Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)
பானுவின் மகனைச் சித்தியின் கைகளில் எப்படி ஒப் படைத்தேனோ எனக்குத் தெரியாது. சித்தி நினைவிழந்து விழுந்து விட்டாள். ஒரேயடியாக வீடு முழுவதும் துன்பப் பெருங்கடலில் ஆழ்ந்து விட்டது.
"அம்மா !.....பானூ!......உன்னெ வளத்து ஆளாக்கின அம்மா செத்துப்போயிட்டான்னு நினெச்சிட்டியா? ----தாயே ! பெத்த பாசத்தெ மறந்தறியாத தாய்க்கு ஆறாத சோகத்தெ வெச்சிட்டுப் போயிட்டியாம்மா! உன் கஷ்டத்தெ என்கிட்டெ சொன்னா உன்னெ வயித்திலியே வெச்சி காப்பாத்த மாட்டேனா தாயே! உன் பச்செக் கொழந்தெயெ ஒப்படைச்சிட்டுப் போயிட்டியாம்மா! பானூ....! உன்னெ நான் எப்படி மறப்பேன்மா! எந்த அலெயிலே கலந்து போயிட்டே தாயே...!
சித்திக்கு நினைவு வந்ததும் தரெமேலெ புரண்டு புரண்டு அழத் தொடங்கினாள். அந்தத் துக்கத்தில் என்னைக்கூடத் திட்டித் தள்ளினாள். பானுவின் குடும்ப விஷயத்தை நான் எப்போதும் தனக்குச் சொல்லவில்லை என்றும், ஒரு சொல் சொல்லியிருந்தாலும் இந்த அக்கிரமம் நடந்தே இருக்காது என்றும் சொல்லி ஓவென்று அழுதாள். அது உண்மைதான்-- என்றைக்காவது சித்தியிடம் சொல்லியிருந்தால் இப்படி நடந்திருக்காது இல்லையா! இப்போது செய்யக்கூடியது என்ன இருக்கிறது?
இருட்டிவிட்டது. யாரும் எழுந்து விளக்கேற்றவில்லை. வீடு சுடுகாடா யிருந்தது. அந்த வீட்டில் பானு ஒருத்தி தான் இல்லை. சித்தி மீண்டும் சத்தம் போட்டு அழலானாள். கண்களைத் துடைத்துக்கொண்டு மெதுவாக அருகில் சென்று உட்கார்ந்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். நானும் நிறுத்த முடியாமல் விக்கி விக்கி அழுதேன்.
"பாபூ... ! கேசவ் ! பானு பிழைச்சிருக்க மாட்டான்னு சொல்றியா?"
" சித்தி என்னெ மன்னிச்சுடு! பானு இப்படிச் செய்வான்னு எப்பவும் நான் நினைக்கவேயில்லே. எப்பவும் இப்படிச் செய்யமாட்டேன்னு சொல்லக்கூட சொன்னா. எனக்கு வேலெ கிடெச்சதும் பானுவெத் தனியா அழெச்சிட்டுப் போயிடலாம்னு இருந்தேன். இதுக்குள்ளேயே......"
பானுவின் மகன் அங்கே வந்தான். அவனை அணைத்துக்கொண்டு கதறிக் கதறி அழலானாள் சித்தி.
"சித்தி! பாபுவெக் குறிச்சி நீ ஒண்ணும் கவலெ வெச்சிக்காதே. அவனெக் காப்பாத்தவேண்டிய பொறுப்பெல்லாம் என்னுடையது! அவனெ வளத்துப் பெரியவனாக்கறேன். வேண்டிய வரெக்கும் படிக்க வைக்கறேன். அம்மா அப்பா இல்லேங்கற குறெயெத் தீத்துட்றேன். என்னெ நம்பு சித்தி!"
" உனக்குத் தெரியாதுப்பா! உன் கையிலே என்ன இருக்குது? என் குழந்தெ எனக்குப்