அதி திருமணம் வரை காத்திருக்க நினைப்பது அப்பா சொல்லும் தயார் நிலை இன்மை என்ற வகை கிடையாதுதான்……இருந்தாலும் தாமதிக்க வேண்டும் என்ற நிலையே… ‘இப்ப கல்யாணம் செய்ய தயாரா இல்லாதவன் எதுக்கு கல்யாண பேச்சை ஆரம்பிச்சே?’ என அப்பாவிடம் இருந்து கண்டிப்பாக பேச்சு வாங்கித் தரும்…. இருந்தாலும் இதை சொல்லி அதிய தான் திரும்பவும் கன்வின்ஸ் செய்ய ட்ரை பண்ணுவாங்களே தவிர….எந்த காரணத்துக்காகவும் பவிய வேண்டாம்னு யாரும் சொல்லப் போறது இல்லை….
ஹூம் அதி இப்பதான் இயல்பாகிட்டு வர்றான்…இன்னும் கொஞ்ச டைம்ல அவனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாம்தான்….ஆனா இப்ப தேவையில்லாம ப்ரஷர் போடுறது சரியா? இல்லை ஒரு கல்யாணத்தை பார்த்து அதி மனசு இளகி இருக்கும் இந்த டைம் தான் கல்யாணம் பேச கரெக்டான நேரமோ? சே நான் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கனுமோ…? ஆனா பவி வீட்ல வேற கல்யாண பேச்சு ஆரம்பிச்சாச்சே…இப்ப எப்டி சும்மா இருக்கவாம் ?..... எது எப்டினாலும் இவன் வகையில் யாரும் பவிக்கும் இவனுக்கும் இடையில் வந்து நிற்க போவது இல்லைதான்….
ஆனால் பவிக்கு இந்த விஷயம் எப்படி இருக்கும்? என் அப்பாட்ட அவ இப்டி மாட்டிக்கிறது எப்டி இருக்கும்? வாழ்நாளைக்கும் அப்பாவைப் பார்க்கப்ப கஷ்டமா இருக்குமே???
அவசர அவசரமாக அப்பாவிடம் போனான்… போய் அப்பா கைல இருந்த பையை உரிமையாய் ஒரு பிடுங்கு…. “முதல்ல இதை தாங்க…”
“டேய் ஏன்டா…? வேணும்னா அங்க தருவாங்களே…?” அப்பா சொல்லிக் கொண்டு இருக்கும்போதே பையை திறந்து உள்ளே கிடந்த பேப்பரை அங்கிருந்த லட்டோடு சேர்த்து கையில் எடுத்துக் கொண்டான்…..”உங்களுக்கு ஸ்வீட் கிடையாது…” மீண்டுமாய் தாம்பூலப் பையை அப்பாவிடமே கொடுத்துவிட்டான்….
அப்பா பொற்பரன் எழுபதிகளில் இருப்பவர்….அவருக்கு ஸ்வீட் சாப்பிட ரெஸ்ட்ரிக்க்ஷன் உண்டு….கண்ணில் பார்க்காதவரை சாப்பிட நினைக்கல்லாம் மாட்டார்…..ஆனால் கையில் இருந்தால் சாப்பிட ஆசைப் படுவார்தான்…..
இப்பொழுது அவர் மகனைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்புடன் தலையாட்டிவிட்டுப் போய்விட்டார்….
எல்லாவற்றையும் பார்த்திருந்த பவிஷ்யாவுக்கு இப்போதுதான் உயிரே திரும்பி வந்தது…..இருந்தாலும் மனதிற்குள் ஒரு குற்ற உணர்ச்சி….இப்படி அம்மா அப்பாவை இல்லை யாரையாவது அவள் இதுவரை எதற்காகவாவது ஏமாத்தி இருக்காளா? இந்த அபயனை சந்திக்க விரும்பும் ஒவ்வொரு நொடியும் அவள் யாரையாவது ஏமாத்த வேண்டி இருக்கிறதே…..!!! அதுவும் குறிப்பாக அவள் பெற்றோரை…..ஏன் அவன் பெற்றோரையும் கூடத்தான்….
