அவள் தன்னை அதிகம் நேசிக்கிறாள் என்று தெரியும்… எனினும் இப்படி ஒருநாள் அவள் உருகக்கூடும் என்றெண்ணியே அவன் சற்று விலகியே இருந்தான் அவளிடம்… இன்று அவள் தன் மனதை கொட்ட, அவனுக்கு பேச்சே வராது போனது….
“எனக்கு உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு கார்த்தி… அவ்வளவுதான்… இதுக்கு மேல நான் என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியலை கார்த்தி…”
சொல்லிக்கொண்டே இருந்தவளுக்கு உதடு துடிக்க ஆரம்பிக்க, மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்….
“இந்த முப்பது நாளும் முப்பது யுகமா போச்சுன்னு சொன்னா நம்பமுடியுமா உங்களால?... ஆனா எனக்கு அப்படித்தான் இருந்துச்சு… உங்ககிட்ட பேசாம என்னால இருக்கமுடியலை கார்த்தி… நிஜமாவே இருக்கமுடியலை… நானும் என்னை எவ்வளவோ கன்ட்ரோல் பண்ண முயற்சி செய்யுறேன்… ஆனாலும் என்னால முடியலை… உங்க மேல வச்ச காதல் முன்னாடி தோத்து போய் தான் நிக்குறேன் இப்போவரை… நான் ஜெயிக்கணும்ங்கிற ஆசை எனக்கு வரவே மாட்டிக்குது…”
சொல்லிவிட்டு விரக்தியாக புன்னகைத்தவள்,
“என்னை ஏன் கார்த்தி இப்படி படுத்தி பார்க்குறீங்க?... உங்ககூட நான் வாழணும்னு ஆசைப்பட்டு ஏங்கி நிக்குறது உங்களுக்கு புரியலையா?... இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்குறீங்களா?...”
அவளது அழுகுரல் அவன் செவிகளை தீண்ட, அவன் நிலைகொள்ளாது தவித்தான்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“உங்க மனசை நீங்க சொன்னபிறகும், நான் உங்களை தொந்தரவு பண்ணுறேன்னு எனக்கே நல்லா தெரியுது… ஆனாலும் என்னால என்னை மாத்திக்க முடியலை…”
சிறிது இடைவெளி விட்டவள், “ரொம்ப கஷ்டமா இருக்கு கார்த்தி… ஒருதடவையாவது உங்க கையை நான் பிடிச்சிக்கணும் கார்த்தி… பிடிச்சுக்கவா இப்போ?... கொஞ்சம் அழணும் நான்…. ப்ளீஸ்….”
அவள் தன் கெஞ்சலை காதலாக வெளிப்படுத்த, அவனது விழிகளிலோ கண்ணீர் உதயமானது…
“அழக்கூடாதுன்னு சொன்னது நினைவிருக்கா இல்லையா?...”
“எல்லாம் இருக்கு… கூடவே உங்கமேல அதிகமா காதலும் இருக்கு...”
அவள் விசும்ப ஆரம்பிக்க, அவனால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை…
அவளிடம், தன் மனதை வெளிப்படுத்தவும் முடியாது, அவளை செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்தவும் முடியாது இருதலைக்கொள்ளி எறும்பாக அவன் துடித்திட,
“சாரி… கார்த்தி… நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன் இன்னைக்கு நிறையவே… மன்னிச்சிடுங்க….” என்றவள் அவன் பதிலை கூட எதிர்பாராது பட்டென்று போனை வைத்துவிட, அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது….
போனை வைத்தவளோ, தன் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பிக்க, இங்கே அவனுக்கும் கண்ணீர் அணை பெருக்கெடுத்தது வேகமாய்…
“சாரிடா… சகி… ப்ளீஸ் அழாதடி… நீ அழுதா என்னால தாங்க முடியலைடி… நான் தான் உன்னை கஷ்டப்படுத்துறேன்…. நான் வேணாம்டி உனக்கு… நீ நல்லா இருக்கணும்டி… அதுக்காகத்தாண்டி நான் இப்படி கல்லா இருக்குறேன்…”
வாய்விட்டு சொல்லியவன், மௌனமாக அழ ஆரம்பித்தான் தன் உடல் நிலையையும் மறந்து…
அடுத்து வந்த இரண்டாவது நாளில், ஏனோ மனது பாரமாகவே இருக்க, அவளுக்கு அவன் போன் செய்ய, அப்போது தான் தெரிந்தது, ஜானுவிற்கு நேர்ந்த விபத்தில், அவளது கைகளிலும் கால்களிலும் காயம் ஏற்பட்டதென்று…
“எப்போ நடந்துச்சு?... நீ ஏன் எங்கிட்ட சொல்லலை?...”
அவன் கோபமும் படபடப்புமாய் வினவ,
“இல்ல உங்களுக்கே உடம்பு சரியில்லை… இதுல இதவேற சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னுதான் நான் சொல்லலை…”
“லூசாடி நீ?... நான் என்ன செத்தா போயிட்டேன்… உயிரோட தான இருக்குறேன்… ஒரு வார்த்தை சொல்லுறதுக்கு என்ன?...”
“இல்ல கார்த்தி… நான் வந்து….”
“என்ன வந்து போயி… எரிச்சலை கிளப்பாத….”
அவன் ஆத்திரத்தில் கத்த, அவள் அமைதியாக இருந்தாள்…
சில நொடிகள் கழித்து, “அடிபலமாடா?... டாக்டர்கிட்ட போனீயா?... என்ன சொன்னாங்க?... இப்போ எங்க இருக்குற?...”
அவனது அடுத்தடுத்த கேள்வி அவளை மகிழ்ச்சிக்கே உள்ளாக்கியது… பின்னே இருக்காதா?... வழக்கமாக அவள் தானே இப்படி அடுக்கடுக்காய் கேள்வி கேட்பாள்… இன்று அதை அவனே கேட்கும்போது அவளுக்குள் இன்ப ஊற்று பெருக்கெடுக்கத்தானே செய்யும்?...