" ஆனா ?"
" ஆனா , எப்போ என் எதிர்காலம் நீன்னு முடிவானதோ , நான் அப்போவே உன்பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன் மது .. எனக்குள்ளே இருக்குற பெண்ணுக்கும் பெண்மைக்கும் நீதான் அடையாளம் கொடுத்து இருக்க .. எப்படின்னு தெரில , பட் நான் உன்னை சார்ந்து இருக்கும்போது ரொம்ப நிம்மதியா பீல் பண்ணுறேன் .. எனக்கொரு சத்தியம் பண்ணி கொடு "
" சத்தியமா ? என்ன சத்தியம் "
" அடுத்த ஜென்மத்தில் எல்லாம் , என்னை இவ்வளோ நாள் வைட் பண்ண வைக்காதே .. நான் திரும்பி பார்க்கும்போது நீ என் பக்கத்தில் இருக்கணும் புரியுதா ?" என்றாள் நிலா காதலும் ஏக்கமுமாய் .. காதல் மனதின் சினுங்கல் , அது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த இன்ப அவஸ்தை .. ஆண்களுக்கு புரியாத உணர்விது .. ஓர் ஆண் தனது காதல் கை கூடும் வரை போராடுகிறான் ..நித்தமும் அவள் நினைவில் வாடுகிறான் .. ஆனால் , அவள் அவனோடு இணைந்தப்பின் அவனது தேடல் தீர்ந்துவிடுகிறது .. அவன் நிதானம் ஆகிவிடுகிறான் .. சில நேரம் அதுவே அவனுக்கு அதீத உரிமை உணர்வு கொடுத்து சில நேரங்களில் அலட்சியத்தையும் கொடுக்கிறது ..
" என் மனைவி தானே அவள் ? அவள் புரிந்து கொள்வாள் எதுவாகினும் .. என்னைவிட்டு அவள் எங்கு சென்று விட போகிறாள் ? " என்ற உரிமை உணர்வு ..
ஆனால் பெண்ணுக்கு அப்படியல்லவே .. அவள் ஒவ்வொருநாளும் புதிதாய் காதலிக்கிறாள் .. ஒவ்வொருநாளும் அவனை புதிதாய் தான் பார்ப்பாள் ..அது அவளது இயற்கை குணம் ..ஒருநாள் அவன் காதலாய் கசிந்துருகி , மறுநாள் கொஞ்சம் அவன் ஒதுக்கம் காட்டினாலும் அவள் துவண்டுதான் விடுவாள் .. 50 வயதானாலும் அவள் காதல் புதிதாய்தான் இதுக்கும் ..இதை புரிந்து கொள்கின்ற ஆண் அவளது கண்ணீருக்கு காரணம் ஆகிவிட மாட்டான் ..அதேபோல ஆணின் உரிமையுணர்வுக்கு பின்னால் இருக்கும் காதலை புரிந்து கொள்பவள் நிச்சயம் அவனது மௌனத்தை கூட புரிந்து நடந்துகொள்வாள் ..
தேன்நிலாவின் சத்தியத்திற்கு கட்டுபட்டான் மதியழகன் முழுமனதுடன் ..
" குட்டிமா , டைம் ஆகுதுடா .. நான் உன்கூடதான் எப்பவும் இருப்பேன் சரியா ? இப்போ எனக்காக தூங்குவியாம் " என்று அவளை கொஞ்சி கெஞ்சி உறங்க வைத்தான் மதி .. சில நேரம் குழந்தையாய் இருக்கிறாள் சில நேரம் குமரியாய் இருக்கிறாள் ..எப்படி இருந்தாலும் இவள் என்னவள் தான் ..என்று தனக்கு தானே கூறியவனாய் வேலையை தொடர்ந்தான் மதி ..
அதே இரவு வேளை , வாங்க ஷக்தி - மித்ராவை பார்ப்போம் ..
நான்கு நாட்கள் சிட்டாய் பறந்தே விட்டிருந்தது .. தனது அறையில் அமர்ந்திருந்தான் ஷக்தி .. அவன் மித்ராவிற்கு மாங்கல்யம் சூட்டியபோது அவள் காதலுடன் அவனை நிமிர்ந்து நோக்கிய நொடி , புகைப்படமாய் அவன் கண்முன் நின்றது .. கார்த்திக் தான் அவனுக்காக இமெயிலில் அனுப்பி வைத்திருந்தான் ..
அவளது பார்வையை நுணுக்கமாய் ரசித்து கொண்டிருந்தான் அவன் .. என்ன மாதிரியான பார்வை அது ?
இனி அனைத்தும் நீ ஒருவன் தான் என்று சரண் அடைகிறாளா ?
