"துப்பாக்கித் தோட்டா உராய்ந்து சென்ற காயத்துடனேயே அவன் தட்டுத் தடுமாறி ஓடியிருக்கிறான். ஏலமலைக் காட்டுப் பகுதிக்குள் புகுந்து இவர்களுக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். இதுகள் இரண்டும் கையைப் பிசைந்து கொண்டு இன்று காலை என்னிடம் வந்து நிற்கின்றன. நன்றாக 'டோஸ்' கொடுத்து அனுப்பினேன்."
"ஏன், தம்பி தப்பி விட்டானே என்று சற்று சந்தோஷப்படக் கூடாதா?"
"அது எப்படி முடியும், பவானி? ஒரு வக்கீலாக இருந்து கொண்டு இப்படிக் கேட்கிறாயே? சட்டத்துக்குமுன் எல்லோரும் சமம் அல்லவா? என் தம்பி என்பதால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டதற்காக நான் சந்தோஷப்பட முடியுமா?"
"அப்புறம்?"
"அப்புறமென்ன? அவனுக்குப் பலமாக அடிபட்டிருக்கிறது; அதிக தூரம் போக முடியாது; வைத்திய உதவி இல்லாமல் அதிக நாட்கள் உயிர் தரிக்க முடியாது. எனவே இந்த வட்டாரத்திலேயே யாரிடமாவது
'தஞ்சம்' என்று வந்து சரணடைய் வேண்டியதுதான். எந்த டாக்டர் அவனைப் பரிசோதித்தாலும் குண்டு பட்ட காயம் என்று உடனே புரிந்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவார். சீக்கிரமே அவன் அகப்பட்டுக் கொள்வான். ஆனால் அடிபட்ட புலி ஆபத்தானதும்கூட. போகிற பிராணன் எப்படி இருந்தாலும் போகப் போகிறது, பின்னோடு இன்னும் நாலு பேரை எமலோகப் பட்டணத்துக்கு அழைத்துப் போகலாம் என்று பழி வாங்கும் உணர்ச்சி எழும். அதனால்தான் முக்கியமாக உன்னை எச்சரிக்க வந்தேன். அவன் இங்கே வந்தாலும் வரலாம். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யட்டுமா?" என்ற கோவர்த்தனன் பவானியை மறுபடியும் கூர்ந்து கவனித்தார்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தோட்டக்காரன், சமையல்காரன் எல்லாரும் இருக்கிறார்கள். மாமா குணசேகரனும் இருக்கிறார். எனக்கென்ன கவலை, அல்லது பயம்? ஒரு ஃபோன் செய்தால் நீங்களும் ஓடி வரப் போகிறீர்கள்!"