22. புதிர் போடும் நெஞ்சம் - உஷா
புதிர் 22
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே....
வாசுவின் கையில் பொறுப்பை ஒப்படைத்து விறு விறுவென்று அஞ்சனாவுடன் ஆர்யமன் வெளியேறவும்....
’எவ்வளவு நேரம் தான் பயப்படாத மாதிரியே நடிக்க! வில்லன் கும்பல்கிட்ட என்னை தனியா தவிக்கவிட்டு போறானே!!!’
என்று புலம்பி விழி பிதுங்கிய வாசு தன்னை சுற்றி நின்ற தடியன்களைக் கண்டு மிடறு விழுங்க...
‘இவனுங்க லுக்கிலே முட்டிகிட்டு வருதே’, என்று கால்கள் நடுங்க புலும்ப...
அதே சமயம்... சிறிது சிறிதாக வலி குறைந்ததும்.... ஹரிபிரசாத்திற்கு நினைவு வந்திருக்க... சுற்றி நடந்ததை கொஞ்சம் கொஞ்சமாக கருத்திருக்கு கொண்டு வர முயன்ற பொழுது... இடுப்பெலும்பு வலியெடுக்க.. அந்த வலியை கொடுத்தவன் முகம் கண் முன்னே வர...... . அடி வாங்கிய அவமானம் அந்த வலியை விட பல மடங்கு தாக்கியது!
‘என்னையே அடிச்சிட்டான்.. அவனை..’, உள்ளுக்குள் உண்டான வெறியில் விருட்டென்று தனக்கு முதலுதவி செய்து கொண்டிருந்த அந்த மதுக்கூட ஊழியனைத் தட்டி விட்டவனாக..
வலியை பின்னுக்கு தள்ளி தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டவனின் பார்வை நாலா பக்கமும் சுழன்று ஆர்யமனைத் தேட.. அவன் பார்வை வட்டத்தில் இருந்து அவன் மறைந்து கொண்டிருந்ததை கண்டு கொண்டதும்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
ஆத்திரமும்.. அவசரமும் சேர்ந்து கொள்ள... வலியை பொருட் படுத்தாது..
“டேய்.... அவனை பிடிங்கடா... அடிச்சுட்டு அவன் பாட்டுக்கு போக விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க..“, சுற்றும் முற்றும் தன் நண்பர்களைக் கண்டு கூச்சலிட்டவாறே ஓட எட்டு எடுத்து வைக்க..... அவனால் முடியவில்லை.. அப்படி ஒரு வலி... “ஆஆஆ”, என்று கத்திய படி விழப் போனான்.
வேகமாக அவனைப் பிடித்த அந்த சினிமா நடிக வாரிசு, “எல்லாரையும் மிரட்டிட்டு... அவளை தூக்கிட்டான்! போலீஸ்னதும் பசங்க பயந்துட்டாங்க”, என்று வாசுவைப் பார்த்துக் கொண்டே இவன் காதருகில் சென்று சொல்ல..
வெறியேறிவனாக அவனை வெறித்த ஹரி பிரசாத்,
“தூ...”, என்றான் அவன் முகத்தில் துப்பாத குறையாக!!!!
“இருந்து இருந்தும் இந்த மாமா பயலுங்களுக்கு பயந்துட்டா நிக்கிறீங்க.. அவனுங்களை தட்டிட்டு... போய் தூக்குங்க”,
என்று வாசுவும் அவனுடன் வந்த காவலர்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு.. சுற்றி இருந்தவர்களைப் பார்த்து கத்த...
அவன் உறுமலில்.... “இன்னையோடு நமக்கு சமாதி தான்”, என்று வாசுவும் மற்ற காவலர்களும் நடுநடுங்க...
அப்பொழுது அஞ்சனாவையும், ஆர்யமனையும் கிளம்ப துரித படுத்தி விட்டு அந்த மதுக்கூடத்திற்குள் வேக நடையிட்டு வந்த கொண்டிருந்த ஸ்ரீவாசன் காதில் ஹரிபிரசாத், “மாமா பயலுங்க”, என்றது விழுந்து விட்டது!!!
உத்தியோகத்தை உயிராய் நேசிக்கும் ஒருவனின் செவியில் இப்படி ஒரு வார்த்தை விழுந்தால் சும்மா இருப்பானா?
விடவில்லை!!! விடவே இல்லை ஸ்ரீவாசன் - ஹரிபிரசாத்தை புரட்டி எடுத்து தான் வண்டியில் ஏற்றினான்! ஹரிபிரசாத் மட்டுமல்ல அந்த பார்ட்டிக்கு வந்த மொத்த கும்பலையும் - இதில் இந்த களோபரம் எதுவும் தெரியாத அளவிற்கு போதை மயக்கத்தில் கிடந்த ஃபிலோமினா மற்றும் அவள் அலுவலக நண்பர்களும் அடக்கம்!
அது மட்டுமல்லாது அவர்கள் அத்தனை பேரின் செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர் காவலர்கள். ஹரி பிரசாத்தின் செல்ஃபோன் மட்டும் இல்லை!
ஆர்யமன் அடித்ததில் எங்கோ விழுந்து விட்டது என்று ஹரிபிரசாத் சொல்ல, அதை கண்டெடுத்து வருமாறு வாசுவை அங்கே விட்டு சென்றான் ஸ்ரீவாசன்!
இரவு நெடுநேரம் அந்த மதுக் கூடம் முழுமைக்கும் சல்லடை போட்டும் ஹரிபிரசாத்தின் அலைபேசியை கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்தவனாக... ஸ்ரீவாசனிடம் அதை சொல்வதற்கு கிளம்பினான் வாசு!