அடுத்து ‘ஏற்கனவே நேரமாகிட்டு…போய்ட்டு இன்னைகே மறுவீடு வரனும்…’ என்ற பரபரப்புடன் நிலவினியை யவ்வனுடன் காரேற்றி விட்டனர்…. நிச்சயமாய் அம்மா வீட்டை விட்டு அடுத்த ஊருக்கு போகிறோம் என்ற உணர்வே வரவில்லை நிலவினிக்கு….ஏனெனில் ஏதோ டைமுக்கு பிடிக்க வேண்டிய ட்ரைனை மிஸ் செய்துடக் கூடாது என கிளம்பும் போது இருப்பது போல் ஒரு பரபரப்பு தான் இருந்தது சுற்றி இருந்தவர்களிடம்……அதைத்தான் அவளாலும் உணர முடிந்தது.
யவ்வனுடன் என்றாலும் இப்பொழுது காரை ட்ரைவ் செய்தது அபயன். யவ்வன் எதுவும் இவளுடன் பேச முயலவே இல்லை… ‘ஓ இவள் கோபப் பட்டு தம்பி முன்னால நம்ம சண்டை ரகசியம் வெளிய வந்துடக் கூடாதுன்னு நினைக்கான் போல…..’
இவளுக்கும் இவர்கள் திருமணத்திற்கு அடிப்படை காரணமான அந்த போட்டோவைப் பத்தி யாரிடமும் பேச மனமிருக்கிறதாமா என்ன? ஆனாலும் இந்த யவ்வனின் பயம் இவளுக்கு பிடித்திருக்கிறது….இதை வச்சு இவன் கண்ணுல விரலவிட்டு ஆட்டலாமோ?????
அடுத்து இவர்கள் கொண்டல்புரம் ரீச் ஆக இவர்களை உரிய விதமாய் வரவேற்று அந்த வீட்டின் மாபெரும் வரவேற்பறையில் இருந்த கூட்டத்திற்கு மத்தியில் இவர்களை அமரவைத்த போது நிலவினியின் உறவினர் வந்து சேர்ந்தனர்….
பால் பழம் நிகழ்ச்சி….இவளை அவனுக்கும் அவனை இவளுக்குமாய் பழம் பாலெல்லாம் ஊட்டச் சொல்லி….ஏதோ இயந்திர கதியில் கடமைக்கு என செய்தால் கூட, உள்ளே கிடு கிடு என்றுதான் இருக்கிறது இவளுக்கு….
அது முடியவும் “மாடிக்கு கூட்டிட்டுப் போய் வீட்டை காமி யவி….வினி…..வினி வீட்ல எல்லோரும் பார்க்க ஆசைப்படுவாங்கல்ல”
என்ற அவனது அம்மாவின் வார்த்தையை தொடர்ந்து அவன் வரவேற்பறையிலிருந்த மாடிப் படியில் ஏற….வேறு வழி இன்றி அவனைப் பின்பற்றி இவள்….இவள் கூட இவளோட அம்மா….பெரியம்மா.. அக்கா, பவி, ரெஜி என எல்லோரும் வருவதுதான் ஒரே ஆறுதல்…
கீழிறிருந்து படி வரவேற்பறையிலிருந்து ஏறினாலும்…மாடியில் படிகள் இவர்களது போர்ஷனுக்கு வெளியில் முகப்பில் தான் இருக்கின்றது…..அதற்கு மேலுள்ள தளம் போகிறவர்கள் இவர்களது போர்ஷனுக்குள் வர வேண்டிய அவசியமே இல்லை…அப்படி முகப்பிலேயே மேல் நோக்கிய படிகளும் அமைந்திருக்கின்றன…. வீட்டிற்குள் போனால்….ஏதோ இப்போதுதான் கட்டியது போல அத்தனை புதுசாய் இருக்கிறது வீடு…..
4 படுக்கை அறை….ஹால், டைனிங், கிட்சன் என எல்லாம் இங்கேயே….நிலவினிக்கு ‘இவர்கள் இருக்கப் போவது தனிக்குடித்தனமா?’ என்ற கேள்வி வித்யாசமான உணர்வை உள்ளே கிளறி விடுகிறது….