“அப்பா… அவர் சொன்னதை கேட்டீங்கல்ல… அவர் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சும் எப்படிப்பா இந்த கல்யாணத்துக்கு அவரை கட்டாயப்படுத்த முடியும்?? வேணாம்ப்பா இந்த முடிவை நாம ஏத்துப்போம்… இந்த கல்யாணம் நிக்கறது தான்ப்பா சரி..” என்று தன் தந்தையைப் பார்த்து நர்மதா கூறினாள்.
“அப்போ உன்னோட வாழ்க்கைம்மா… இப்படி மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னுப் போனா.. அப்புறம் உனக்கு எப்படிம்மா கல்யாணம் நடக்கும்…?”
“அதுக்காக வேற ஒரு பொண்ணை விரும்புறவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அப்போ மட்டும் என்னோட வாழ்க்கை நல்லா இருக்குமாப்பா..?? சொல்லுங்கப்பா..??” என்று பதிலுக்கு கேட்டாள்.
இதுவரையுமே தன் மகனின் முடிவு அதிர்ச்சியை அளித்தாலும், குமாராசாமி பேச்சில் தன் மகனிடம் மாற்றம் வருமா..?? என்று கோமதி அமைதி காக்க… இப்போதோ நர்மதாவின் பேச்சில் எங்கே இந்த திருமணம் நிற்கத் தான் போகிறதோ என்றுப் பயந்தவர்.. உடனே துஷ்யந்திடம்,
“ராஜா… ஒரு தகப்பனா அவர் இவ்வளவு பேசியும் உன்னோட மனசை மாத்திக்க மாட்டேங்கிறியே… உனக்கு பிடிச்சது நடக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் உன்னோட மனசை மாத்திக்க மாட்டேங்கிற…
நர்மதாவை பார்த்தீயா..?? இந்த இடத்துல வேற ஒரு பொண்ணா இருந்தா… இந்நேரம் அவ எப்படி நடந்துக்கிட்டு இருப்பாளோ… ஆனா நர்மதா எப்படி நடந்துக்கிட்டா பாரு… அவளை நீ வேணாம்னு சொல்லலாம்… ஆனா அவ தாண்டா எனக்கு மருமக..
அந்தக் காலத்துல எல்லாம் கல்யாணம் வீட்டுல தான் நடக்கும்… அதுவும் நம்ம வழக்கப்படி மாப்பிள்ளை வீட்ல தான் நடக்கும்… அப்படி வீட்டுல நடக்கற கல்யாணத்துல, கல்யாணப் பொண்ணு முன்னாளே அந்த வீட்டுல காலடி எடுத்து வச்சிட்றா.. அதனால தான் பொண்ணை கோவிலில் இருந்து அழைச்சுக்கிட்டு வராங்க…
அப்படி பார்க்கும் போது நர்மதா… நேத்தே நம்ம வீட்டு மருமகளா இந்த வீட்டுக்கு வந்துட்டாடா… நான் அப்படி தான் நினைக்கிறேன்… நிச்சயம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்சா மாதிரின்னு சொல்வாங்க… இதுல அவ நம்ம மருமகளா இந்த வீட்டுக்கு வந்துட்டா… அப்படி இருக்கப்போ அவளை வேண்டாம்னு சொன்னா, அவ வாழ்க்கையை யோசிச்சியா..??
என்னால இன்னொரு பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளா நினைச்சுப் பார்க்க முடியல… நீயும் நடக்காத ஒரு விஷயத்துக்காக உன் வாழ்க்கையை அழிச்சுக்காம… இந்த கல்யாணத்தை மனசார ஏத்துக்கடா..??” என்றார்.
“அம்மா அது மட்டும் என்னால முடியாதும்மா.. கண்டிப்பா என்னோட மனசை மாத்திக்க முடியாதும்மா…
எனக்கு உங்க ஏக்கம் புரியுதும்மா… வீட்டுக்கு ஒரு மருமக வரனும்… இந்த வீட்டுக்கு வாரிசு வரனும்னுங்கிற உங்க எதிர்பார்ப்பு எல்லாம் எனக்கு தெரியாம இல்ல… ஆனா என்னால தான் உங்க ஆசையை நிறைவேத்த முடியாது…
அம்மா என்னால முடியலைன்னா என்னம்மா.. உங்க ஏக்கத்தை செல்வாவால நிறைவேத்த முடியுமில்ல… அம்மா நர்மதாவை இந்த வீட்டு மருமகளா நீங்க நினைக்கிறீங்கன்னா, பேசாம செல்வாவுக்கும் நர்மதாவுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடலாம்மா..” என்று துஷ்யந்த் சொன்னதும்… செல்வா, நர்மதா உட்பட எல்லோரும் அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தனர்.
சாரி ப்ரண்ட்ஸ்… நானும் இந்த கல்யாண அத்தியாயங்களை சீக்கிரமா முடிக்கனும்னு முயற்சி செய்யறேன்… ஆனா முடியல… சரி இந்த அத்தியாயம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க… செல்வா, நர்மதா கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா..?? நீங்க என்ன நினைக்கிறீங்க..?? உங்க கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்… நன்றி.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}