"சரி சரி, நீ போய் வா. எல்லாவற்றையும் நான் பார்த்துக்கறேன். நேரமாகிறது" என்றார் கோபாலகிருஷ்ணன். "இப்போ இங்கே மெய்யூர் ஜமீந்தார், பொய்யூர் மிட்டாதார், காட்டூர் பண்ணையார் எல்லாரும் வரப் போறாங்க, முக்கியமான கேஸ் விஷயமா, நீ போகலாம்." குடியானவன் எழுந்து, "நம்ம கேஸும் முக்கியம்தாங்க. அலட்சியமா இருந்துடாதீங்க" என்றான்.
"அலட்சியமா இருப்பதா? சேச்சே! உன் கேஸிலே கோர்ட்டே கிடுகிடுத்துப் போகிற மாதிரி பேசப் போகிறேன்.
"எல்லாம் இங்கிலீஷிலேயே பேசுங்க.... தமிழிலே கிமிழிலே பேசிடாதீங்க...."
"ஆகட்டும், போ!"
குடியானவன் சுவரில் கோட் ஸ்டாண்டில் இரண்டு தலைப் பாகைகள் மாட்டியிருப்பதைப் பார்த்தான். ஒன்று சாதாரணத் தலைப்பாகை; ஒன்று சரிகைத் தலைப்பாகை.
"ஏனுங்க, நம்ம கேஸுக்கு இந்த இரண்டு தலைப்பாகைகளிலே எதை வைச்சுக்கிட்டு வருவீங்க?"
"சாதா தலைப்பாகையைத்தான் வைச்சுப்பேன். ரொம்ப ஸ்பெஷல் கேஸுக்குத்தான் சரிகைத் தலைப்பாகை. அதை வைச்சுண்டு வந்து பேசணும்னா பீஸ் இன்னும் ஐம்பது ரூபாய் அதிகமாகும்!"
"என்னங்க. இப்படி ஒரே போடாகப் போடறீங்க? இருபத்தைஞ்சுகூடத் தரேன். வைச்சுக்குங்க!"
உள்ளே பாத்திரங்களின் சத்தம் இன்னும் அதிகமாகியது.
கலவரம் அடைந்த கோபாலகிருஷ்ணன், "சரி, சரி; உனக்காக ஃபீஸ் அதிகம் வாங்கா மலே சரிகைத் தலைப்பாய் வைச்சுண்டு வரேன். நீ கிளம்பு, சீக்கிரம்" என்றார்.
"சரிங்க, போய் வரேன். ஆனால் மறந்து போய்த் தலைப்பாகையை மாத்திடாதீங்க!"