உன்னைப் போல் கல்கத்தாவிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவன்தான்!"
"அப்படியா!" என்று அளவற்ற ஆச்சரியத்துடன் வினவினாள் பவானி.
"ஆமாம்" என்றார் கோவர்த்தனன்.
"இன்னும் கேள்! என் தகப்பனார் பெயரைக்கூறினால் மேலும் ஆச்சரியப்படுவாய் நீ!"
"கருணாகரனா?"
"கரெக்ட்! என் தம்பி உமாகாந்தன் தான் உன் கல்லூரிக் கதாலன்!"
பவானியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. "அவர் தமக்கு ஓர் அண்ணன் இருப்பதாக என்னிடம் சொல்லவல்லையே?"
"தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவன் எங்களிடம் கூறவே இல்லையே? உங்கள் இருவர் இடையிலும் கல்லூரியில் ஏற்பட்ட சிநேகம் காதலாக மலர்ந்தது என்பதற்கு முதல் அடையாளம், நீ எங்கள் தகப்பனாரைத் தேடிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாயே, அப்போதுதான் கிடைத்தது!"
"நான் கருணாகரனைத் தேடி வந்தது உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் பவானி வியப்புடன்.
"அப்போது தெரியாது. அச்சமயம் நான் வெளியே போயிருந்தேன். திரும்பி வந்ததும் என் தகப்பனார் சொன்னார்."
"என்ன சொன்னார்?"
"'நல்லவன் போல் நடித்து நம்மையெல்லாம் ஏமாற்றியது போதாதென்று பாவம், இந்த இளம் பெண்ணை வேறு உமாகாந்த் ஏமாற்றியிருக்கிறான்' என்று அனுதாபப்பட்டார்."
"என்னது! ஏமாற்றுவதா?"