(Reading time: 32 - 64 minutes)

ந்த காதல் ஒன்றும் ஒரு வாரத்திலோ... ஒரு மாதத்திலோ... ஒரு வருடத்திலோ... தோன்றியதில்லையே... பன்னிரண்டு வருடம் அவன் மேல் வைத்த பாசம்.. அவனின் பிரிவு... அவனை நினைத்து அவள் ஏங்கிய ஏக்கம் இதன் பிரதிபலிப்பு தானே இந்த காதல்... இந்த காதலில் ஏற்பட்ட வலி சாதாராணமானது இல்லையே... பிருத்வியின் மனதில் எனக்கு இடமில்லையா... என் காதல் சொல்லாமலே செத்து போச்சான்னு அவள் உள்ளுக்குள்ளே அழுவது யாருக்கு தெரியும்...??

கவி ஃபோன் பண்ணும் போது கூட இவள் கவலையை மறைத்து அவளிடம் பேச படாதபாடு படுகிறாள் யுக்தா... என்ன மறைத்தாலும் கவிக்கும் யுக்தாவின் பேச்சில் மாற்றம் தெரிகிறது... அது என்னவென்று தான் தெரியவில்லை... என்னவாக இருந்தாலும் சம்யுக்காக தானே வேண்டியிருக்கிறோம் அதை நிறைவேற்றிவிட்டு செல்வோம் என்ற தீர்மானத்தோடு இருந்தாள் கவி...

எத்தனை பேர் எத்தனை விதமாக கடவுளிடம் வேண்டினாலும் யுக்தாவிற்கு நடக்கவிருப்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது தானே... அதை மாற்ற முடியுமா..?? இதை அறிந்திருந்தால் கவி யுக்தாவை பார்க்க உடனே சென்றிருப்பாளோ... கவி மூலமாக அவளும் ஆறுதல் தேடியிருப்பாளோ... அவள் மனதுக்குள்ளையே மறைத்து வைத்து புழுங்கியதுக்கு தானாக தேடி வந்த ஆறுதல் தான் யுக்தாவை பலவீனப்படுத்திவிட்டதோ...??

இரண்டு நாட்கள் கடந்திருந்தது... வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்த யுக்தாவிற்கு பிருத்வியிடம் இருந்து ஃபோன் வந்தது... புக் எக்ஸிபிஷன் நடப்பதாகவும் அதற்கு தன்னோடு வருமாறும் அழைத்தான்... பிருத்வியை அவளால் தவிர்க்கவும் முடியவில்லை... அவள் மனதை மறைத்துவிட்டு அவனோடு சாதாரண தோழி போல் பழகவும் முடியவில்லை... இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று அவள் யோசித்ததுதான்... ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை... இன்று அவனை தவிர்க்க வேண்டாம் என்று அவனுடன் செல்ல தயாரானாள்...

அவனே அழைத்துப் போக வீட்டிற்கு வந்தான்... சந்தேகம் ஊர்ஜிதமாகாத நிலையில் யுக்தா பிருத்வியுடன் செல்வதை சுஜாதா தடுக்க நினைக்கவில்லை...

ஒரு மாலில் நடைபெற்ற புக் எக்ஸிபிஷனில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள் இருவரும்...

"யுக்தா நீ ஏன் ஊரிலிருந்து வந்ததிலிருந்து வீட்டுக்கே வரல... இந்த எக்ஸிபிஷன் ரெண்டு மூன்று நாளா நடக்குது தெரியுமா..?? வீட்டுக்கு வந்தா உன்னை கூட்டிட்டு போலாம்ன்னு நினைச்சேன்..."

"சாவிம்மாவும் இல்ல... அம்மா தனியா வீட்ல இருப்பாங்க... அதான் நானும் அவங்கக் கூடவே இருந்துட்டேன் பிருத்வி... நான் இல்லைன்னா என்ன..?? பிரணதியையோ... இல்லை சப்னாவையோ கூட்டிட்டு வந்திருக்கலாமே...??"

"என்னது பிரணதியையும் சப்னாவையுமா..?? நல்லதாப் போச்சு போ.. அவங்களுக்கும் புக்ஸ்க்கும் ரொம்ப தூரம்... அவங்க பாடப்புத்தகத்தை படிக்கிறதே பெரிய விஷயம்... இதுல இந்த புக்கெல்லாம் எங்கப் படிக்கிறது..." அவன் காமெடியாக கூறினான்... அவள் மெலிதாக புன்னகைத்தாள்...

"இதுவரைக்கும் புக் எக்ஸிபிஷன்னா நான் மட்டும் தான் போவேன்... இந்த தடவை தான் நீ எனக்கு கம்பெனி கொடுக்குற... " அவன் பேசிக் கொண்டு வர முகத்தில் அதே புன்னகையோடு பேசாமலே வந்தாள்..

"என்ன யுக்தா... வந்ததிலிருந்து டல்லா இருக்க... ஏதாச்சும் உடம்பு சரியில்லையா..??"

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை பிருத்வி... நாம வீட்டுக்கு போலாமா..??"

"இரு யுக்தா எதாவது சாப்பிட்டு போகலாம்..."

"இல்லை பிருத்வி வேண்டாம்.."

"ஏதாவது லைட்டா சாப்பிடுவோமே... வீட்டுக்கு போய் லன்ச் சாப்பிட லேட்டாகும்... வெறும் ஜூஸ் மட்டுமாவது குடிச்சிட்டு போவோமா..."

"ம்.."

அந்த மாலில் உள்ள் ஃபுட் கோர்ட்டிற்கு சென்றார்கள்... அங்கே செல்ஃப் சர்வீஸ் என்பதால் அவளை உட்கார வைத்துவிட்டு அவன் சென்றான்... போகும் போது உனக்கு மாதுளம்பழம் ஜூஸ் தானே பிடிக்கும் வாங்கி வருகிறேன் என்றான்... இதுவே இரண்டு நாட்களுக்கு முன் என்றால்... எனக்கு மாதுளம்பழம் ஜூஸ் பிடிக்கும் என்று பிருத்வி ஞாபகம் வைத்திருக்கிறானே... என்று சந்தோஷப்பட்டிருப்பாள்..

ஆனால் இப்போது சந்தோஷப் பட முடியவில்லையே... அவன் சிறுவயதில் நட்பாக பழகியது போல தான் இப்போதும் பழகுகிறான்... இவள் காதல் கல்யாணம் என்ற கனவுலத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்...

இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது "ஹே யுக்தா..." என்ற குரல் அருகில் கேட்டது... குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் தேவா நின்றிருந்தான்...

"தேவா..."

"யுக்தா நீ என்ன இங்க தனியா உட்கார்ந்துகிட்டு இருக்க..."

"இல்லை தேவா... ஃப்ரண்ட்டோட புக் எக்ஸிபிஷன்க்கு வந்தேன்... ஆமா நீ எப்போ ஊரிலிருந்து வந்த.."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.