காதல் நதியில் – 31 - மீரா ராம்
அவனின் கண்கள் அவளது முகத்தை விட்டு சிறிதும் அகலவில்லை… இந்த நொடி சந்தித்து விடாதா நம் பார்வைகள் என அவன் ஏங்கிக் கொண்டிருக்க, அவள் நிமிர்ந்தாள் இல்லை…
விழிகளோடு விழிகள் பேசும் காதலை விடவா வார்த்தைகள் காதலை சொல்லிவிடப்போகிறது???
ஒருவினாடி அவள் அவனை பார்த்துவிட்டால் கூட அதன் பிறகு அவளால் அவன் கண்களை விட்டு பார்வையை அகற்ற முடியாது… அனைவரும் இருக்குமிடத்தில் எப்படி அவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்திட முடியும்???
அவள் நிலைமை அவனுக்கு நன்றாகவே புரியத்தான் செய்தது… எனினும் என்ன செய்ய???... தன்னவளின் கடைக்கண் பார்வைக்காக அவன் தவமிருந்தான்…
என்ன சுந்தரம் வாசலில் குதிரை வரவேற்பெல்லாம் பலமா இருக்கு?... என்று கல்யாணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் கேட்க…
அதுவா… சித்தப்பா… எல்லாம் நம்ம பையன் முகிலன் விருப்பம் தான்… குதிரையில் மாப்பிள்ளை அமர்ந்து வருகிற திருமணம் சில இடங்களில் நான் பார்த்திருக்கிறேன்… அதனால் எனக்கும் குதிரை வேண்டுமென்று அடம் பிடித்தான்… சரியென்று நானும் எல்லோரும் குதிரை மேல அமர்ந்தே வாங்க என்று ஆளுக்கொரு குதிரையைப் பார்த்து தேர்வு செய்தேன்…
ஓஹோ… அது சரிதான் சுந்தரம்… வாங்கினது வாங்கியாச்சு… எல்லாம் ஒரே நிறத்தில் இருக்குற மாதிரி வாங்கியிருக்கலாமே???
ஆதியைத் தவிர எல்லோருக்கும் இந்த கலர் குதிரை தான் பிடித்திருந்தது… ஆதிக்கு அந்த வெள்ளை நிறக்குதிரையை பார்த்ததும் பிடித்துவிட்டது… அதனால்தான் அவனுக்கு மட்டும் வெள்ளை நிறத்திலும், மற்றவர்களுக்கு வேறு நிறத்திலும் வாங்க வேண்டியதாயிற்று என்று விளக்க, அந்த உறவினர் அடுத்து கேள்வி ஏதும் கேட்காமல் சரிதான் என்றபடி சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்…
அடடே சுந்தரம், உன் பசங்க நாலு பேருக்கும் மாப்பிள்ளை தோரணை வந்துட்டு போல… என்று அங்கு வந்த பெரியவர் ஒருவர் கேட்க..
வாங்க… மாமா… எதை வைத்து அப்படி சொல்லுறீங்க… என்று கேட்டார் சுந்தரம்…
குதிரை மேல சும்மா ஜம்மென்று ராஜகுமாரன் மாதிரியில்ல இருந்தாங்க… மாப்பிள்ளை களை, தோரணம் எல்லாமே வந்துவிட்டது பசங்களுக்கு என்று சொல்லிவிட்டு சிரித்தார் அந்த பெரியவர்…
வந்தவர்களை கவனிக்காமல், இங்கே நின்று என்ன சிரிப்பு வேண்டியிருக்கு உங்களுக்கு என்றபடி அங்கே அவரின் துணைவி வர…
வாங்க அத்தை… என்று வரவேற்ற சுந்தரத்திடம், நீ போய் நலங்கு நிகழ்வில் நில்லு… நாங்க இங்க பார்த்துக்கொள்கிறோம்… இவரிடம் பேசினால் இவர் விடிய விடிய பேசிட்டே இருப்பார்… முதலில் நீ கிளம்பு… அங்கே உன் மூன்று வாலு பசங்களும் பண்ணுற அட்டகாசத்தை கொஞ்சம் போய் பாரு… என்றதும்,
ஏன் அத்தை என்ன பண்ணிணாங்க?... என்று அவசரமாக சுந்தரம் கேட்டார்…
அதை ஏன் கேட்குறப்பா… பொண்ணையும், மாப்பிள்ளையையும், கிண்டல் பண்ணி பாட்டு பாடினால் சரி, ஆனால் இவனுங்க அவங்க காதலில் விழுந்த கதையையும், இப்போ காதலிக்கிற கதையையும் சொல்லிட்டிருக்காங்க… சரியான வாலுங்க தான் மூணு பேரும் என்றவரிடம்,
ஹ்ம்ம்.. இப்படி எல்லாம் இருந்தால் தானே கல்யாண வீடு கலகலன்னு இருக்கும் என்றார் அவரின் கணவர்…
அதுவும் சரிதாங்க… சின்னப்பசங்க தானே… வாழ்க்கையை ரசிச்சு அனுபவிக்கட்டும்… இந்த தருணங்களில் நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் பொக்கிஷம் தானே… என்றவர், நீ போப்பா, சுந்தரம்… என்று அவரை அனுப்பி வைத்தார்..