இனி நீயும் என் பொறுப்பு என்று கூறுகிறாளா ?
இனியவனின் காதலுக்கு நன்றி என்கிறாளா ? அல்லது
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்கிறாளா ?
தனக்குள்ளேயே கேட்டுகொண்டவன் , வழக்கம் போலவே மௌனமாய் புன்னகைத்தான் .. அப்படியே பேஸ்புக்கை திறக்க , அங்கு அவளிடம் இருந்து எந்த மெசேஜும் வரவில்லை .. கொஞ்சம் சந்தேகமாய் தான் புருவம் உயர்த்தினான் அவன் .. ஒருநாள் கூட அவனை பிரியாமல் பேசிக்கொண்டே இருப்பவள் இந்த நான்கு நாட்களாய் சற்று ஒதுக்கம் காட்டுவது போல இருந்தது .. அதற்காக அவர்களுக்குள் சண்டையோ ஊடலோ நிலவுகிறது என்றும் பொருள் இல்லை ..
அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எதையாவது பேசி கொண்டே இருப்பாள் அவள் .. ஆனால் இந்த நான்கு நாட்களாய் இரவில் மட்டும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றாள் ... சரியாய் அதே இரவு நேரத்தில் மித்ராவும் அவனைத்தான் நினைத்து கொண்டிருந்தாள் ..
" ஹே மக்கு மாமா, சாரி டா.. எங்க உன் கிட்ட ரொம்ப நேரம் பேசினா உளறிடுவேன்னு பயம்...அதான் இப்படி டிமிக்கி கொடுத்துட்டு இருக்கேன் ..இன்னும் ரெண்டு மூணு நாள் தான் .. அதுக்கு பிறகு உன் அத்தை பொண்ணு எப்படி உளறி கொட்டுறேன்னு நீயே பாரேன் " என்று முணுமுணுத்தபடி கணினியை உயிர்பித்து விட்டு தனது டைரியை திறந்தாள்.. அவளது பார்வை தன்னிச்சையாகவே அந்த புகைப்படத்தின் மேல் படிந்தது..
அப்போது அவனுக்கு 17 வயதிருக்கும் .. ஷக்தியை எதோ காரணத்திற்காக அவள் கோபப்படுத்தி விட்டாள்.. அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என்று அவள் அன்று முழுவதும் அவனை துரத்தி கொண்டே இருக்க , அவளுக்கே தெரியாமல் கதிர் எடுத்த படம் அது .. ஷக்தி எந்த உணர்ச்சியும் காட்டாமல் திரும்பி கொள்வது போலவும் , அவள் தோப்புகரணம் போடுவது போலவும் இருந்தது அந்த படம் .. அவளது பிறந்தநாள் அன்று அதை பரிசாய் தந்திருந்தான் கதிர் ! கூடவே இலவச இணைப்பாய் அடுத்த பக்கத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் ஏழு வைத்திருந்த கவிதை கண்ணில் பட்டது..
ஆசைதான் எனக்கும்
அடங்காமல் திமிராய் பார்க்கும்
உன்னை கரம் பிடித்து இழுத்து
அருகில் நின்று என் காதலை சொல்லிவிட
ஆசைதான் எனக்கும்
என் காதலை ஏற்றிட நீ தயங்கினால்
உன் கன்னத்தில் செல்லமாய் தட்டி
" என்னைவிட யாரடா உன்னை அதிகம் காதலித்துவிட முடியும் ?" என்று கேட்டுவிட
ஆசைதான் எனக்கும்
நீ காதலை ஏற்ற மறுநொடி
உன் அழகான கன்னத்தை செல்லமாய் கிள்ளி
காற்றில் முத்தங்களை பறக்கவிட்டு சிட்டாய் ஓடிவிட
ஆசைதான் எனக்கும்
நீ கண் விழிக்கும் முன்பே
உன் தேவைகள் அனைத்தையும் தயார் செய்துவிட்டு
உறங்கும் உனது கேசத்தை கலைத்துவிட
ஆசைதான் எனக்கும்
கைத்தொலைபேசியில் எடுத்து கொண்டு
நீ புகைப்படம் எடுக்கும்போதெல்லாம்
உன் கைவளைவில் நின்று தோள் சாய்ந்து புன்னகைத்துவிட
ஆசைதான் எனக்கும்
நீ கணினியில் மூழ்கிடும்போது
பூனை நடைபோட்டு
உன்னை கழுத்தோடு கட்டிக்கொண்டு என் காதலை சொல்லிவிட
ஆசைதான் எனக்கும்
தினமும் உனக்கு பிடித்த உணவுகளை சமைத்து
நீயே போதும் என்றாலும்
வற்புறுத்தி ஊட்டிவிட
ஆசைதான் எனக்கும்