கேஸ் நடந்த போது கவனித்த ஓரிரு பத்திரிகை நிருபர்களை என் அப்பா விலைக்கு வாங்கிவிட்டார்!"
"எல்லாவற்றுக்கும் சரியான பதிலைத் தயாராக வைத்திருக்கிறீர்கள்!" என்றாள் பவானி.
"உண்மை எப்போதும் தெளிவானது. குழப்பம் இல்லாதது. ஒரு வக்கீலான உனக்குத் தெரியாததா?" என்றார் கோவர்த்தனன். "பவானி! உமாகாந்திடம் நீ இனியும் ஏமாந்து போகக் கூடாது. சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த ஒருவனுக்கு என்றுமே நிம்மதியில்லை. அவனால் எங்கும் வேலை தேடிக் கொள்ளவோ, உத்தியோகம் பார்க்கவோ முடியாது. சுதந்திரமாக நாலு பேர் அறியவளைய வருவது அவனுக்குச் சாத்தியமில்லை. யாராவது அவனுக்கு அடைக்கலம் தந்து அவனை மறைத்து வைத்து வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தால்தான் உண்டு. இதை எதிர்பார்த்து உமாகாந்தன் உன்னிடம் வருவான். சிறையிலிருந்து தப்பியதும் அவன் நேரே கல்கத்தா சென்று உன்னைப் பற்றி விசாரித்திருப்பான். நீ இங்கே சுயமாகச் சம்பாதிக்கிறாய் என்று அறிந்ததும் அது தனக்கு அனுகூலமாயிற்று என்ற எண்ணத்துடன் இந்தப் பக்கம் வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.கள் சதா பின் துரத்தியதால் இதுவரை உன்னை அவனால் அணுக முடியாமல் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியும் அவன் உன்னுடன் தொடர்பு கொள்ள முயல்வான் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ அவனை மறைத்து வைத்துக் காப்பாற்ற மறுத்தால் அவனுக்குக் கோபம் வரும். அந்தக் கோபத்தில் அவன் என்ன செய்வான், எப்படி நடந்து கொள்வான் என்றே சொல்ல முடியாது! அதே நேரத்தில் ஒரு பாங்குக் கொள்ளைக்காரன் உன்னை மிரட்டிப் பணிய வைக்கவும் நீ அனுமதிக்க முடியாது. உன் நிலைமை தர்ம சங்கடமானதுதான். ஜாக்கிரதை!"
"என்னை எச்சரிப்பதற்காகவும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவுமேதான் நீங்கள் கல்கத்தாவிலிருந்து என்னைப் பின் தொடர்ந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தீர்களா என்ன? நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அப்படியல்லவா நினைக்கத் தோன்றுகிறது?"
"அதுவும் வாஸ்தவம்தான், பவானி. நீ என் தகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போனாய், உமாகாந்தைப் பற்றி அன்புடன் விசாரித்தாய் என்பதை அறிந்ததிலிருந்து நீ உமாகாந்தின் காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். தகாத ஒருவன் மீது காதல் கொண்ட உன்னிடம் எனக்கு அனுதாபம் பொங்கியது. உன்னைப் பற்றி உன் கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்துத் தெரிந்து கொண்டேன்.