தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்,
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா....
காதல் கண்கள் உறங்கிடுமா....
மெல்லிய ஒலியில் பின்னணியில் ஒலித்த இந்த பாடல் மதுவின் மனதில் மதியின் நினைவலைகளை கொண்டு வந்து கொட்டியது.
காதலை பொறுத்தவரை அது மிக சுயநலமானது. தன்னுடையவனின் தன்னுடையவளின் சந்தோசமே அதற்கு பிரதானம். தன்னை பற்றி கவலை கொள்ளாது. அப்படியென்றால் அது பொதுநலம் தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் தன்னுடையவளின்/தன்னுடையவனின் சந்தோசமே அவர்களை சந்தோஷப்படுத்தும். மறைமுகமாக தன்னுடைய சந்தோசத்தை அவர்கள் பெரிதாக நினைப்பதாலே காதல் சுயநலமுடையதாகிறது.
மதி இன்னும் தனக்காக காத்திருப்பதை நினைத்து மதுவிற்கு வருத்தம் தோன்றினாலும் தன் மேல் அவனுக்கு உள்ள காதலை எண்ணி அவள் மனம் ஒரு புறம் கர்வம் கொண்டது, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்றெண்ணி அவள் உள்ளம் உவகை கொண்டது. அவனுடன் தன்னை சேர விடாமல் செய்த இந்த விதியை எண்ணி வேதனை கொண்டாள். ஆனால் அந்த விதியை தன்னால் மாற்ற இயலும் என்ற நம்பிக்கை ஏனோ அவளுக்கு வர வில்லை. தன்னவனுக்காக தான் செய்யும் இந்த தியாகம் தன்னவனை மகிழ்விக்காது என்று அந்த பெண் மனதிற்கு புரிந்திருந்தும் தன்னுடைய வேதனை அவனுக்கு தெரியுமானால் அது அதைவிட கொடும் வலியை அவனுக்கு கொடுக்கும் என்று அஞ்சினாள். தான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை வலிக்கும் என்று தெரிந்தும் அவன் படிக்காமல் இருக்கும் போது அடிக்கும் அன்னைக்கு தெரியும் இதை விட கொடும் வேதனையும் வலியும் அவன் வாழ்வில் வரும் படிக்கவில்லையென்றால் என்று. அதனால் தான் வருந்தும் தன் மனதை கல்லாக்கி கொண்டு தன் பிள்ளையை கண்டிக்கிறாள் அன்னை. காதலும் தாய்மையின் மறு உருவம் அல்லவா. எதை பற்றியும் ஏன் தன்னை பற்றி கூட சிந்திக்காமல் தன் பிள்ளையின் நல்வாழ்வை பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலம் கொண்டது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
மெல்ல காரின் கதவில் சாய்ந்து கண்களை மூடியவள் எண்ணத்தில் நடந்தவை யாவும் ஒரு கனவு போல ஓடியது.
சரணிடம் மதியிடம் கூற வேண்டியதை சொல்லி அனுப்பியவன் தன் அறையை அடைத்து கொண்டு வாய் விட்டு அழுதாள். தன்னையே திட்டி கொண்டாள். கடவுளை குறை கூறினாள். விதியின் மேல் குற்றம் சாட்டினாள். அழுதழுது தலையின் வலி அதிகமாக அப்படியே உறங்கி போனாள். எத்தனை நேரம் அப்படி உறங்கினாளோ எங்கோ தூரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. மெல்ல கண்ணை விழித்து பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை. மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்கவே மெல்ல எழுந்து வந்து கதவை திறந்தவள் எதிரில் நின்ற தன் தந்தையை கண்டு மெல்ல புன்னகைக்க முயன்றாள்.
"என்னடா ராஜாத்தி தூங்கிட்டு இருந்தியாம்மா ? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" - சிவசண்முகம்
"ச்சே ச்சே இல்லைப்பா. பாத்ரூம்ல இருந்தேன் பா. " என்றவள் அப்போது தான் தன் தந்தையின் பின்னால் நின்றிருந்தவர்களை கண்டாள். அவளின் பார்வையை உணர்ந்தவராக "வாம்மா உள்ள உக்காரலாம். " என்று தன்னுடன் வந்தவர்களையும் அழைத்து கொண்டு உள்ளே சென்று அமர்ந்தார்.
"அம்மாடி இது என்னுடைய பால்ய சிநேகிதன் விச்சு. இது அவருடைய பையன் முரளி. " -சிவசண்முகம்
"வணக்கம் அங்கிள். அப்பா உங்களை பத்தி நிறைய சொல்லிருக்காரு." என்ற மதுவிடம், "ஆமாம்மா என்கிட்டயும் அவன் எப்பவும் உன்னை பத்தி தான் பேசுவான் " என்றார் விச்சு என்கிற விஸ்வநாதன். அதுவரை கண்ணில் சற்று அதிர்ச்சியுடனும் ஆச்சார்யத்துடனும் மதுவை பார்த்திருந்த முரளி "ஹாய் மது ஐயம் முரளி" என்று மதுவை நோக்கி கையை நீட்டினான். நடபுடன் தன்னை நோக்கி கையை நீட்டிய முரளியை மதுவிற்கு ஏனோ பிடித்து போனது.
பொதுவாக சில விஷயங்களை பேசியவர்கள், "அம்மாடி மது எனக்கு ஒரு சின்ன உதவி வேணும்." என்றார் விஸ்வநாதன்.
தான் இருக்கும் நிலையில் தன்னால் இவருக்கு என்ன உதவி செய்ய இயலும் என்று புரியாமல் பார்த்தாள் மது.