடுவேன்....எதுக்கு உங்க மாமா? அவங்களுக்கு சிட்டில எத்தனை வேலை இருக்கும் ” என்று பெருமை அடித்தான் சிவா.
“பண்றதெல்லாம் சொதப்பல். பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஒழுங்கா காரியத்தை முடி. இதுல சொதப்புன சங்கு தான். மர்டர் கேஸ்ஸாகிடும். வீணா சிக்கிடாத மச்சி” என மிரட்டினான் கார்த்திக்.
“நீ சொல்லுவடா...பிகரை தள்ளிட்டு போக நீங்க போவீங்க..இந்த பொறம்போக்கு வில்லனை தள்ளிட்டு போக ப்ரென்ட்டை அனுப்புவீங்க..” என்று நொந்து போய் சொன்னான் சிவா.
“மச்சி, நீ மெழுகுவர்த்தி...எனக்கு லைட் காமிச்சே உன்னை கரைச்சுக்குவா. சரி எனக்கு ரொம்ப புல்லரிக்குது. போனை ஆப் பண்ண அனவுன்ஸ்மென்ட் வந்துடுச்சு. உனக்கு பாண்டியன் டீடைல்ஸ்சை வேற அனுப்பணும். வைச்சிடுறேன்” என்று விட்டு அவனுடன் இணைப்பை துண்டித்தான்.
ஆட்டம் தொடரும் ...
{kunena_discuss:610}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.