மூன்று பேரும் கூடி பேசி அடுத்து என்ன பாட என்று யோசித்துக்கொண்டிருந்த போது…
டேய்… படவாக்களா, என்னடா பண்ணிட்டிருக்கீங்க???... அவனைக் கிண்டல் செய்து பாடாமல், நீங்க உங்க காதலை சொல்லிட்டிருக்கீங்களா என்று முகிலனின் காதைப் பிடித்து திருகியபடி கேட்டார் சுந்தரம்…
அய்யோ… அப்பா… வலிக்குது… விடுங்க… என்று முகிலன் கெஞ்ச… அவர் பிடி தளரவேயில்லை…
அப்பா… அண்ணனை விடுங்க என்ற அவ்னீஷ்… ஆதி வைத்த கண் வாங்காமல் சாகரியைப் பார்ப்பதை சுட்டிக்காட்டியதும் அவர் பிடி கொஞ்சம் தளர்ந்தது…
அங்கே பாருங்க… ஆதி அண்ணன் என்னடான்னா அண்ணியையேப் பார்க்குறாங்க… அண்ணி என்னடான்னா தரையையேப் பார்த்துட்டிருக்காங்க… இவங்களை பின்னே நாங்க என்ன கிண்டல் பண்ணுறது?... என்று கேட்டான் அவ்னீஷ்…
அதானே… நல்லா சொல்லுடா… அப்பாவுக்கு அப்பவாவது புரியட்டும்… என்றான் முகிலன் காதுகளை தேய்த்தபடி…
இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டே இருந்தா, நீங்க சொல்லுறதுக்கு முன்னாடியே நாங்க கிண்டல் பண்ணியிருப்போம்… ஆனால், இங்கதான் அப்படி ஏதும் நடக்கவில்லையே அப்பா என்றான் ஹரீஷும் சற்றே ஆதங்கத்துடன்….
அப்பா… இவங்க சொல்லுறதை நம்பாதீங்க… என்றபடி அங்கே வந்தனர் அனுவும், காவ்யாவும்…
ஏய் அனு, இப்ப எதுக்குடி எங்களை நம்ப கூடாதுன்னு அப்பாகிட்ட சொல்லுற நீ?... என்றபடி குரல் உயர்த்தியவன் ஷ்யாம் அவளின் பின்னே வருவதைக் கண்டதும் சற்றே பின் வாங்கினான்…
அவனது செய்கையைக் கண்டு நகைத்த அனு, அப்பா விடுங்க நாங்க பார்த்துக்கறோம் என்றாள்…
ஆமா, அப்பா, நீங்க அங்க உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாருங்க… என்றபடி சுந்தரத்திடம் சொல்லிவிட்டு காவ்யா அனுவை அழைத்துச் சென்றாள்… ரிகா இருக்குமிடம்…
ரிகாவை நோக்கி சென்றவர்கள் சட்டென்று திசை மாறி ஷன்வி, மைத்ரி, மயூரி ஆகியோரிடம் சென்று காதோடு ரகசியம் பேசி விட்டு அகன்று விட்டனர்…
அக்கா இரண்டு பேரும் நம்ம ஜோடிங்ககிட்ட போய் என்னடா சொன்னாங்க… என்று முகிலன் அவசரம் அவசரமாக ஹரீஷிடம் கேட்க…
டேய்… நானும் உன்னுடன் இங்கேதானே இருக்கிறேன்…. எனக்கெப்படிடா தெரியும் வானரமே என்று அவன் திட்ட…
சரி… சரி… விடுடா… டாக்டர்… டென்சன் ஆகாதே… கண்டுபிடிக்கலாம் என்று முகிலன் சொல்ல…
அண்ணா… அண்ணா… சீக்கிரம் அங்கே பாருங்க… என்று அவ்னீஷ் கிட்டத்தட்ட கத்த, இருவரின் பார்வையும் அவ்னீஷ் கைகாட்டிய திசையில் சென்றது…
அங்கே அவர்களின் காதலிகள் மூன்று பேர் மட்டுமே இருந்தனர்…
என்ன செய்யப் போகிறார்கள் என்று ஆண்கள் மூவரும் பார்க்க… பெண்கள் மூவரும் பூப்போல் ஒன்றாக சேர்ந்து நின்று பூ விரிவது போல் ஆடத்துவங்கினர் பாடியபடி…
“நினைச்சபடி நினைச்சபடி…
மாப்பிள்ளை அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ…
உயிருடன் கலந்தானோ…”
என்று கோரசாக பாடியபடி மேடைக்கு சென்று ரிகாவை இடிக்க அவள் வெட்கத்தில் சிவந்தாள்…
“நினைச்சபடி நினைச்சபடி…
மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ…
உயிருடன் கலந்தாளோ…”
என்று வாலு மாப்பிள்ளைகளான முகிலன், அவ்னீஷ், மற்றும் ஷ்யாம் மூவரும், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் மேடைக்கு வந்து ஆதியை இழுத்தபடி பாட, பெண்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது…
“என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொற்றிக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே…
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல…
அந்த வனம் நந்தவனம் ஆகும்…”
என்று தினேஷும், ஹரீஷும், கைகோர்த்து ரிகாவின் அருகில் வந்து ஆடி பாட, ஒரு கணம் என்றாலும் அவளது விழிகளை நீர் சூழ்ந்தது…
சட்டென்று ரிகாவின் கைகளைப் பிடித்துக்கொண்ட காவ்யாவும், அனுவும்,
“மருதாணிக் கோலம் போட்டு….
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…”
என்று ஆதியின் அருகே ரிகாவை நிறுத்திவிட்டு அவளின் இருபுறமும் இருவரும் நின்று கொள்ள, அவளுக்கோ அழுகை நின்று வெட்கம் உதயமானது அழகாய்…
ஆதியோ எந்த நிமிடம் அவள் பார்வை தன் வசமாகும் என்று காத்துக்கொண்டிருந்தான்….