“உன் நாட்டு எல்லையில் வைத்து நான் அப்படி செய்தால். இப்படி ரகசியமா இந்த தீவுக்கு நான் வந்திருக்க முடியுமா?, பலபேரை காப்பத்திக்கிறதுக்காக இந்த மிஷன்னு சொல்லியிருக்கேன். உன் ஒருத்திக்காக அத்தனை பேரை விட முடியுமா?”
‘இதை யோசிக்காம போனேனேன்னு’ ஒரு க்ளீன் போல்ட அவன்ட்ட இருந்து இவள் எதிர்பார்த்திருக்க, பேட்டை வச்சு நடுமண்டையில் நச்சுன்னு போட்டமாதிரி இருந்தது அவன் பதில். பின்னே, உனக்காக மத்தவங்களை விட முடியுமான்னுட்டானே!
‘இதுக்குதான் பெரியவங்க விளையாடுறப்ப ஃபீல்டிங்க் பண்ண போகக்கூடாதுங்கிறது.’ லேட்டா அட்வைஃஸ் பண்ணியது மூளை.
“எனக்கு கொடுத்த வேலையைத்தான் செய்தேன், ஆனால் எப்படியோ அது உன்னையும் ஆபத்தில் இழுத்துவிட்டது, சாரி”
முதலில் என்ன உணர்ச்சியில் பேசுகிறான் என புரியவே முடியாத குரலில் பேச தொடங்கியவன், முடிக்கும் போது உண்மையாக வருந்தினான்.
“அந்த டெரரிஸ்ட் குரூப் என்னை கடத்தினதுக்கு நீங்க என்ன செய்வீங்க, அதுவும் இல்லாம உங்களை நான் மீட் பண்ணாமலே போயிருப்பேன். இட்’ஸ் ஒர்த்” இவள் மலர்ச்சியாய் சொல்ல,
திரும்பி பார்த்து முறைத்தான்.
தூரத்தில் கரை தென்பட கடும் இருளான இடத்தை நோக்கி படகை செலுத்தினான். இருளில் கரையில் இறங்கியவன் ஒரு புதரின் மறைவில் தானும் அமர்ந்து அவளையும் அமரச் செய்தான். அவளது காதணிகளை கழற்றி, மையை அழித்து, சாதாரண குடும்ப பாங்கான பெண்முகமாக மாற்றி, புர்ஹாவிற்குள் மறைத்தான் அவளை.
மீண்டும் ரோந்து ஹெலிகாப்டர். பதறிபோய் அவன் முகத்தை பார்க்க,
“அவங்களுக்கு நம் கால் வரைதான் தெரியும்” அவர்களது கால்களை கண்களால் சுட்டிய படி சொன்னான். ஆறுதல்படுத்தும் குரல். கால்கள் வரையாய் பட்ட வெளிச்சத்தை பார்த்தாள். எவ்வளவு கவனம் இவனுக்கு?
இவன் ஏதோ பதில் சொல்ல விலகி பறந்தது அது. இந்த மொழியும் தெரியுமா இவனுக்கு?
சற்று தள்ளியிருந்த அடர் புதருக்குள் சென்றவன் அடுத்த சில நிமிடங்களில் குர்தா, பைஜாமா, முகத்தில் குறுந்தாடியுடனும், தலையில் குல்லாவுடன் வந்தான். இப்பொழுதும் உள்ளிருக்கும் பெருந்தாடி மேல்தான் மாஸ்க் அணிந்திருக்கிறான் என யூகிக்க முடிந்தது. முன்பிருந்ததை விட சற்று குறைவான வயதை காட்டும் தோற்றம். இருப்பினும் இவன் உண்மையான வயது இதை விட குறைவாகத்தான் இருக்கும்.
இவள் கரம் பற்றி எழுப்பி நடக்க தொடங்கியவன் தன் முந்தைய உடைகளுடன் அவள் காதணிகளை வைத்து பொதிந்து ஒரு பெரும் கல்லை அந்த உடையுடன் சேர்த்து தன் படகில் வைத்துவிட்டே, இவளை அழைத்துச் சென்றான்.
