கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்த போதே பிருத்வி அமர்ந்திருப்பது தெரிந்தது... ஆனால் அவன் அருகே அமர்ந்திருக்கும் பெண் யார்..?? அதுவும் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள்.. யாரது..?? மனதில் கேள்வியோடு அவளின் நடையின் வேகமும் குறைந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு தன் அம்மாவிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி மறுநாளே சென்னைக்கு வந்துவிட்டாள் சப்னா... வந்ததும் அன்று இரவே பிருத்வியை சந்தித்துவிட்டாள் அவள்... அவனிடம் பேசும் விதத்தில் பேசி... யுக்தாவை சந்திக்கும் வாய்ப்பை மறுநாளே திட்டமிட்டு இதோ இப்போது பிருத்வியுடன் உட்கார்ந்து அவளுக்காக காத்திருந்தாள்...
கொஞ்சம் தூரத்திலேயே யுக்தா வருவதை தெரிந்துக் கொண்டு சப்னாவிடம் அவளை காட்டினான் பிருத்வி...
இவளா யுக்தா...??? இவளா நியூயார்க்கில் இருந்து வந்திருப்பது... ஒரு சாதாரண சல்வாரில்... ஒற்றை பின்னலிட்டு... துப்பட்டாவால் சல்வாரின் முன்புறத்தை மறைத்து கொண்டு அவள் நடந்து வரும்போது... அப்பாடா இவளைப் பார்த்தா பயந்தோம் என்றிருந்தது சப்னாவிற்கு... ஆனால் இன்னும் கொஞ்சம் அருகில் வந்ததும் அவளின் அழகை பார்த்த சப்னாவின் அஸ்திவாரமே கொஞ்சம் ஆட்டம் கண்டது...
அரைமணி நேரம் செலவு செய்து இவள் போட்டுக் கொண்டு வந்திருக்கும் மேக்கப்போடு அவள் அருகில் போய் நின்றால் கூட அவள் அழகில் பாதி கூட இவளுக்கு இருக்காது என்று தான் சப்னாவிற்கு தோன்றியது... நியூயார்க்கிலிருந்து வந்திருப்பதால் மட்டும் இவளுக்கு யுக்தாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை...
அவளுடைய பெயரும் தான்... அவள் பெயர் சம்யுக்தா.. இவன் பெயர் பிருத்விராஜ்.. இது ஒன்றும் இயல்பாக அமைந்த பெயர் போல் தெரியவில்லையே... இவர்கள் அம்மா இருவரும் தோழிகள் என்கிறான்... அவளின் அம்மாவை அத்தை என்று அழைக்கிறான்... அவள் இவனுக்கு முறைப்பெண் போலத்தானே தெரிகிறது...
முறைப்பெண் ஏதாவது கிராமத்தில் இருந்து வந்திருந்தாள்... இவளுக்கு ஒன்றும் பெரிதாக தெரிந்திருக்காது... ஆனால் அவள் நியூயார்க்கிலிருந்து வந்தது தான் அவளை பார்க்கும் ஆர்வத்தை சப்னாவிற்கு ஏற்படுத்தியது...
ஆனால் அவள் அழகை பார்த்ததும் இவள் கொஞ்சம் கதிகலங்கி தான் போனாள்... பொதுவாக ஆண்கள் சைக்கலாஜியே மாடர்ன் பொண்ணைப் பார்த்து சைட் அடிச்சாலும்... கல்யாணம்ன்னு வந்தா குடும்ப பொண்ணுங்களை தேடுவது தான்... பிருத்வி இவ ட்ரஸ்ஸிங் சென்ஸைப் பார்த்து எதுவும் சொன்னதில்லன்னாலும்... பெண்களையே நிமிர்ந்து பார்க்காத பிருத்வி போன்ற ஆண்களுக்கு யுக்தா மாதிரி பெண்கள் ஒரு சாதாரண சல்வாரில் வந்தாக் கூட மயங்கி தான் போவர்... அதிலும் யுக்தாவை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு பிருத்விக்கு அமைகிறதே...
அதனால் சீக்கிரமே பிருத்வியோடு கல்யாணம் என்ற அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்கா போடனும்... என்று சப்னாவின் மனம் யுக்தாவை பார்த்து புலம்ப தான் செய்தது...
வீட்டில் வந்து சோஃபாவில் அமர்ந்தாள் யுக்தா...திரும்ப எப்படி மெயின் ரோட்டிற்கு வந்தோம்... எப்படி ஆட்டோ பிடித்தோம்... எப்படி வீட்டிற்கு வந்தோம் என்பது தெரியவில்லை யுக்தாவிற்கு... அனிச்சையாக அந்த செயல்கள் நடந்துக் கொண்டிருந்தாலும்... மனம் பீச்சில் நடந்ததை தான் நினைத்துக் கொண்டிருந்தது...
யாரவள்?? என்ற சந்தேகத்தோடு அவர்கள் அருகில் இவள் சென்றதும்... "சப்னா இது சம்யுக்தா" என்று இவளை சப்னாவிற்கு அறிமுகப்படுத்தியவன்... "யுக்தா இது சப்னா... நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிறோம்" என்று சப்னாவை இவளுக்கு அறிமுகப்படுத்திய போது... இவள் இதயமே ஒரு நொடி நின்று போனது... உலகமே ஸ்தம்பித்தது போன்ற உணர்வு....
ஆனால் இவளுக்கு இருக்கும் மனத்திடமும் தன் பலவீனத்தை மற்றவர் முன் வெளிக்காட்டக் கூடாது என்ற அவள் குணமும்... தன் அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு ஒரு சின்ன புன்னகையுடன் சப்னாவிடம் கைக்குலுக்கினாள் யுக்தா...
அதன்பிறகு அவளைப் பற்றிய தகவல்களை அவன் கூறிக்கொண்டிருந்தான்... தன் காதலுக்கு தன் அப்பா அம்மா சம்மதித்துவிட்டதாக கூறினான்... இன்னும் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்றான்... இதையெல்லாம் இவள் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்தாலும்... இவள் பார்வை சப்னாவின் செய்கையில் தான் இருந்தது...
இவன் என்னுடையவன் என்று அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்... அதை அவள் இயல்பாக செய்தாளா..?? இல்லை இவள் உணர வேண்டும் என்று செய்தாளா..?? இல்லை அவள் இயல்பாக செய்தது இவளுக்கு அப்படி தோன்றியதா..?? எப்படியோ... என்னத்தான் மனத்திடம் இருந்தாலும் இதற்கு மேலும் இவர்களோடு நிற்க முடியாது...