(Reading time: 32 - 64 minutes)

ருவருக்கும் வாழ்த்து கூறிவிட்டு... ஒரு வேலையாக வேறு இடத்திற்கு செல்லவேண்டும் என்று  கூறி அவர்களிடம் விடைப்பெற்றாள்... "தனியாக போய்டுவியா.. நாங்களும் உன்னோடு வருகிறோமே" என்று அவன் அக்கறையாக கேட்டான்... இவர்களை தவிர்க்கவே இவள் பொய்யுரைக்கிறாள் என்பது தெரியாமல்... வேண்டாமென்று மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்...

ஆட்டோவில் வீடு வரும்வரையிலும்... வீடு வந்தப் பிறகும் அவளது ஒரே யோசனை... அவனை காதலிக்க ஆரம்பித்த நொடிகளிலிருந்து அவள் மனதில் நினைப்பது... பிருத்விக்கு என் ஞாபகம் இருக்குமா..?? அவன் மனதில் எனக்கு இடம் இருக்குமா..?? என்பது தான்... ஆனால் அவன் மனதில் வேறொரு பெண்ணுக்கு இடம் அளித்திருப்பான் என்று அவள் நினைத்ததில்லை... ஏன் அப்படி நினைத்து பார்க்கவில்லை...?? ஏனென்றால் அவளால் அப்படி நினைத்து பார்க்க முடியாது... பிருத்வியை இன்னொரு பெண்ணோடு சேர்த்து அவளால் நினைத்து பார்க்க முடியாது... ஆனால் இன்று அது நடந்திருக்கிறதே.. இவளின் பிருத்வி வேறொருவளுக்கு சொந்தமாக இருக்கிறானே...

"யுக்தா டீ எடுத்துட்டு வரவா..?? என்ற தன் அம்மாவின் குரலில் தான் நினைவுலகுக்கு வந்தாள் அவள்...

"வேண்டாம்மா" என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு போனவள் அப்போது தான் தன் அம்மாவைப் பற்றி யோசித்தாள்.... தன் அம்மாவின் விருப்பமும் இதுதானே... இவளுக்கும் பிருத்விக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பது தானே..?? அம்மா இப்போதெல்லாம் அதைப்பற்றி பேசவில்லையென்றாலும்... அவர்களுக்கு அந்த ஆசை இருக்கிறது என்பது இவள் அறிந்தது தானே...

பிருத்வி சொன்னதைப் பார்த்தால் மதி அத்தைக்கு பிருத்வியின் காதல் தெரிந்திருக்கிறது... பிறகு ஏன் தன் அம்மாவிடம் சொல்லவில்லை... முன்பே இதை அறிந்திருந்தால்... அறிந்திருந்தால் மட்டும் என்ன செய்வாய்... எப்படி இருந்தாலும் பிருத்வி உனக்கில்லையே... என்று அவளே அவளை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தாள்...

அவளால் வெளிப்படையாக அழக்கூட முடியவில்லை... அம்மாவும் அப்பாவும் வீட்டிலேயே இருக்கின்றனர்... அவர்களுக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று உள்ளுக்குள்ளே அழுதுக் கொண்டிருக்கிறாள்...

அதற்காகவே பேருக்கு சாப்பிட்டு வந்துவிட்டாள் தனது அறைக்கு... தூக்கம் தான் வரவில்லை... அதிக சந்தோஷம் இருந்தாலும் தூக்கம் வரவில்லை... அதிக சோகம் என்றாலும் தூக்கம் வரவில்லை... கவியிடமாவது கொஞ்ச நேரம் பேசலாம் என்று நினைத்தாள்... பிறகு அதுவும் வேண்டாமென்று விட்டுவிட்டாள்...

கவியிடம் இவள் சோகத்தையெல்லாம் மறைக்க முடியாது... இவளை அறியாமலே அதை வெளிப்படுத்திவிடுவாள்... ஏற்கனவே இவளை நினைத்து அவள் வருந்திக் கொண்டு தான் இருப்பாள்... இதில் இவள் வேறு அவளை வருத்தப்பட வைக்க வேண்டுமா..?? அவள் இங்கு வந்தப் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்...

வெகுநேரமாக யுக்தாவின் அறையில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் சுஜாதா... நியூயார்க் என்றால் நேரம் காலம் தெரியாமல் கவியும் இவளும் வீடியோ சேட்டிங்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்... இங்கேயும் இருவரும் ஒன்றாக இருந்தாலும் அதே கதை தான்... ஆனால் இன்று ஏன் இன்னும் விளக்கு எரிகிறது... மொபைல்ல ஏதாவது நோண்டிக்கிட்டு இருந்தாலும் லைட் எரிய தேவையில்லையே... யோசனையோடு அவள் அறைக்குச் சென்றாள் சுஜாதா...

அங்கு யுக்தாவோ கட்டிலில் அமர்ந்துக் கொண்டு மடியில் தலையணை வைத்து அதன் மேல் கையை ஊன்றி இரு கன்னத்திலும் கை வைத்து உட்கார்ந்திருந்தாள்...

"யுக்தா இன்னும் தூங்கலையா.. ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க..."

"தூக்கம் வரலைம்மா..."

"என்ன யுக்தா சாயந்திரத்துல இருந்து ஒரு மாதிரி இருக்க... என்ன இன்னும் நீயும் கவியும் சமாதானமாகலையா..?? நான் வேணும்னா கவிக்கிட்ட பேசவா..??"

"இல்லம்மா... கவி என்கிட்ட பேசிட்டா... நம்ம குலதெய்வம் கோவில்ல எதோ வேண்டுதல் இருக்காம்... ஒரு வாரம் கழிச்சு வரேன்னு சொன்னாமா.. கொஞ்ச நாளா அவக்கூட பேசிட்டு அப்புறம் தூங்குவேனா... ரெண்டு நாளா அவ இல்லாம தூக்கம் வர மாட்டேங்குது... அம்மா உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா..."

"என்னடா இதெல்லாம் கேக்கனுமா... வா படுத்துக்க..."

யுக்தா சுஜாதா மடியில் படுத்துக் கொண்டாள்.. சுஜாதா அவள் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தாள்... தாய் மடியில் தலை வைத்ததும் தன் கவலைகளை சிறிது நேரம் ஒதுக்கி விட்டு உறங்க ஆரம்பித்தாள் அவள்...

மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜாதா... தன் மகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்... ஏன் மாலையிலிருந்து ஒரு மாதிரி இருக்கிறாள் இவள்... கவியோடு சண்டை என்றால் கூட இவள் இவ்வளவு கவலையாக இருக்கமாட்டாளே... உடனே சமாதானம் ஆகிவிட முயற்சி எடுப்பாள்... ஆனால் கவியோடும் பேசிவிட்டேன் என்கிறாளே... பிறகு ஏன் ஒரு மாதிரி இருக்கிறாள்... இன்று என்ன ஆனது...???

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.