(Reading time: 20 - 40 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 05 - சு. சமுத்திரம்

சொக்கலிங்கமும், பெருமாளும் ஒரு காலத்தில் பிராண சிநேகிதர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஒன்றாகவே சுவரேறிக் குதித்தவர்கள். நெல்லை மாவட்டத்தில் இருந்து, இருபது வயதிலேயே, ‘பஞ்சம்’ பிழைப்பதற்காக, ஒரே ஒரு டிக்கெட்டை எடுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் எப்படியோ மாற்றி மாற்றிக் காட்டி, சென்னை வந்தவர்கள்.

இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம் அது. அந்த சமயம் கொடுத்த சமாச்சாரங்களால், பல்வேறு வியாபாரங்களைச் செய்த இருவரும், பலமாகச் சம்பாதித்தார்கள். சொக்கலிங்கம், பெருமாளின் சார்பில், பல இடங்களுக்குப் போய், அலைந்து அவருக்கு இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தார். பெருமாள், சொக்கலிங்கத்திற்காகச் சுற்றியலைந்து, மூன்று வீடுகளை வாங்கிக் கொடுத்தார். இப்போது சொக்கலிங்கத்திடம் இருக்கும் அரவை மிஷினுக்கு முன்பணம் கொடுத்தது கூட இந்தப் பெருமாள் தான். நட்பை, உறவுக் கயிற்றால் நன்றாகக் கட்ட வேண்டும் என்று கருதிய சொக்கலிங்கம், கிராமத்தில் இருந்த தன் ஒரே தங்கை செல்லம்மாவின் கழுத்தில், பெருமாள், மஞ்சள் கயிற்றை கட்டும்படி செய்தார். சொக்கலிங்கமும், சென்னையில், ஓரளவு முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்த பார்வதியைக் கட்டிக் கொண்டார். சொல்லப் போனால், இந்தப் பார்வதியை கட்டிவைத்த பெருமையோ அல்லது சிறுமையோ, இந்தப் பெருமாளுக்குத்தான் சேரும்.

கால வேகத்தில், பெருமாள், குதிரை வேகத்தைக் கணக்கிடப் போனார். தொழிலில் மட்டும் குறியாக இல்லாமல், எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் அவருக்கு, பல்வேறுபட்ட சகவாசங்கள் கிடைத்தன. குதிரைக்கு பந்தயம் கட்டுபவன், அவருக்கு நெருங்கிய நண்பன். கள்ளுக்கடை கந்தப்பன், இவரிடம் நிஜமான அப்பன் மாதிரியே பழகினான். பருத்திச் சூதாட்டக்காரன் ஒருவன், இவர்மேல் வேட்டி மாதிரி பின்னிக் கொண்டான். போதாக் குறைக்கு சோடா பாட்டல்களை எடுத்து வீசும் ‘சோமாறிகளின்’ பேரன்பும் இவரைப் பிடித்துக் கொண்டது. இந்தப் பிடியில், இரண்டு வீடுகளும், போடு போடென்று ஓடிக் கொண்டிருந்த எண்ணெய் கடையும், எண்ணூர் நிலமும், இவர் பிடியை விட்டு, மீண்டும் பிடி கொடுக்காத அளவுக்குப் போய்விட்டன. பெருமாள், தெருவுக்கு வந்தார்.

சொக்கலிங்கமும், எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவ்வப்போது, தங்கையிடம், மனைவிக்குத் தெரிந்தும், தெரியாமலும், பணம் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தை, பெருமாள், மனைவியை உதைத்துப் போட்டுவிட்டு, எடுத்துக் கொண்டு போகிற செய்தி, அவருக்குக் கேளாமலே போய்ச் சேர்ந்தது. தங்கை அடிபடக்கூடாது என்கிற ஒரு காரணத்தோடு, இன்னும் பல காரணங்களும் சேர, அவர் பணத்தை நிறுத்தினாரே தவிர பாசத்தை நிறுத்தவில்லை.

One comment

  • facepalm nalla manathullavargale aduthavar pechai kettu thadam maari pogiraargal.paarvathi maruvatharkku ketkka venduma.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.