“நீங்க இருங்க அத்தான் நான் இப்ப வாரேன்”
என்றவளாய் அங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்த்தவள் வாசலுக்கு வெளியே ஒரு காலை தூக்கி வைத்தது வரை தான் அவளுக்கு தெரியும்.
தன் ஒற்றைக் கையால் அவள் இடுப்போடு அணைத்து தூக்கி தன் முன் நிறுத்தியிருந்தான் ரூபன். அவன் கைப்பிடியில் இருந்தாலும் இன்னும் அவள் அவனை அவள் நிமிர்ந்தும் பார்த்திருக்கவில்லை.
நானே பார்த்து இவ்வளவு நாளாச்சேன்னு ஆசையா உன்னை பார்க்க ஓடி வந்தா இப்படி படுத்துற நீ. செல்லமாய் கடிந்துக் கொண்டவன். அவள் முகத்தைப் பற்றிக் கொண்டு நெற்றி, புருவம் கண்கள், கன்னங்கள் என்று பாகுபாடின்றி முகம் முழுக்க சலிக்காமல் முத்தங்கள் பதிக்கலானான்.
முடியவே முடில அனி, அதான் அவசர அவசரமா ஓடி வந்துட்டேன். மூச்சு விடாமல் முத்தமிட்டதால் சற்று மூச்சு விட்டு கொண்டவனாய் தொடர்ந்தான். இன்னிக்கு சர்ச்ல நம்ம கல்யாணத்தோட முதல் அறிக்கை வேறையா நீ என்னை தேடுவன்னு தோணிட்டே இருந்துச்சு அதான் ரெண்டு மூணு நாளாவே ஃபிளைட் டிக்கெட்டுக்கு அலையோ அலைன்னு அலைஞ்சு நேத்து ராத்திரி தான் கிடைச்சது ஒரு வழியா மூணு மணி போல காலைல வந்து சேர்ந்தேன்.
இன்னும் பதில் பேசாமல் தன்னை பார்த்துக் கொண்டு நிற்பவளைப் பார்த்து, நீ ஏண்டா எனக்கு போன் பண்ணல? என்றவன். இன்னுமாய் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு ,
நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? என்றவனாய் அவள் முகம் உயர்த்தி அவள் உதடுகளில் ஆழ்ந்த முத்தமிட்டான்.
ரூபனின் அதிரடியால் அனிக்கா விழிவிரிய நின்றுக் கொண்டிருந்தாள். முன்னொரு நாள் இருவரும் முத்தமிட்டனர்தாம் அது கன்னங்களைத் தாண்டி சென்றிருக்கவில்லை. அவனும் , அவளும் நிகழ்ந்தவைகளை எண்ணி கண்ணீர் உகுக்க ஆறுதல் என்னும் காரணம் கொண்டு அமைந்திருந்தது அன்றைய முத்தங்கள். அப்போது முத்தமிடும் போது ஒன்றும் தோன்றாவிட்டாலும் பின்னர் பல நேரம் அதை நினைத்து வெட்க முறுவல் தோன்றும் அனிக்காவிற்கு. ஆனால், இன்றைக்கு ரூபன் நடந்துக் கொள்வது , தரும் ஆசை முத்தங்கள் அத்தனையும் அவர்களுக்குள் புதிது. புரியாத உணர்வில் சிக்கித் தவித்தாள் அவள். இதற்கு என்னமாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை.
ஏற்கெனவே இருந்த கோபம், ஊடல் சிவப்போடு முகத்தில் வெட்கச் சிவப்பும் சேர்ந்துக் கொண்டது. திகைத்து தவித்து நிற்பவளின் நிலை புரிந்து தான் அமர்ந்து தன்னோடு சேர்ந்து அமரவைத்துக் கொண்டவன். அவள் விரல்களோடு தன் விரல்களை இணைத்துக் கொண்டான்.
வழக்கம் போல் இருவர் கைவிரல்களும் உறவாட, எங்கோ படித்த வரிகள் ஞாபகத்தில் எழுந்தது.
விரல்களின் நடுவில் இந்த இடைவெளி எதற்கு? என்ற காதலியின் கேள்விக்கு,
“உன் விரல்களோடு என் விரல்களைக் கோர்த்துக் கொள்ளத்தான்” என்று காதலன் பதிலளித்தானாம்,
அவர்கள் பேசா நொடியிலும் அவர்கள் விரல்கள் உரக்க பேசிக் கொண்டிருந்தன, வேறு யாரும் உணர இயலா மொழிகளில் சத்தமிட்டு காதல் சொல்லின.
மார்பில் சாய்ந்திருந்தவளின் மௌனம் அவனை புண்படுத்தியதோ என்னவோ? அவள் முகத்தை நிமிர்த்தினான்.
இங்க பாரு அனி……. கண்டிப்பான அவன் குரலுக்கு செவிமடுத்தவளாக அவனைப் பார்த்தாள். இதுவரை காதல் சொன்ன கண்கள் இப்போது என்னச் சொல்லினவோ? அவளுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
இப்பன்னு இல்ல எப்பவுமே ஒரே ஒரு விஷயம் மட்டும் நம்ம ரெண்டு பேருக்குள்ள பின்பற்றணும்னு நான் நினைக்கிறேன்.
என்னவென்று அவள் விழிகள் கேட்க, அவன் தொடர்ந்தான்.
நாம ரெண்டு பேரும் ஆயுசு முழுக்க ஒருத்தர் கூட ஒருத்தர் இருக்கப் போறோம்.
…….
மனசில எதுவும் கோபம் இருந்திச்சுன்னா சண்டைப் போடலாம் தப்பில்ல, வேனும்னா நல்லா திட்டிக்கோ, அடிச்சுக்கோ அதுவும் கூட தப்பில்ல ஆனா பேசாம மட்டும் இருக்காதே.
……
நீ என்ன நினைச்சிட்டிருக்கன்னு எனக்கும் புரியாம, நான் என்ன நினைச்சிட்டிருக்கேன்னு உனக்கும் புரியாம, வருத்தத்தை மனசுக்குள்ளே வச்சிட்டிருந்தா, கொஞ்ச நாள்ல வெறுப்புத்தான் வரும்…. என்ன புரியுதா?
அதட்டலும் கொஞ்சலும், கெஞ்சலுமாய் கலவையாய் தொனித்தது அவன் வார்த்தைகள்.
உடனே படபடவென பொரிய ஆரம்பித்தாள் அனிக்கா.
அதான் நான் கோபமா இருக்கேன்னு தெரியுதில்ல, பின்ன எப்படி என்னை கேட்காம என்னை கிஸ் பண்ணிட்டு, அடிச்சுக்கோ , திட்டிக்கோன்னு சொல்றீங்க.. முரண்டினாள்.