இவனுக்கு வேண்டியதை செய்துவிட்டு கோபி கெஸ்ட் ஹவுசின் ஒரு அறையில் படுத்துவிட, தாளாத முடியாத உடல் வலியோடு, இவன் முதலில் தேடியது அவன் கைப்பேசியை தான், காவலர்கள் இவனுடைய பொருட்களை கொடுத்த கவரில் அவனுடைய பொருட்கள் யாவும் பத்திரமாக ஒரு சல்லி பைசா கூட தொலைந்து விடாது பத்திரமாக இருந்தது இவனது மனிப்பர்ஸ். அத்தனை பொருட்களையும் கவனமாக ஆராய்ந்தான் ஏதும் தொலையவில்லை, எனில் அவனை சூழ்ந்திருக்கும் ஆபாயம் இன்னும் அதிகமாகிறது. கைப்பேசியில் காவ்யா பல முறை இவனை அழைத்தற்கான அழைப்பின் எண்ணிக்கை, கைப்பேசி திரையில் விரிய, கைகள் தாமாக அவளை அழைத்தது, ஒரு முறை கூட அழைப்புமணி நிறைவேறும் முன் விரைந்து அழைப்பை ஏற்றாள் பெண்.
புலராத வானத்தில் ஒன்றிரண்டு ஒளிக்கீற்றுகள், கதவைத் திறந்து தோட்டத்து குறும்பாதையில் அவள் நடக்கும்போது பின்னிரவில் பெய்த மழையின் அடையாளமாய், இன்னும் பொடித்தூரல் செல்வியின் மேனியை நனைத்தது. அதிகாலை குளித்து, ஈரம் சொட்டிய, கூந்தலோடு அந்த வாடைக்காற்றில் உடல் நடுங்க நடப்பது அவளுக்குப் பிடித்தமான ஒன்று. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி, மெதுவாக முன்னே நடந்தாள், அவள் தோட்டத்தின் மென் மலர்கள் தரும், வாசனை இன்னும் மூக்கைத்துளைத்தது. நிமிர்ந்து வான் நோக்கும்போது, ஒன்றிரண்டு மழைத்துளிகள் அவள் நெற்றியில் விழுந்து, மீக்கில் நேர்கோடாய் விழுந்தது. அந்த அழகான தருணத்தை மனதின் வலி, கலைக்க, மனதிற்குள் தன்னைத்தானே சமாதானம் செய்தவள், இன்னும் எத்தனை நாள் இந்த குறுகல் எண்ணம், என நொந்தாள், இப்போது அவள் இரசித்தவையாவும் கசந்தது. அந்த புலராத வானத்தை ஒருமுறைப் பார்த்தாள். இன்னும் மேக கூட்டம் விலகாது, இருள் படர்ந்திருந்தது, அவள் மனதும் அப்படி ஒர் சூழலில்தான் சிக்குண்டிருந்தது. “ரிஷி” அவன் களையான முகம் மனதில் விழும்போது ஒர் வலியும் ஏமாற்றமும் கூடவே காதலின் சுகமும்.. இப்போது கண்கள் மூடி கழுத்தில் கிடந்த நீண்ட, சங்கிலியை அழுத்திப்படித்து யோசித்தாள், இந்த எண்ணத்தை வளர விடுவதா? இல்லை தெரிந்தே நடவாத சிந்தனையை வெட்டி எறிவதா? ஏதாவது மாயம் நடந்து இப்போது அவன் அருகே சென்று நிற்க முடிந்தால் எப்படி இருக்கும்.. இப்படி ஒர் எண்ணம் மனதை நனைக்கும்போது, அவள் பின்னே ஒர் காலடி சத்தம், அது ஷூ அணிந்த கால்களின் ஒலி, அவளோ, அவள் அம்மாவோ, இளமாறனோ, தோட்டத்திற்குள் காலணி அணிவதில்லை, ஒர் காலத்தில் அந்த காய்கறிதோட்டம் தான் அவர்களது வருமையை ஓட்டியது.
இப்போது புலன் அனைத்தும் எதை உணர்ந்ததோ, அவள் திரும்பும்போது அருகே நெருக்கமாய் ஓர் ஆண் உருவம், பதறி விலகி நின்றாள்,
“ஐயோ, என்ன இப்படி, சின்னப்பசங்க பேய பார்த்து பயந்த மாதிரி பயப்படுற? அவ்ளோ அசிங்கமாவ இருக்கேன்!”
சற்று விலகி நின்று வந்தவனை யாரென்றறிந்ததும், மனம் இன்னும் கனத்தது. ஏதோ ஒர் வலியான எண்ணத்தை கலைத்ததற்கு அவன் மீது கரிசனமும், இன்பமான ஒர் நினைவை கலைத்தற்கு அவன் மீது கோபமும் வந்தது, ஒன்று மட்டும் இவளுக்கு புரியவில்லை, இவன் வடிகாலா? இல்லை வலியா?
“என்ன நீ இப்படி மெய் மறந்து நிக்கிற? ம்ம்.. இதுக்குதான் அடிக்கடி முகத்த காண்பிக்கனும் இல்லனா மறந்திருவீங்களே!”
இப்போது சுயம் திரும்பியது, முன்பு மாதிரி அவன் முகத்தை எளிதாக பார்க்க முடியவில்லை, தோளின் ஒர் பகுதியில் விழுந்து பரவிய முடிக்கற்றையை இடக்கையில் பிடித்துகொண்டு, இவ்வளவு நேரம் கவனமற்று மழைநீரில் கொஞ்சம் நனைந்த முன் கொசவத்தை லேசாக தூக்கி விலகி ஓர் அடி வைத்து நின்று அவனைப்பார்த்தாள், இன்னும் இரவு ஆடையில் தான் இருந்தான்.
“அம்மா, உள்ள இருப்பங்களே, நீங்க பாக்கலையா?” நிதானமாக கேட்டாள்.
“உன்ன பாக்க தான் வந்தேன் செல்வி!” இதை சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆராய்ந்தான், அவளிடம் ஒர் நடுக்கம், “அம்மாவையும் , இலாவையும் பார்த்துட்டேன், அவங்க தான் நீ இங்க இருப்பேனு சொன்னாங்க!”
அந்த தனிமையை அவசரமாய் கலைக்க நினைத்தாள். “வாங்க உள்ள போலாம்!” இப்போது அவன் பதிலுக்கு காத்திராது விருவிருவென அவள் வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள். இவனுக்கு ஆனந்தம் தான். காலை அழகோடு அவளையும் நிதானமாக இரசிக்க முடிந்தது. அவள் வீட்டிற்குள் நுழையும்போது, அம்மா காப்பியோடு எதிரே வந்தாள். இவள் பின்னிருந்து வனிதாவின் கையிலிருந்த டம்பளரை விக்னேஷ் வாங்கிக்கொண்டான். கையில் காப்பியோடு சுவரில் சாய்ந்து நின்றான் இவள் உள் அறையை நோக்கி நடக்க, வனிதாவோ, செல்வி, விக்னேஷ் உன்ன பார்க்கதான் வந்திருக்காரு, நீங்க இரண்டுபேரும் பேசிட்டு இருங்க நான் இப்ப வர்றேன்.. வனிதா உள்ளே சென்றதும், இவள் தரையைப்பார்த்தாள், சிறுவயது முதல் அவள் பார்த்த இடம் தான் இப்போது தான் எல்லா ஓட்டைகளும், சின்ன சின்ன, கரைகளும் கண்களில் விழுந்தது.