விக்னேஷின் தந்தைக்கு செல்வியைப் பிடித்துபோயிற்று, மேலும் விக்னேஷின் ஆர்வம் ததும்பும் அந்த முகத்தை பார்க்கும்போது அவன் செல்வியை மணக்க தீர்மானித்துவிட்டான் என தோன்றியது. சம்பிரதாய பேச்சுகளூடே, விக்னேஷின் தாய் தான் கேட்க வந்தவைகளை கேட்டு, அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்ற சீர் செய்ய வேண்டும் என்பதையும் முன்னே வைத்தாள். இளமாறனால் எதையும் மறுக்க இயலவில்லை. மாறாக விக்னேஷோடு செல்வியின் வாழ்க்கை நன்றாக அமைய அவன் எதை செய்யவும் தயாராய் இருந்தான். பரஸ்பர விவாதங்களுக்கு பிறகு, தாம்பூலம் மாற்றும் நேரம், செல்வி கண்களை மூடிக்கொண்டாள் அவளுடைய மனதில் ரிஷியின் முகமே விரிந்தது. “ப்ளீஸ்.. என் மனசை விட்டு போயிடுங்க…!” என்று தன் மனதிற்கு செல்வி சொன்னாள்.
வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. உள்ளே இரு காவலர்கள் வந்தனர்.
“இங்க, இள மாறங்கிறது..?” – காவலர்
“நான் தான் சார்..நீங்க எதுக்காக வந்திருக்கீங்க..?” – இளா
“தம்பி, உங்க மேல கம்ப்ளையன்ட் ஒன்னு வந்திருக்கு, கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர்றீங்களா? அப்புறம் ஒரு சின்ன செர்ச்சு உங்க வீட்டில, நீங்க கோ-ஆப்ரேட் பன்னினா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல!” – காவலர்.
வீட்டில் பதற்றம் தொற்றிக்கொண்டது. விக்னேஷ் வீட்டு ஆட்களுக்கு அதிருப்தியாய்ப்பட்டது.
“சார், நீங்க ஏதோ தப்பான அட்ரசுக்கு வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்” – இளா
“நாங்க கரைக்ட்டாதான் வந்திருக்கோம்.. நீ தானே இளமாறன்?”
“ஆமாம்!”
“போனவாரம் அம்பத்தூர்ல இருக்கிற மாலுக்கு போயிருந்தீயா?”
“ம்ம், ஆமாம்”
“எதுக்கு போன?”
“என் தங்கைக்கு நகை வாங்க!”
“ம்ம் வாங்க போனியா இல்ல திருட போனீயா?”
“சார் மரியாதையா பேசுங்க!”
“உனக்கெல்லாம் என்னடா மரியாத, திருட்டு பயல!”
இளமாறனுக்கு கோபம் தலைக்கேறியது, அதற்குள் அவன் நண்பனும் தாய்மாமாவும் காவலர்களை சமாதானப்படுத்தினர், “சார் நாங்க வாங்கின நகைக்கு பில் கூட இருக்கு நீங்க தாராளமா செக் பன்னிக்கோங்க.. அதுக்கப்புறம் பேசலாம் என்று மணியும், இள மாறனின் மாமாவும் கூற, காவலர்கள் வீட்டை சோதனையிட்டனர்.
அது இளமாறனின் சோதனைகாலம் என்பதா என்ன, காவ்யாவை அவன் இடித்த அவசரத்தில் அவள் கீழே தவறவிட்ட நகைப்பையையும் சேர்த்து இளமாறன் தவறுதலாக எடுத்து வந்திருந்தான். செல்வியின் மன நிலையும் கிட்டத்தட்ட இளமாறனின் மன நிலையும் ஒருநிலையில் இல்லை. ஆகையால் இருவருமே அதை சரியாக கவனிக்காது விட்டனர். வினை யாரைவிட்டது? காவலர் கைக்கு தப்பாது அது கிடைத்தது.. ஒன்றும் மறுக்க இயலாத வகையில் அவன் சிக்கிக்கொண்டான். இளமாறனை கைது செய்யாத குரையாக அழைத்து சென்றனர். விக்னேஷ், “இளா நீங்க ஒன்னும் கவலை படாதீங்க, நீங்க போங்க நான் வக்கீலோட வர்றேன்” என்றான். இளமாறனின் அலுவலகத்திற்கும் அவன் தொடர்பு கொண்டு நிலைமை விவரித்தான். விக்னேஷின் தாயிற்கு, நடந்த சம்பவம் ஏதும் பிடிக்காமல் போக அவர் விருட்டென்று காரில் ஏற, விக்னேஷின் தந்தை மட்டும், “விக்னேஷ், எங்கயோ தப்பு நடந்திருக்கு, கூட இருந்து ஹெல்ப் பன்னிட்டு வா” – என்றார்.
ஒரு திருமணம் உறுதி செய்யபடாமல் கரைந்தது. உண்மையில் அது செல்வியின் மனதிற்கு மட்டும் நிம்மதி அளித்தது. செல்வியின் மீது உண்மையான காதலை வைத்த, விக்னேஷிற்கு அது மிகுந்த மனவேதனையை அளித்தது.
காவ்யாவின் அலைபேசி சினுங்கியது. எதிர்முனையில், “காவ்யா மேம்மா?”
“எஸ்”
“மேம் ஸ்டேஷன்ல இருந்து பேசுரோம், பொருள் கிடைச்சுட்டு நீங்க வந்து வாங்கிக்கலாம், அதோட அந்த திருட்டு இராஸ்கலையும் பிடிச்சுட்டோம், நீங்க வாங்க மேம்” – அந்த காவலர் அலைபேசியில் வழிய, அருகே நின்றிருந்த இளமாறனுக்கு எரிச்சல் தாழவில்லை.
“சீ, என்ன ஜென்மங்களோடா.. இதுங்க” என்று அவன் உள்ளம் வெம்பியது. அவன் எவ்வளவோ முறை சொல்லியும் அது அந்த காவலர்களின் காதுகளை எட்டவேயில்லை. இளமாறனுக்கு காவ்யாவின் மீதும் காவலர்களின் மீதும் கண் மூடித்தனமான கோபம் வந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் காவ்யா காவல் நிலையம் வந்தாள். அவளைப் பார்த்து வழிந்துக்கொண்டே வரவேற்றார் இன்ஸ்பெக்டர். “மேம் வாங்க.. இதுவா பாருங்க ?” என்று அவன் நீட்டிய சிறிய நகைப்பெட்டியை பார்த்தாள் காவ்யா. அதில் அவள் மீராவிற்கும் சம்பந்ததிற்கும் வாங்கிய ப்ளாட்டினம் மோதிரங்கள் அதன் மீது பதிக்கப்பட்ட விலை மதிப்பில்லாத வைரத்துடன் மின்னியது. அந்த மின்னல் காவ்யாவின் முகத்திலும் வந்துபோனது.
“இது தான் சார், ரொம்ப தேங்க்ஸ், குவிக்கா அக்சன் எடுத்துட்டீங்க” – காவ்யா
“கொஞ்சம் இளைஞனாக இருந்த இன்ஸ்பெக்டர் அவளிடம் வழிந்தான். இளமாறனுக்கு எரிச்சல் வந்தது.