அறைக்கு வெளியே தள்ளி, கதவுகளை மூடிக்கொண்டால்.......அந்த இருட்டில் அவன் 'அம்மா........!அம்மா!..........' என்று பயத்தில் அலறிக்கொண்டிருந்தால்.........கடவுளே! தாய் இதயத்தை இவ்வளவு கருணையில்லாமல் படைக்கிறாயா? தாய் வயிற்றில் கடுமையை நிரப்புகிறாயா? என் பாபுவை நீ போற்றிக்காப்பாயா?' என் கண்கள் குளமாகின்றன. எழுத்துகள் கலைந்து கொண்டுள்ளன.
"அண்ணா! பரவாயில்லை இல்லையா? இந்தச் செய்தி தெரிந்ததுமே நீ வருவாய், பாபுவை அழைத்துச் செல்வாய். அம்மாவிடம் ஒப்படைப்பாய். ஆனால்......... கேசவ்! அந்தப் பொறுப்பு அம்மாவுடையதல்ல, உன்னுடையது! நான் என் குழந்தையை உனக்குக் கொடுக்கிறேன். என் இதயத்தை, என் உடலின் உடலை, என் என் மகனை, என் உதயனை உனக்குக் கொடுத்து விடுகிறேன். நீதான் அவனுக்குத் தாயும் தந்தையும், கடவுளும், எலலாமும்! என்னிடம் அழுத்தமாக உள்ள இந்த நம்பிக்கையை எப்போதும் பாழாக்க மாட்டாய் இல்லையா?
பாபுவின் படிப்பு விஷயத்தில் என் விருப்பம் ஒன்று! அவனை டாக்டருக்குப் படிக்கவை. வெளிநாட்டுக்கு அனுப்பு. அது என் பேரவா! ஆனால் பாபு டாக்டர் ஆவதற்கு விரும்பவில்லை என்றால் எப்போதும் கட்டாயப் படுத்தாதே. அவன் விருப்பப்படி----அவன் விரும்பும், மதிக்கும் படிப்பையே படிக்கவிடு. அவனுக்குத் துணி தைக்கவேண்டும் என்று ஆசை இருந்தால் தையற்காரன் ஆகட்டும்! தவறில்லை. ஆனால் அந்தத் துறையில் வல்லவன் ஆகவேண்டும்! அதுதான் முக்கியம்!
அடுத்து உன் திருமண விஷயம்- நீ சுசீலாவைத் திருமணம் செய்துகொள்! ஒவ்வொரு வினாடியும் உன்னையே தியானிக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்றால் அது உன் பாக்கியம் அல்லவா? அறிவு தெரிந்த நேரத்திலிருந்து உன்னிடம் மதிப்பு வைத்து, உன்னையே பூஜை பண்ணி வரும் பெண்ணுக்கு நீ எவ்வளவானாலும் கடன் பட்டிருக்கிறாய். அதைத் தீர்த்துக்கொள்ளும் நாள் நீ நன்றி மறக்காதவனாகக் கூட ஆவாய்.
பெரியப்பாவின் பிடிவாத குணம் எனக்குத் தெரியாததல்ல. அதனால்தான் உனக்கு இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்கிறேன். வாழ்க்கையின் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே அல்ல என்றும்; ஒருவரை யொருவர் பெரிதும் விரும்பம் இரண்டு இதயங்களைச் சேர்த்து வைப்பதில் புண்ணியம், பிரிப்பதில் பாவம் உண்டாகிறது என்பது என்றைக்காவது பெரியப்பாவுக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இருந்தாலும் நீ ஒரு ஆண்மகன், சுதந்தரமுள்ளவன்----சிந்தித்துப்பார்...தாய் தந்தையர்க்குப் பிள்ளைகள் எப்போதும் அடங்கி நடக்க வேண்டும். உண்மையே----அது தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கும்போது அல்ல. பெரியவர்களானாலும் சுய நலத்துக்கு அடிமையாகும்போது அல்ல. சுசீலாவுடன் நீ, உன்னுடன்