அந்தப் பாசத்திற்கும் ஒரு சமயம் கண்டம் வந்தது. தங்கையின் வீட்டுக்குப் போயிருந்த அவரை, அப்போது குடித்துவிட்டு வந்த பெருமாள், “ஏண்டா... சோமாறி... என் பெண்டாட்டிக்கிட்ட வத்தி வைக்கவாடா வந்தே...” என்று சொல்லி, கையைக் காலை ஆட்டியபோது, சொக்கலிங்கம், மச்சானின் அடிகளுக்காக அங்கே அப்போது ஒதுங்கிக் கொண்டது போல், தங்கையின் குடும்பத்திடம் இருந்து, கிட்டத்தட்ட அடியோடு ஒதுங்கிக் கொண்டார். போதாக்குறைக்கு, பார்வதியின் அண்ணன்கள், “‘கழுதை கூட சேர்ந்தால், கவரிமானும் எதையோ தின்னும்’ என்கிறது மாதிரி ஆயிடப் போகுது. பெருமாள் உங்களை மாதிரி ஆக முடியாட்டாலும் கவலை இல்லை. நீங்க அவனை மாதிரி ஆகிடக்கூடாது பாருங்க. அதனால...” என்று மேற்கொண்டு பேசாமல் விட்ட போது, சொக்கலிங்கம், “அதனால” என்பதற்கு உண்டான அர்த்தங்களைப் புரிந்து கொண்டார். பார்வதியும் ஒத்துப் பாடினாள். சொக்கலிங்கம், தங்கை வீட்டை எட்டிப் பார்ப்பதே இல்லை. உயிருக்குயிராய் நேசித்த தன் தங்கையை, தன் உயிருக்குள்ளேயே சங்கமித்துக் கொண்டவர் போல், அவளிடமும், அவர் பாராமுகமாய் இருந்தார். செல்லம்மா தான் எப்போதாவது, அண்ணனின் நினைவு வரும்போதெல்லாம், அவர் வீட்டுக்குப் போவாள். அதுவும், அவளுக்கு குழந்தை குட்டிகள் அதிகமாக அதிகமாக, அவள் வரவும் குறைந்து கொண்டே வந்தது.
பத்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கையில், சொக்கலிங்கம் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பெருமாள், பிள்ளைகளைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ‘துள்ளி’ விளையாட பிள்ளை பிறக்காததில், சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். சிலர், அவருக்கு மறுமண யோசனையைத் தெரிவித்தார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட, அப்போதைய இளம்பெண்ணான பார்வதி, தூக்கில் தொங்குவதாகச் சபதம் போட்டதோடு நில்லாமல் ஒரு கயிற்றில் - அவள் தொங்கினால் அறுந்து விழக்கூடிய ஒரு சின்னஞ்சிறு கயிற்றை கையில் வைத்துக் கொண்டாள்.
அவள் அண்ணன்மார்கள், “அடிப்பேன் பிடிப்பேன்” என்றார்கள். இவ்வளவுக்கும், அவருக்கு, மறுமண ஆசை ஏற்படவே இல்லை. யாரோ சொன்னார்கள். இவரும் யாருக்கோ என்பது மாதிரி கேட்டார். இவ்வளவுதான்.
டாக்டர்கள் தனது கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதால் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டாலும், பார்வதி அசரவில்லை. ஓர் ஆயுர்வேத டாக்டரின் யோசனைப்படி, கணவனுக்கு, பாயாசத்தில், பச்சை முட்டையை உடைத்தும், பாதாம் பருப்பைப் பாலில் கலந்தும் கொடுத்தாள். விளைவு, சொக்கலிங்கம் வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கினார். இந்த விவகாரங்களை ஜன்னல்களை எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்ட பார்வதி, கணவனுக்கு,