குடியானவன் போனதும் ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் கல்யாணி ராகத்தைச் சித்திரவதை செய்து கொண்டே ஒரு கேஸ்கட்டை எடுத்து முடிச்சை அவிழ்க்க ஆரம்பித்தார்.
செல்லம்மாள் கரண்டிக் கரத்துடன் உள்ளே நுழைந்தவள் சற்று நேரம் அசையாமல் நின்றாள். கோபாலகிருஷ்ணன் தலையை நிமிர்த்தவில்லை.
"நான் என்ன மரமா? தூணா? மனுஷியாத் தென்படலையா?" என்றாள் செல்லம். "உங்க பேரில் தப்பில்லை. உங்களைத் தேடி வந்து எங்கப்பா என்னைக் கொடுத்தாரே அவரைச் சொல்லணும்!"
"ஓ! நீங்களா, வாங்கோ அம்மா, வாங்கோ. உட்காருங்கோ. என்ன வழக்கு. என்ன நடந்ததுன்னு விவரமா சொன்னால் சட்டப் பாயிண்ட் சாதகமா பாதகமான்னு யோசிக்கலாம்."
"எனக்கு எப்பவும் எதுவும் பாதகம்தான். இந்த வீட்டுக் குடித்தனத்தைச் சமாளிக்க இனிமேல் என்னால் முடியாது. ஐந்து குடும்பங்களும் சேர்ந்து படுத்தற பாட்டைத் தாங்காமல் தவிசுப் பிள்ளை ஓடிப் போயிட்டான். மூன்று நாளைக்கு ஒரு புது வேலைக்காரி தேட வேண்டியிருக்கு."
"அதனாலே ஓடிப் போக முடியாத வேலைக் காரியா ஒருத்தியைத் தேடறே. மகனுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகணுங்க்றே!"
"வருகிறவள் என்னை ஓட ஓட விரட்டாமல் இருந்தால் போதாதாக்கும். நீங்களும் உங்க பிள்ளையும்தான் அந்த ராங்கிக் காரியை எப்படியாவது இந்த வீட்டோடு தருவிச்சுக்கிறதுன்னு திட்டம் போட்டிருக்கேளே!"
"நான் ஒரு திட்டமும் வகுக்கலை செல்லம். கல்யாணம் ஆசைப்படறான்னு தெரியறது. மறுத்துச் சொல்ல எனக்கு மனமில்லை. உன் சம்மதமில்லாமல் நடந்துடுமா என்ன?"
இந்தச் சமயம் பார்த்துக் கல்யாணம் உள்ளே நுழைந்தான்.