சற்று தொலைவிலேயே விளக்கு கம்பங்களுடன் சாலை தெரிய இருவரும் அதில் பாதை யாத்திரை தொடங்கினர். இங்கொன்றும் அங்கொன்றும் கார்கள் நிறுத்தபட்டிருக்க, சாலையில் ஆள் நடமாட்டமோ சொற்பம். திறந்திருந்த ஆகாயம். வீணாய் பொழிந்த பால்நிலா. மெல்ல வீசிய பூங்காற்று. கரம் பிடித்தபடி மௌனமான நடை. இப்படி ஒரு ஏகாந்த உணர்வை நிரல்யா இதுவரை அனுபவித்ததே இல்லை. ‘இப்படியே தொடாராதா இது?’
குடியிருப்பு பகுதி கண்ணுக்கு தெரிய தொடங்கியது. ‘எங்கே போகிறோம்?’ இந்த கேள்விக்கு நிரல்யாவால் பதில் காணமுடியவில்லை. அவன் முகத்தை பார்த்தாள். உணர்ச்சியற்று வருபவன் போல் வந்து கொண்டிருந்தான். ‘சரியான சீரியஸ் சின்னபாண்டி, கொஞ்சம் சிரிச்சா என்னவாம்?’ மனது முனங்கியது.
“ஜாஷ்.” அவள் ஆரம்பிக்கவும் ஒரு கையால் அவள் வாயை பொத்தியவன், மறுகையால் அவளை தன் புறமாக இழுத்து, அவள் காதில் மெல்ல, ஆனால் அழுத்தமாக “அப்படி கூப்பிடாதே!” என கட்டளையிட்டான்.
ஓ எப்படி மறந்தாள் இவர்களது வேஷத்தை.............? “சாரி ஆரிக்” என்றாள் அவள். திரும்பி இவள் முகத்தை நேராக பார்த்தவன் முகம் முழுவதும் அவளுக்கு பிடித்தமான புன்னகை.
“ இது யாரு இந்த ஆரிக்?”
“அந்த பெயருக்கு இரக்கத்தோடு ஆட்சி செய்பவன்னு அர்த்தம். நீங்க என்னை அப்படிதான் ஆட்சி செய்துட்டு இருப்பதாக தோணுது. அதான் ஆரிக்”
அவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது மெல்ல. ‘இயல்பாகவா அல்லது கோபமா அவனுக்கு?’ புரியவில்லை நிரல்யாவிற்கு.
அதற்குள் ஏதோ ஒரு கார் இவர்கள் அருகில் வந்து நிற்க, சட்டென ஒருகையால் அவளை தோளோடு அணைத்தவன், மறுகைவிரல்களால் அவள் விரல்களை பின்னிக்கொண்டான். அவன் உடல் இறுகுவதை இவளால் உணர முடிந்தது.
‘ஆபத்தா?’ இவள் மனம் அலறியது. காரிலிருந்தவன் ஏதோ பேச, நிரல்யாவின் விரல்கள் பிடித்திருந்தவனின் இரும்பு விரல்களால் பதம் பார்க்கப்பட்டது.
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென ஒரு சுற்று, ஒரு காலை காரில் ஊன்றி, மறு காலை விர்ர்ர்ர்ர்ர்ரென காற்றில் சுற்றி அந்த கார்கார கடலை பார்ட்டிக்கு கழுத்தில் விடுவான் ஒரு கா(க)ல்வெட்டு, என நிரல்யா நினைத்திருக்க,
இவள் சற்றும் எதிர்பாராத விதமாக குடியிருப்பு பகுதிக்குள் இவளை இழுத்துகொண்டு ஓடத்தொடங்கினான். “வேகமா வா” என்ற மென்குரல் கட்டளையோடு. எங்கேயோ நுழைந்து நுழைந்து ஓட்டம். 15 நிமிடமாவது தொடர்ந்து ஓடியிருப்பர் இருவரும். ‘ம்ஹும் இதற்கு மேல் முடியவே முடியாது,’ மனம் நிற்க சொல்லி கெஞ்சி கொஞ்சி கடைசியாக அரட்டி மிரட்டியது. இனியும் தொடர்ந்தால் மயக்கம் என்ற பெயரில் மறைந்துகொள்ளும் அது என இவளுக்கு புரிந்தது.
ஒரு வீட்டின் இருண்ட காம்பவுண்ட் சுவர் மீது இவளை சாய்த்து நிறுத்தினான்.
