அப்புறம் உன் வீட்டு வேலைக்காரன் ஒருவனை என் கைக்குள் போட்டுக் கொண்டு அவ்வப்போது அங்கு நடப்பனவற்றை அறிந்தேன். தண்டனைக் காலம் முடிந்ததும் உமாகாந்த் நேரே உன்னைப் பார்க்கத்தான் வருவான் என்று உணர்ந்திருந்தேன். அச்சமயம் என் தம்பியால் உனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு இருந்தது. உன்னைக் காப்பாற்ற வேண்டிய கடமையை நானே ஏற்றுக் கொண்டேன். நீ பி.எல். தேறியதும் தொழில் நடத்த இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தாய். ஜப்பான்காரன் வரும் போது நீ கல்கத்தாவில் இருக்க வேண்டாம் என்று உன் பெற்றோர் கருதியதுதான் முக்கிய காரணம் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நானும் அங்கிருந்து புறப்பட்டு வந்து இங்கே எனக்கு உத்தியோகம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டேன். உனக்காக எவ்வளவு சிரமப்படுகிறேன், பார்த்தாயா?
"இங்கே வந்த பிறகு தொழில் முறையிலும் சமூக சேவா சங்கத்திலும் அடிக்கடி நாம் நெருங்கிப் பழக நேர்ந்தது. என் கடமை உணர்வு நாளாவட்டத்தில் காதலாகவும் அரும்பி விட்டது. மலர்ந்து மணம் பரப்பவும் அந்தக் காதல் காத்திருக்கிறது. ஆனால் பவானி என்ற வன தேவதை அந்த அரும்பு மலர அனுமதி தர மறுக்கிறாள்! என்ன செய்ய?" - ஒரு சோகமான நெடுமூச்சுடன் தாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் சரிந்து சாய்ந்தார் கோவர்த்தனன்.
பவானியின் நெஞ்சம் கோவர்த்தனனுக்காக நெகிழ்ந்து கொடுத்தது. மாடியில் இருக்கும் காதலனை எண்ணி அவள் மனம் பதை பதைத்தது. என்ன செய்வது, என்ன பேசுவது என்று புரியாமல் தயங்கினாள்.
கடைசியில், "இவ்வளவு தூரம் என்னிடம் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதற்காக நான் உங்களுக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி சொல் கிறேன், வந்தனம் தெரிவிக்கிறேன்! திரும்பத் திரும்ப இதுதானா? இவற்றை இவ்வளவு சுலபமாகச் சொல்கிற உன் வாயில் காதலிக்கிறேன் என்ற சொல் மட்டும் நுழையமாட்டேன் என்கிறதே, ஏன்?" - எரிச்சலும் ஆத்திரமுமாகக் கேட்டார் கோவர்த்தனன். பவானிக்கு அழுகையே வந்துவிடும் போலாகி விட்டது. அவரை எப்படியாவது அனுப்பி வைத்தால் போதும் என்கிற நிலையில்ல், "இந்தக் களேபரமெல்லாம் ஒருவாரு அடங்கட்டும். தப்பியோடிய கைதி மறுபடியும் சிறைப்படட்டும். அப்புறம் நம்மைப் பற்றி யோசிக்கலாம்" என்றாள்.