(Reading time: 25 - 49 minutes)

"ன் செல்ல குட்டி. பட்டு குட்டி அப்பா சொல்றது கேக்குதா டா. நீங்க தான் என் கண்ணம்மா என் தேவதை” கர்ப்பம் என்று  டாக்டர் உறுதி செய்த நாளில் இருந்தே குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார் விஜயகுமார்.

"சின்னச்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே" இந்தப் பாடலை கருவில் இருக்கும் அவரது செல்வ மகளுக்காக தினமும் பாடவில்லை என்றால் விஜயகுமாருக்கு தூக்கமே வராது.

"பொண்ணுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி" ரத்னாவதி கணவரின் சீராட்டலில் திளைத்துக் கொண்டிருந்தார்.

"எல்லோரும் தவமிருந்து கடவுள் கிட்ட வாரிசா ஆண் குழந்தை வேணும்னு கேப்பாங்க...நான் அந்த தேவி மீனாட்சியே எனக்கு மகளா வரணும்னு கேட்டிருக்கேன். என் தெய்வமாய் என் தேவதையாய் என் மகள் பிறப்பா...என்  ரதியோட மொத்த அழகையும், உயர்ந்த குணத்தையும் கொண்டு என் கண்ணம்மா பிறப்பா"

"பெண் குழந்தை அப்பா சாயல்ல இருந்தா தான் அதிர்ஷ்டமாம். உங்க அழகு, நிதானம், கம்பீரம், தைரியம், சீரிய சிந்தனை எல்லாம் நம்ம பொண்ணுக்கு வரணும்" ரத்னாவதி கணவர் மேல் கொண்டிருந்த எல்லையில்லா காதலின் வெளிப்பாடாக தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

தன் தாய் தந்தை இருவரும் தன் மேல் இவ்வளவு அன்பும் ஆசையும் பிரியமும் கொண்டிருக்கிறார்கள் என்று கருவில் இருக்கும் குழந்தையும் மகிழ்ந்து சந்தோஷமாக ஆர்பரித்ததோ!!! குழந்தையின் அசைவினை பெற்றோர் இருவருமே உணர்ந்து பூரித்து போயினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

தினமும் இரவு மனைவியைத் தன் தோளில் சாய்ந்த படி மாமனார் தந்த சீதனமாகிய தமிழ் புத்தகங்களை உரக்க வாசிப்பார் விஜயகுமார்.

"குட்டிமா...இன்னிக்கு நாம கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்ன கீதாசாரம் படிக்க போறோம்" மனைவியின் மேடிட்ட வயிற்றில் ஒரு கரம் வைத்து குழந்தைக்குச் சொல்வார்.

இதிகாசங்கள், நீதிக் கதைகள், திருக்குறள்,  சங்கத் தமிழ் நூல்கள், ஜான்சி ராணி, கட்டபொம்மன் போன்ற வீரர்களின் கதைகள், குறிப்பாக பாரதியின் கவிதைகள் என ஒவ்வொரு நாளும் தந்தை வாசிக்க கருவில் இருந்த அவரின் தேவதை மிக உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள்..

"வீர அபிமன்யுன்னு நினைப்பாக்கும்" கணவரை சீண்டினார் ரத்னாவதி.

"என் மகளை யாரோடும் ஒப்பிடாதே. அவள் அபூர்வ குழந்தையா தனித்தன்மையா இருப்பா.. இந்த உலகமே அவளைக்  கொண்டாடும். வீரம் மட்டுமில்லாம விவேகம் கருணை அன்புன்னு எல்லா நல்ல குணங்களோடும் இருப்பா என் செல்லம்"

அப்போது வந்து தேவதைகள் “ததாஸ்து” என்று சொன்னார்களோ..

திகாலை கதிர்கள் பூமியை ஸ்பரிசிக்கும் வேளையில் வானம் தன் வாழ்த்துக்களை  மெல்லிய சாரலாக மண்ணுக்கு அனுப்பி வைக்க  விஜயகுமார் ரத்னாவதியின் “அபூர்வா” பூமியில் ஜனித்தாள்.

தந்தை தாய் இருவரின் சாயலையும் குழைத்து பூக்குவியலைப் போன்று இருந்த மகளைப் “பூக்குட்டி” என்று விஜயகுமார் கைகளில்  ஏந்தி முத்தமிட அன்றிலிருந்து தந்தை மகளை பூக்குட்டி என்றே அழைத்தார்.

ரத்னாவதியின் தந்தை மணியன் குழந்தை பிறப்பிற்குத் தாய் வீட்டிற்கு மகளை அழைத்த போதே விஜயகுமார் மருத்துவ வசதிகள் காரணம் காட்டி மறுத்துவிட்டிருந்தார்.

"உனக்கு போகணும் போல இருந்தா சொல்லு ரதி. உன் விருப்பத்துக்கு நான் குறுக்கே இருக்க மாட்டேன்" தன் விருப்பத்தை கேட்டு நின்ற கணவரைப் பிரிந்து செல்ல ரத்னாவதியும் விரும்பவில்லை.

குழந்தை பிறந்த பிறகாவது தாய் வீட்டுச் சீராட்டலுக்கு அனுப்ப வேண்டும் என்று மணியன் கேட்டுக் கொண்டார். அவர் விருப்பத்திற்காக ஒரு வாரம் தானும் விடுப்பு எடுத்து மனைவி மகளை அழைத்துக் கொண்டு போன விஜயகுமார் மணியனிடம் தன் மனைவி மகளைப் பிரிந்திருக்க முடியாது என்று பணிவாய் தெரிவித்தார்.

"மாமா. இப்போ ட்ரைனிங் அகெடமில இருக்கிறதால ரத்னாவோடும் அபியோடும் என்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடியுது. நாளைக்கு பார்டர் போஸ்டிங் வந்தாலோ இல்லை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டாலோ நான் அவங்கள பிரிஞ்சு போக வேண்டி வரும். முடிந்த மட்டும் என் மகளோட நான் நேரம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசைப்படறேன். மறுக்காதீங்க" மருமகன் இப்படி கேட்கவும் மணியனும் அதற்கு சம்மதித்தார்.

தன் பணி எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவைத் தரும் என்று உணர்ந்த விஜயகுமார் மனைவி மகளுடனே தனது பொழுதினை செலவு செய்தார். ராணுவ பார்ட்டிகள் போன்றவற்றில் அதிகம் அவர் ஈடுபாடு கொள்ள வில்லை.

"ப்போவே அவளுக்கு என்ன புரியும்னு இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க" மகள் பேச ஆரம்பித்ததில் இருந்தே விஜயகுமார் அவளிடம் தனது ராணுவப் பணி பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

"என் பொண்ணு ஞானக் குழந்தை. அவ எல்லாத்தையும் கிரகிச்சுப்பா...நீ சொல்லுடா பூக்குட்டி....வந்தே மாதரம்" விஜயகுமார் சொல்லிக் கொடுக்க மழலையில் அபூர்வா மிழற்றுவதை ரத்னாவதியுமே உடனிருந்து ரசிப்பார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.