12. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்
அப்படியே அதிர்ச்சியில் உரைந்து போய் உட்கார்ந்திருந்தான் விஷ்ணு.
அதற்குள் ஹாலில் இருந்த மற்றொருவர் எழுந்து “ஐயா, நான் உங்கள் விசிறி, உங்களின் அனைத்துப் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். உங்களது தனித்தன்மையே எதார்த்தம் கலந்த கதையும், கதையில் வரும் சம்பவங்கள் எங்கள் வாழ்வில் நடந்த எதோ ஒரு சம்பவத்தை ஞாபகம் செய்வது போல் இருப்பதும்தான். ஆனால் நீங்கள் கூரிய இக்கதை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று தன் அபிமான எழுத்தாளரின் சாயல் இப்போது அவர் கூறிய கதையில் இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
அதற்குக் குமரன் “ முதலில் என் விசிறி என்று தாங்கள் கூறியதற்கு நன்றி. இந்தக் கதை தங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்னர் இதே போல் பல கதைகள் எனக்குள் உதித்ததுண்டு ஆனால் அக்கதைகளை எழுத என் மனம் ஒப்பவில்லை. ஆனால் இக்கதையை எழுதியே திர வேண்டும் என்று எனக்குள் ஒரு எண்ணம். யார் அறிவார், இந்தக் கதை கூட யாருடைய வாழ்விலாவது நடந்திருக்கலாம்” என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.
விஷ்ணுவிற்குக் குமரன் தன்னைப் பார்த்து அதைக் கூறியது போலத் தோன்றியது.
மீண்டும் தொடர்ந்த குமரன் “இந்தக் கதை கரு மட்டுமல்ல, இந்த முழுக் கதை அனுபவமே எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. எனது முந்தைய கதை அனைத்தும் குருவில் இருந்து புத்தகமாய் மாற 8 மாதம் முதல் 1 வருடம் வரை கால அவகாசம் தேவைப் பட்டது. சில கதைகள் பாதிவரை எழுதி வேண்டாம் என்று கை விட்டதும் உண்டு. முதல் முறையாக இந்தக் கதை மட்டும்தான் வார வெளியீடு, குறுகிய காலத்திற்குள் புத்தகமாக வெளியீடு என்று முடிவு செய்துள்ளேன்” என்று இந்தக் கதையை பற்றிய தனது அனுபவத்தைக் கூறினார்.
அதற்குள் கதிரவன் எழுந்து “இக்கதையில் எமன், எமலோகம் என்று வந்தாளும் இது ஒரு அழகிய, மென்மையான காதல் கதை என்பதால், இக்கதையைப் புத்தகமாக காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். வரும் வாரம் சனி கிழமையில் இருந்து இக்கதையின் சிறப்பு மலர் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிப்ரவரி 14 அன்று வெளியாகும் புத்தகத்தில்தான் இக்கதையின் இறுதி பாகம்(climax) வெளிவரும்.” என்று கதை வெளியீட்டின் கால அவகாசத்தைக் கூறினார்.
(என்னடா இவன் விஷ்ணுவின் 90 நாள் கெடு, அனுவின் திருமணம், இப்போது புத்தகத்தின் கிளைமாக்ஸ் என அனைத்தையும் பிப்ரவரி 14 அன்று வைத்திருக்கிறான் என்று திட்டாதீங்க.)
அதற்குள் அப்பத்திரிக்கையின் எடிட்டர் சிவனேசன் எழுந்து “இந்த குறுகிய காலக் கட்டத்திற்குள் எப்படிச் சார் முடியும்” என்று தன் எம்டியை கேட்டார்.
“கண்டிப்பா முடியும் சிவனேசன். ஐயா அவர்கள் 90 சதவிகித கதையை தன் சிந்தனையில் முடித்துவிட்டார். எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. எனது ஊழியர்களான உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் கண்டிப்பாக குறித்த தேதியில் வெற்றிகரமாக இந்தப் புத்தக விழா நடைப் பெரும்” என்று தன் ஊழியர்களின் குழப்பத்தைப் போக்கும் விதத்தில் பதில் அளித்தார் கதிரவன்.
விஷ்ணுவிற்கு இன்னும் அதிர்ச்சிக் குறையவில்லை. அந்த ஹாலில் இருப்பவர் அனைவரும் தன்னையே பார்ப்பது பேலவும், குமரன் தன்னை பார்த்தே பேசுவது பேலவும் ஓர் உணர்வு இருந்து கொண்டே இருந்தது.
கதிரவன் சற்று குமரனிடம் பேசிவிட்டு மீண்டும் தன் ஊழியர்களைப் பார்த்து “இப்போது களையலாம். மதியத்திற்கு மேல் ஒவ்வொரு துறையினர் இடத்திலும் இக்கதை வெளியீடு பற்றி தனியாகப் பேசுவோம்” என்று கூறிவிட்டு கதிரவனும், குமரனும் செல்ல, ஒரு சிறு சல சல போடு மீட்டிங் ஹால் காலியாக ஆரம்பித்தது.
அனைவரும் நகர்ந்து செல்ல விஷ்ணு மட்டும் கல் சிலை போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றி நடப்பது யாவும் உண்மையா என்று நம்பமுடியாமல் குமரன் அமர்ந்திருந்த இடத்தையே அதிர்ச்சி குறையாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.
எங்கோ சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவன் மனதைத் தட்டி இழுப்பதுபோல், அவன் தோளை தட்டியது ஒரு கை. தட்டுவது யார் என்று திரும்பி பார்த்தால் அங்கு சந்துரு நின்று கொண்டிருந்தான்.
“மீட்டிங் முடிந்து அரை மணி நேரம் ஆச்சி, தூங்கியது போதும் எழுந்து வா” என்று ஒரு நக்கல் சிரிப்போடு கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அப்போதுதான் விஷ்ணுவிற்கு உறைத்தது, காலியான ஹாலில் தான் மட்டும்தான் அமர்ந்து இருக்கிறோம் என்று. சந்துருவின் நக்கல் பேச்சைக் கேட்டு தூரத்தில் இருந்த ஆறுமுகம் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆறுமுகத்தை ஒரு முறைப்பு முறைத்து விட்டு அந்த இடத்தைவிட்டு அகன்று சென்று தன் இடத்தில் அமர்ந்தான் விஷ்ணு. உட்கார்ந்தவன் மனதில் எழுந்த கேள்விகள் இவை “எழுத்தாளருக்கு எப்படி என் கதை தெரியும்? இவை எல்லாம் திட்டமிட்டு நடை பெறுகிறதா இல்லை தற்செயலாக நடக்கிறதா? திட்டமிட்டு என்றால் என்னைப் பற்றி எனக்கும் எமனுக்கும் மட்டும்தான் தெரியும் ஒரு வேளை இதுவும் அந்த எமனின் நாடகம் தானோ? என்று குழப்பத்தில் தன் தலையை தேய்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.