13. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
இருளை விலக்கிக் கொண்டு சூரியன் மேலெழும்பியது... மெல்ல இருள் விலகி வெளிச்சம் பரவ ஆரம்பித்தது... பறவைகள் கீச் கீச் என்று சத்தமிட்டது... இதைப் பார்க்கும் தருணம் கிடைத்தால் அதை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
முழுதாக கட்டி முடிக்காத அவனின் மேற்பார்வையில் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் அப்போது தான் புதிதாக போட்ட சிமெண்ட் தரையில் அந்த விடியலை பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் பிருத்வி... ஆனால் அவனுக்கு இருந்த மனநிலையில் அதை ரசிக்கவா முடிந்தது..?? மனம் சில மணி நேரங்களுக்கு முன்னாடி நடந்ததை தான் நினைத்துக் கொண்டிருந்தது...
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பிருத்விக்கு காலிங்பெல் சத்தம் ஏதோ கனவில் கேட்பது போல் இருந்தது... ஆனால் தொடர்ந்து கேட்ட காலிங்பெல் சத்தம் அவனது வீட்டில் தான் அடிப்பதை உணர்ந்து முழித்துக் கொண்டான் அவன்... தலை விண் விண்ணென்று வலித்தது.. மணி பார்த்தால் இரண்டு என்று காட்டியது...
இந்த நேரத்தில் யார் வந்திருப்பது... அம்மா அப்பா ஏன் எழுந்து வரவில்லை என்று நினைத்துக் கொண்டே எழுந்தான்... பார்த்தால் அவனுக்கு அருகில் ஒருக்களித்து படுத்திருந்த இவனின் முதுகை பார்த்தாற் போல் படுத்திருந்தாள் யுக்தா... அதுவும் அவனை ஒட்டினாற் போல் படுத்திருந்திருக்க வேண்டும் என்பது அவள் படுத்திருந்ததை வைத்தே அறிய முடிந்தது...
அதை பார்த்த அவனுக்கு அதிர்ச்சி... இவள் எப்படி என் அறையில்... அதுவும் என் படுக்கையில்...?? அப்போது தான் ஞாபகம் வந்தது... அவனுடைய குடும்பத்தார் பாண்டிச்சேரிக்கு சென்றது... இவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்... யுக்தா வீட்டிற்கு வந்தது... சேர்ந்து சாப்பிட்டது... பரிசுப் பொருட்களை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தது... ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று ஞாபகம் வரவில்லை... இவள் இரவு வீட்டிற்கு போகவில்லையா..?? என்ன நடந்திருக்கும் என்று யோசித்தான்... தலைவலியில் எதுவுமே ஞாபகம் வரவில்லை...
ஆனால் என்ன நடந்திருக்க கூடும் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது... தொடர்ந்து காலிங்பெல் சத்தம் கேட்டது... இப்போது வந்திருப்பவர்கள் யார் என்றும் இவனுக்கு புரிந்தது... காலையில் வருகிறோம் என்று சொன்னவர்கள் இப்போது வந்திருக்கும் காரணமும் புரிந்தது...
ஆனால் அந்த காலிங்பெல் சத்தத்திற்கு கூட யுக்தா விழிக்கவில்லை... அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்... இவளுக்காவது இங்கு நடந்திருப்பது தெரிந்திருக்குமா..?? இல்லை இவளுக்கும் என் நிலை தானா..?? அப்போதும் யோசித்துப் பார்த்தான்... ஒன்றுமே ஞாபகத்திற்கு வரவில்லை... யாரும் இல்லாத நேரத்தில் இவளை வீட்டிற்குள் அனுமதித்திருக்க கூடாதோ..?? தலையை பிடித்துக் கொண்டான்..
தொடர்ந்து காலிங்பெல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது... இப்போ என்ன செய்வது..?? சிறு வயதில் இருந்தே ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை அவன் பெற்றோரிடம் மறைக்கவோ... மறுக்கவோ... இல்லை அந்த தவறை வெறொருவர் மீது போடவோ.. அவன் என்றுமே நினைத்ததில்லை... அவன் குற்றத்தை ஒத்துக் கொள்வான்... திரும்பவும் அதுபோல் எதுவும் தவறு செய்யாமல் இருக்கவும் முயற்சிப்பான்..
அதனால் தான் என்னவோ... அவனுக்கு வேண்டியவர்கள் தவறு செய்து அதை மறைத்தாளோ... இல்லை மறுத்தாளோ.. நியாயப் படுத்தினாளோ... அவனுக்கு கோபம் வருகிறது... ஆனால் இந்த தவறை தன் பெற்றோரிடம் எப்படி சொல்ல முடியும்... இது என்ன சாதாரண தவறா..?? என்ன செய்வது என புரியவில்லை...
விடாமல் காலிங்பெல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது... இதற்கு மேலும் கதவை திறக்காமல் இருக்க முடியாது... எழுந்து அவனை சரிப்படுத்திக் கொண்டு அவளை எழுப்பினான்...
"யுக்தா.. யுக்தா.." அவளை தட்டி எழுப்பினான்... மெல்ல அசைவு அவளிடம் மெதுவாக கண் திறந்தாள்..
"யுக்தா... அப்பா அம்மா வந்துட்டாங்க... ரொம்ப நேரமா பெல் அடிக்கிறாங்க... உனக்கு இங்க என்ன நடந்ததுன்னு ஏதாவது புரியுதா..?? இங்கப் பாரு என்ன ஏதுன்னு பேச இப்போ டைம் இல்ல... நான் கதவை திறக்கப் போறேன்.. உன்னை சரிப்படுத்திக்க.." சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே போனான்..
வெளியே வந்தவன் கொஞ்சம் நிதானமாகவே கதவை திறந்தான்.. வெளியே நின்றிருந்தவர்கள் முதலில் கேட்ட கேள்வி "பிருத்வி யுக்தா எங்கடா.." என்பது தான்... தெரியும் இவனுக்கு இவள் வீட்டுக்கு போகவில்லை என்று இவளது பெரியம்மா இவளை தேடியிருப்பார்கள்..
"ரெண்டுப்பேருக்கும் ஃபோன் ட்ரை பண்றோம் ஏண்டா ஃபோனை எடுக்கல..." அவன் அப்பா கேள்வி கேட்டார்... அப்போது தான் இவன் மொபைலும் யுக்தாவின் ஹேண்ட் பேகும் ஹாலில் இருக்கிறது என்பது புரிந்தது...
"என்னடா அமைதியா இருக்க... யுக்தா எங்க.."