"வாடாப்பா, நுறு ஆயுசு" என்றார் கோபாலகிருஷ்ணன்.
"தந்தையே! அன்னையே! இந்த அறியாச் சிறுவனைப் பற்றித் தாங்கள் யாது இயம்பிக் கொண்டிருந்தீர்கள்? யான் அறிந்து கொள்ளலாமா?"
"இது என்னடா, நாடக டயலாக்கா?"
"ஆம், எந்தையே, அடியேனுக்குத் தாங்கள் இடும் கட்டளை யாது? பகருங்கள்!"
"ஒண்ணும் பெரிய விஷயமில்லே! உன் அம்மாவைத் திருப்திப்படுத்த நீ ஒரே ஒரு கல்யாணம் பண்ணிக்கனும். அவ்வளவுதான்."
"நாடகம் முடியட்டும். அப்புறம்தான் திருமணம் பற்றிய சிந்தனை!" என்றான் கல்யாணம்.
"ஏண்டா, இன்றைக்குக் கோர்ட்டுக்காவது வருவாயா?"
"எல்லாம் நாடகம் முடிந்த பிற்பாடுதான்."
"ஏண்ட, நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?"
"கதையா? சொல்லுங்கோ. வேறு வழியில்லை. கேட்டுக்கறேன்."
"நம்ம பக்கம் பட்டிக்காட்டான் ஒருவன் ஹைகோர்டிலே அப்பீல் போட்டுவிட்டு அதற்காக ரயிலேறினானாம். ரயிலில் நிறைய இடம் இருந்ததாம்...."
"பொய்! பொய்! ரயிலிலாவது இடம் இருக்கவாவது?"
"இருந்தது என்று வைத்துக் கொள்ளேன். பட்டிக்காட்டான் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு பயணி, 'ஏம்பா, நிற்கிறாய்? இடம் இருக்கே, உட்காருவது தானே' என்றான். அதற்கு அந்தப் பட்டிக் காட்டான், 'நாளைக்குப் பட்டணத்திலே கேஸு. அது முடியும் வரை