“குட் ஜாப், இவ்வளவு நேரம் தாக்கு பிடிச்சிட்டியே! உங்க நாட்டில் இளவரசிகள் போர்பயிற்சி எடுப்பாங்களாமே, அதுதானா இது?” மெச்சுதலாக சொன்னான் அவன்.
“அ அ.....து போ..........ர்பயிற்சி, இ இ.........து பு பு.........றமுதுகிடுற மு.........யற்சி”
மூச்சிளைக்க கோபத்தை இன்ஸ்டால்மென்டில் வெளியிட்டாள். சிரிப்பான் என எதிர்பார்த்தாள்.
“இந்த இடத்தில் சண்டைபோட்டு அடுத்தவங்க உன்னை கவனிக்கிறபடி ஆகிடகூடாது.அதுவும் போலிஸ் வந்துவிட்டால் ரியல் ட்ரபுள். அதான்.” என படு சீரியஸான குரலில் சொல்லி முடித்தான் அவன்.
‘ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் சின்னசாமி ஆஜராயிட்டார்ப்பா’ மூக்கை சுழித்து பழிப்பம் காட்டினாள்.
“சிரிக்கவே மாட்டீங்களா நீங்க?”
“நியாயபடி நான் உன்ட்ட பேசியிருக்கவே கூடாது, நீ என்ன சரியா புரிஞ்சுகிடாம, பின்னால் பிரச்சனை பண்ணிட கூடாதேன்னுதான் இவ்வளவும் சொன்னது. வா போவோம்?”
“எங்க போறோம்?”
“உனக்கு டிரஃஸ் எடுக்க?”
ஏன்? புரியாது விழித்தாள்.
“நீ இப்ப போட்டிருக்கிற டிரஃஸுடன் உன் அப்பாவை பார்த்து கடத்தியவனுடன் கடலில் விழுந்தேன், நம்ம ராணுவம் வந்து காப்பத்திட்டுனு சொன்னால் நம்புவாங்களா?”
அப்பொழுதுதான் அது அவளுக்கு உறைத்தது. “கடைக்கு போறோமா?” “பணம்?”
“இல்ல, அது ரிஃஸ்க், ஏதாவது ஒரு காமிராவில் நாம பட்டாலும் ப்ரச்சனை, இந்த வீட்ல கேட்கலாம், அங்க காயபோட்டிருக்கிற டிரஸ்ஸில் உன் சைஸ் நிறைய இருக்குது.”
‘சே! என்ன கண்கள் இவனிது! ஓடும் போது காயபோட்டிருக்கிற துணிவரை கவனித்திருக்கிறான்?’ பெண் மனம் சிலாகித்தது.
“ஆனால் இங்கே நான் போட்டிருந்தமாதிரி டிரஸ் கிடைக்குமா......?”
நீ கடத்தப்பட்டது எந்த கேமிராவிலும் இருக்காது....”
“அதெப்படி என் பால்கனியில் கேமிரா உண்டே!”
“உள்ளே வர்றப்பவே, பின்பக்க கேமிரா மூனையும் சுட்டுட்டுதான் அவன் வந்தான்.”
“ஓ!!”
“மாலிலிருந்து உன்னை கிளம்பச்சொல்லி உங்கப்பா போல் போன்பண்ணியது இந்த கூட்டம்தான். உள்ளே வந்ததும் டிரஸ் மாத்துவது உன் பழக்கம், டிரஸ் மாத்தும்போது நீ தனியா இருப்ப, அப்ப உன்னை கடத்தனும்ங்கிறதுதான் இவங்க திட்டம்.”
“ஓ....அதனால என் ஸைஸில் நான் எந்த டிரஸ் போட்டிருந்தாலும் அப்பா நம்பிடுவார்.”
“ம். உன் எல்லா டிரஃஸும் உன் அப்பாவுக்கு அடையாளம் தெரியாதுதானே........”
“என்னை அடையாளம் தெரியுதே அதுக்கே திருப்திபட்டுகிடனும்.” என்ற நிரல்யாவின் பதிலில் நிரம்பி நின்றது ஏக்கம். அவன் ஏதாவது சொல்லவேண்டும் என எதிபார்த்தது மனது.
இவள் கரத்தை பற்றினான் அவன்.
தொடரும்
{kunena_discuss:752}