படம் சீக்கிரமே முடிந்துவிட்டது. நன்றாயிருக்கிறதோ, இல்லையோ இங்கிலீஷ் படங்களில் இது ஒரு பெரிய செளகரி யம். ராஜா எல்லோருக்கும் முன்னால் எழுந்து வெளியே செல்வதைப் பாரதி கவனிக்கத் தவறவில்லை. அவன் தியேட்டர் வாசலில் போய் ஒரு புறமாக ஒதுங்கி நின்றுகொண் டான். பாரதியாகவே தன்னைக் கண்டுவிட்டுப் பேசினால், தானும் பேசுவது. இல்லையென்றால் பேசாமலேயே விட்டுக்குப் போய்விடுவது என்ற முடிவுடன் அவன் காத்திருந்தான். வெளியே வந்த டூலிப்பும் பாரதியும் பஸ் ஸ்டாண்டில் போய் நின்று கொண்டனர். டூலிப்பின் சுருள் சுருளான பொன்னிற மயிர்க் கற்றைகள் அவன் கவனத்தை ஈர்த்தன. இந்த ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்குத்தான் ஆண்டவன் எப்படி ஞாபகமாகப் பொன்னிறக் கூந்தலைப் படைக்கின்றானோ என வியந்து கொண்டான். நல்ல வேளையாக முதலில் டூலிப்பின் பஸ் வந்துவிடவே, ”நான் வருகிறேன் பாரதி! பை, பை!'' என்று சொல்லிக் கொண்டே அவள் பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். அடுத்த கணமே பாரதியின் கண்கள் ராஜாவைத் தேடின.
அவன் தான் அவசரக்காரன் ஆயிற்றே! பாரதி அவனை அழைக்கும் வரை காத்திருப்பானா?
"என்ன பாரதி ! படம் எப்படி இருந்தது. டைடில் பிரமாதம் இல்லையா?' என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்துவிட்டான்.
”டைடில் தான் பிரமாதம். படம் சுமார்தான். ஒரே போர். தலைவலி” என்றாள் பாரதி.
”அதோ அந்த ஓட்டலுக்குள் சென்று காப்பி சாப்பிடலாம், வா. தலைவலி பறந்து விடும்” என்று சற்றுத் தூரத்தில் தெரிந்த ஓட்டலைக் காட்டினான் ராஜா.
”நேரத்தில் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றாள் பாரதி.
"டாக்ஸியில் போய் விடலாம், கவலைப்படாதே" என் தன் ராஜா.
இருவரும் அந்த ஓட்டலுக்குள் புகுந்து திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர்.
”அதென்ன புத்தகம் ராஜா?” எனக் கேட்டாள் பாரதி.
"ஏதோ 'பிலாஸபி’யாம். லைப்ரரியிலிருந்து வாங்கி வரச் சொல்லியிருந்தாள் அத்தை'' என்று கூறிச் சலிப்புடன் அப்புத்தகத்தை மேஜை மீது போட்டான் ராஜா. பாரதி அதை எடுத்துப் புரட்டினாள்.
''நாம் இருவரும் சினிமா பார்த்துவிட்டு வருகிறோம் என்று தெரிந்தால், எங்க அப்பாவும் உங்க அத்தையும் என்ன செய்வாங்க தெரியுமா?''
"ஏன்ன செய்வாங்க? படம் எப்படி இருக்கிறது என்று கேட்பாங்க! நன்றாயிருக்கிறது என்று சொன்னால் அவங்களும் போய்ப் பார்ப்பாங்க'' என்றான் ராஜா.