உட்கார மாட்டேன்' என்றானாம்!"
"அவன் வைராக்கியத்துக்குத் திருடப் போகணும். நீங்களாயிருந்தால் இடம்தான் இருக்கேன்னு சப்ளிக்க உட்கார்ந்துடுவேள்" என்றாள் செல்லம்.
பிறகு கல்யாணத்தைப் பார்த்து, "நாடகம் என்னிக்கிடா? எங்களை அழைச்சுண்டு போவியோ இல்லியோ?" என்றாள்.
"அழைத்துப் போவதா? சரிதான்! உங்களுக்கு வர வழி தெரியாதா? ஐந்து, பத்து ரூபாய் டிக்கெட்டெல்லாம் விற்றுப் போச்சு. பதினைந்தோ இருபத்தைந்தோ கொடுத்து நாடகம் பாருங்கள். இது ஒரு நல்ல காரியத்துக்கு நிதி திரட்ட நடக்கும் நாடகம்; தெரியும் இல்லையா?"
"ஏங்க, போவோமா? ஐம்பது ரூபாய் செலவாகுமேன்னு யோசிக்காதீங்க. கல்யாணம் நடிப்பதைப் பார்க்க வேணாமா?"
"பேஷாய்ப் போய்ப் பார்; உன் பிள்ளை நடிப்பதை. நான் வரவில்லை."
"ஏன்? ஏன்?" என்று தாய், மகன் இருவரும் ஏககாலத்தில் கேட்டனர்.
"பின்னே என்ன? எனக்கும் ஒரு வேஷம் கொடுடான்னு ஆன மட்டும் கேட்டுப் பார்த்தேன். மாட்டேன்னுட்டான். எனக்கு நடிப்பு வராதாம்! நேற்றுப் பிறந்த இந்தப் பசங்களுக்குத்தான் வருமாம்!"
"அந்த வரைக்கும் கல்யாணம் புத்திசாலிதான்" என்று கூறிச் செல்லம் மகனுக்குத் திருஷ்டிகழித்தாள்.
"நீதான் மெச்சிக்கணும்! பிள்ளையாம் பிள்ளை, அணிப்பிள்ளை! தென்னம்பிள்ளை! எனக்கு நடிக்கத் தெரியாதாம்! இவன் கண்டான்! நான் மட்டும் மேடையேறி மனோஹரனா நடிக்க ஆரம்பித்தால்...."
"கொட்டகையே காலியா யிருக்கும்" என்று முடித்தான் கல்யாணம்.